கங்கை கரையில் ஒதுங்கிய உடல்களை உண்ணும் நாய்கள்.. வைரலாகும் பழைய புகைப்படங்கள் !
பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
” மாட்டிறைச்சிக்கு மனிதனை கொன்ற நாட்டில் மனிதனை நாய்கள் உண்ணும் அவலம் ” எனும் நிலைத்தகவல் உடன் ஆற்றின் கரையில் இருக்கும் இறந்தவர்களின் உடலை நாய்கள் கடிக்கும் இரு புகைப்படங்கள் சமூக வளைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
தற்போது நம் இந்தியாவின் நிலைமை மாட்டிறைச்சிக்கு மனிதனை கொன்ற நாட்டில் மனிதனை நாய்கள் உண்ணும் அவலம் வாழ்க மோடி ஆட்சி தூ தூ தூ #ModiKaVaccineDisaster pic.twitter.com/O0Bz8mnWIe
— (@Ramhaasan7) May 17, 2021
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் புகைப்படங்களில், ஆற்றின் படித்துறையில் காணப்படும் உடலை நாய் கடிக்கும்படி இருக்கும் படத்தில் “alamy ” எனும் புகைப்படம் விற்பனைத் தளத்தின் பெயர் இடம்பெற்று இருக்கிறது. அதை வைத்து தேடுகையில், alamy தளத்தில் வைரல் செய்யப்படும் புகைப்படம் இடம்பெற்றதை கண்டறிய முடிந்தது.
ஆனால், அந்த புகைப்படம் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் 2008ம் ஆண்டு எடுத்ததாக புகைப்படத்தின் விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆற்றின் கரையில் காணப்படும் உடலை நாய் கடிக்கும் மற்றொரு புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், புகைப்பட விற்பனை தளமான Gettyimages இணையதளத்தில் ” An unidentified dead body in Varanasi ” எனும் தலைப்பில் இப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இது 2012-ல் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பீகார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் பாயும் கங்கை நதியில் இறந்தவர்களின் உடல்கள் மிதந்து வந்த சம்பவம் தொடங்கி உத்தரப் பிரதேச மாநிலத்தில் கங்கை நதிக்கரை மணலில் இறந்தவர்களின் உடல்களை புதைத்து செல்லும் நிலை குறித்து தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஆற்றில் மிதந்து வரும் மற்றும் ஆற்றின் மணலில் புதைத்து விட்டு சென்ற உடல்களை நாய்கள் கடித்து இழுத்து செல்லும் சம்பவங்கள் தொடர்பாக செய்திகள், வீடியோக்கள் வைரலாகி இருக்கின்றன. ஆனால், சமீபத்திய சம்பவங்களுடன் தொடர்புப்படுத்தி பழைய புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.
முடிவு :
நம் தேடலில், உத்தரப் பிரதேசத்தில் இறந்த உடல்களை நாய்கள் உண்பதாக வைரலாகும் இவ்விரு புகைப்படங்களும் 8 மற்றும் 13 ஆண்டுகளுக்கு முன்பாக வாரணாசி பகுதியில் எடுக்கப்பட்டவை என அறிய முடிகிறது.