ஓடும் இரயிலின் முன் கேஸ் சிலிண்டரை வீசிய ஜிகாதிகள் எனத் தவறாகப் பரப்பப்படும் பழைய வீடியோ !

பரவிய செய்தி

ஹல்த்வானி அருகே ரயில் வந்தபோது தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டர் சிக்கியது. சிலர் ரயில்வே அமைப்பு மற்றும் பாதுகாப்பை நாசப்படுத்த கடுமையாக முயற்சி செய்கிறார்கள், பின்னர் அவர்கள் அமைச்சரைக் குறிவைத்து ராஜினாமா செய்யவும் கோருகிறார்கள். அப்பாவி மக்களின் உயிரைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், மோடி அரசை எதிர்கொள்வதற்காக எதிர்க்கட்சிகள் இப்போது பல்வேறு துறைகளின் தனிப்பட்ட அமைச்சர்களை குறிவைத்து கடுமையாக தாக்குவதைக் காண முடிகிறது.

Twitter Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

கடந்த ஜூன் 02 அன்று ஒடிசா மாநிலம் பாலசோரில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்பட 3 இரயில்கள் ஒன்றுக்கொன்று மோதிய விபத்தில் 275 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையே சோகத்தில் தள்ளியது. இந்த விபத்து நடந்த மூன்று நாட்களுக்கு பின்னர் மீண்டும் அந்த மாநிலத்தின் பர்கர் மாவட்டத்தில் சிமெண்ட ஆலைக்கு சுண்ணாம்புக் கல் ஏற்றிச் சென்ற சரக்கு இரயில் ஒன்று தடம் புரண்டது.

அதனை தொடர்ந்து நேற்று (ஜூன் 07) மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் பகுதியில் எரிவாயு ஏற்றி சென்ற சரக்கு இரயில் ஒன்றும் மீண்டும் தடம் புரண்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் பெரிய விபத்துகள் எதுவும் ஏற்படவில்லை.

இந்நிலையில், தற்போது ஓடும் இரயிலின் முன் கேஸ் சிலிண்டர் வீசிய ஜிஹாதிகள் என்று கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் அப்பதிவுகளில் தற்போது தேர்தல் வரவுள்ள சூழ்நிலையில் நாட்டில் நிகழும் இரயில் விபத்துகளின் பின்னணியில் ஏதோ சதி உள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Archive Link

உண்மை என்ன ?

பரவி வரும் வீடியோவில் உள்ள கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், हम लोग We The People என்ற ட்விட்டர் பயனர் கடந்த ஜூன் 5 அன்று பதிவிட்ட பதிவிற்கு, ​​‘rpfnerizn‘ (ரயில்வே பாதுகாப்புப் படை, வடகிழக்கு இரயில்வே, இஸ்ஸாத்நகர் பிரிவு) என்ற பயனர் பதில் ட்வீட் செய்துள்ளதைக் காண முடிந்தது.

Archive Link

அதை மொழிபெயர்ப்பு செய்ததில், “ரெசுப் சௌகி ஹல்த்வானியின் Uni 0 கூறியபடி, அந்த வீடியோ பதிவிடப்பட்ட தேதி- 05.07.22 (இது பழைய காணொளி), இது தொடர்பாக கங்காராம் மீது இரயில்வேயின் MoS-131/22ன் சட்டத்தின் பிரிவு 174, 153 படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளதைக் காண முடிந்தது.

Archive Link

மேலும் இதுகுறித்து, காத்கோடம் ரயில்வே நிலையத்தின் RPF இன்ஸ்பெக்டர் Chandrapal Singh தனது ட்விட்டர் பக்கத்தில், “IPF/RPF/ காத்கோடம் NER என குறிப்பிட்டு, ரயிலுக்கு அடியில் சிலிண்டர் வைக்கப்பட்டதாக வைரலான வீடியோ 5.7.2022 என்ற தேதிக்குரியது, இதில் கங்காராம் மீது ரயில்வே சட்டம் பிரிவு 153, 174 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் இது சம்பந்தமான புகார் கடிதமும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது, இந்த விவகாரம் இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளதைக் காண முடிந்தது.

மேலும் தேடுகையில், இதுதொடர்பாக நைனிடால் காவல்துறையின் ஃபேஸ்புக் பக்கத்தில் வைரலான வீடியோ தொடர்பான அறிக்கையில், வைரலான வீடியோவில் இருந்த அதேக் காட்சியைக் கொண்டுள்ளதைக் காண முடிந்தது. ஹிந்தியில் உள்ள அந்த அறிக்கையை மொழி பெயர்த்து பார்த்ததில், “ஹல்த்வானி பகுதியில் ஓடும் ரயிலின் தண்டவாளத்தில் ஒரு நபர் சிலிண்டரை வீசுவது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

மேற்படி வைரலான காணொளியை ஆய்வு செய்ததில் அந்த சம்பவம் ஒரு வருடத்திற்கு முன்னரே 2022 ஜூலை 05 அன்று பதிவு செய்யப்பட்டது என்பதையும், சம்பவத்தன்றே சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை இரயில்வே படையினர் கைது செய்து தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இவ்வாறு காணொளியை வெளியிடுவது சாமானிய மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும். எந்தவொரு செய்தியையும் அதன் உண்மைத்தன்மையை சரிபார்க்காமல் பகிர வேண்டாம் என்று நைனிடால் காவல்துறை அனைவரையும் கேட்டுக்கொள்கிறது.” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஒடிசாவில் விபத்து நடந்த இரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர் பெயர் முகமது ஷெரீப் எனப் பரப்பப்படும் வதந்தி !

மேலும் படிக்க: சிறுவர்கள் மூலம் தண்டவாளத்தில் கற்களை அடுக்கி இரயிலை கவிழ்க்க சதி எனப் பரப்பப்படும் வதந்தி !

முடிவு :

நம் தேடலில், ஓடும் இரயிலின் முன் கேஸ் சிலிண்டர் வீசப்பட்டதாகப் பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதல்ல என்பதையும், இது 2022 ஜூலை 05 அன்று எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதையும் அறிய முடிகிறது.

மேலும் இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர் முஸ்லீம் என்று கூறி வகுப்பவாத பிரிவினையை ஏற்படுத்த சிலர் தவறான தகவல்களுடன் பகிர்ந்துள்ளனர். அந்த சம்பவத்தில் கைதானவரின் பெயர் கங்காராம் என்பதையும் அறிய முடிகிறது. 

Please complete the required fields.




ஆதாரம்

Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader