14 வயது சிறுவனுக்கு மரண தண்டனை! 70 ஆண்டிற்கு பிறகு நிரபராதி என தீர்ப்பா ?

பரவிய செய்தி
20-ம் நூற்றாண்டில் மிகக் குறைந்த வயதில் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட சிறுவன் தான் ஜார்ஜ். இக்கொடூரமான தண்டனையை ஜார்ஜ் பெறும் போது அவனது வயது 14 தான். 70 வருடங்கள் கழித்து ஜார்ஜ் குற்றவாளி இல்லை என அமெரிக்காவின் தெற்கு கரோலினா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. படத்தில் எலெக்ட்ரிக் ஷாக் மூலம் மரண தண்டனையை நிறைவேற்றுவதை பார்க்கலாம்.
மதிப்பீடு
சுருக்கம்
1944-ல் கொலை வழக்கில் 14 வயதான ஜார்ஜ் ஸ்டின்னி குற்றவாளி என தீர்ப்பு வழங்கி மரண தண்டனை விதித்தது தெற்கு கரோலினா நீதிமன்றம்.
ஆனால், 70 ஆண்டுகளுக்கு பிறகு 2014-ம் ஆண்டில் ஜார்ஜ் நிரபராதி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது என்பது தவறான தகவல்.
விளக்கம்
உலகில் குறைந்த வயதில் மரண தண்டனை பெற்ற சிறுவனின் பெயர் ஜார்ஜ் ஸ்டின்னி. எலெக்ட்ரிக் ஷாக் மூலம் மரண தண்டனையை நிறைவேற்றிய போது அவனுக்கு வயது 14 தான். ஆனால், ஜார்ஜ் இறந்து 70 ஆண்டுகள் பிறகு அவன் நிரபராதி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாக முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவுகள் 2018-ல் வைரலாகி வருகிறது.
ஜார்ஜ் மரண தண்டனை நிகழ்வு உண்மையான தகவலாக இருந்தாலும், அதில் சில மாறுபட்ட மற்றும் தவறான செய்திகள் உடன் இணைத்து பதிவிடப்படுகிறது. அவை யாதென காண்போம்.
கொலை வழக்கு :
1944-ல் மார்ச் 24-ம் தேதி தெற்கு கரோலினாவில் உள்ள Alcolu நகரில் வசித்து வந்த Betty June Binnicker(11) மற்றும் Mary emma Thames(7) ஆகிய இரு சிறுமிகளும் வீடு திரும்பவில்லை. அடுத்தநாள் காலையில் அவர்களது உடல் சாக்கடையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. சிறுமிகளின் மண்டை உடைக்கப்பட்டு கிடந்தனர்.
இந்த வழக்கில் ஜார்ஜ் ஸ்டின்னியை கைது செய்து விசாரணை செய்தனர். நீதிமன்ற விசாரனைக்கு பிறகு குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய அன்றே ஜார்ஜ் ஸ்டின்னிக்கு எலெக்ட்ரிக் ஷாக் மூலம் மரண தண்டனை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஜூன் 16, 1944-ல் 14 வயதான ஜார்ஜ்க்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஜார்ஜ்க்கு தண்டனை வழங்கும் புகைப்படம்:
1944-ல் ஜார்ஜ்க்கு எலெக்ட்ரிக் ஷாக் அளிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என சில படங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிடப்படுகிறது. அவை ஜார்ஜ் உடைய படங்கள் அல்ல.
பரவும் புகைப்படங்கள் மற்றும் செய்திகள் அனைத்தும் 1991-ல் டிவியில் ஜார்ஜ் ஸ்டின்னி கதையை மையப்படுத்தி வெளியான “ Carolina skeletons “ படத்தில் இடம்பெற்ற காட்சிகளில் இருந்து எடுக்கப்பட்டவை. இப்படமானது 1988-ம் ஆண்டு David stout’s ஜார்ஜ் ஸ்டின்னி பெயரில் எழுதிய நாவலில் இருந்த எடுக்கப்பட்டது.
ஜார்ஜ் நிரபராதியா ?
ஜார்ஜ் ஸ்டின்னியின் வழக்கில் மீண்டும் சிறுவனின் உறவினர்கள் மூலம் தெற்கு கரோலினா நீதிமன்றத்தில் பெட்டிசன் போடப்பட்டது. அதற்கு நீண்ட காலம் ஆகியது. இன்றும் 70 வயதை கடந்து இருக்கும் ஜார்ஜ்-ன் உறவினர்கள் அவனை நிரபராதி என்றே கூறுகின்றனர்.
எனினும், வழக்கை மீண்டும் தொடங்குவது சாத்தியமில்லை, சாட்சிகள் உயிருடன் இல்லை மற்றும் சில ஆதாரங்களே உயிர்ப்புடன் உள்ளன என்பதால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
தெற்கு கரோலினா நீதிமன்றம் 2014-ல் ஜார்ஜ் நிரபராதி என தீர்ப்பு வழங்கியதாகக் கூறுவது தவறான தகவல் என்பதே உண்மை. எனினும், சமூக வலைத்தளத்தில் 14 வயது ஜார்ஜ் மரண தண்டனை பற்றி பதிவுகள் தொடர்கிறது.