மறைந்த ஜெர்மன் மருத்துவர் தாமஸ் கொரோனா தடுப்பூசி இனப்படுகொலை எனக் கடிதம் எழுதினாரா ?
பரவிய செய்தி
ஜெர்மனியில் உள்ள கெம்னிட்ஸ் கிளினிக்கின் தலைவர் டாக்டர் தாமஸ் ஜென்ட்ஜெஸ் கோவிட்-19 தடுப்பூசி மூலம் நடக்கும் இனப்படுகொலையின் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை எனக் கூறி தற்கொலை செய்து கொண்டார்.
மதிப்பீடு
விளக்கம்
நவம்பர் 2-ம் தேதி ஜெர்மனியின் கெம்னிட்ஸ் கிளினிக் தலைவர் டாக்டர் தாமஸ் ஜென்ட்ஜெஸ் உயிரிழந்தார். அவரின் இறப்பு தற்கொலை என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜெர்மன் மருத்துவர் டாக்டர் தாமஸ் ஜென்ட்ஜெஸ் இறப்பதற்கு முன்பாக எழுதிய நீண்ட கடிதம் ஒன்றில், கோவிட்-19 தடுப்பூசி மூலம் நடக்கும் இனப்படுகொலையின் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை எனக் குறிப்பிட்டதாக ஓர் தகவல் சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது.
உண்மை என்ன ?
டாக்டர் தாமஸ் ஜென்ட்ஜெஸ் கோவிட்-19 தடுப்பூசி மூலம் நடக்கும் இனப்படுகொலையின் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை எனக் கூறி தற்கொலை செய்து கொண்டதாக Stess News USA இணையதளம் வெளியிட்ட செய்தி இந்தியாவிலும் பகிரப்பட்டு வருகிறது.
இந்த Stess News USA செய்தி, நவம்பர் 13-ம் தேதி வெளியான Tag24 எனும் ஜெர்மானிய இணையதளம் ஒன்றில் வெளியான கட்டுரையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டு இருக்கிறது. ஆனால், Tag24 தளத்தில், டாக்டர் தாமஸ் ஜென்ட்ஜெஸ் உடைய தற்கொலை கடிதம் எனப் பரவும் ஃபார்வர்டு தகவலும், பரவும் தகவல் பொய்யானது என்ற தகவலும் இடம்பெற்று இருக்கிறது.
கெம்னிட்ஸ் மேயரின் செய்தித் தொடர்பாளர் ஸ்வென் ஸ்சுல்ஸ்” டாக்டர் தாமஸ் ஜென்ட்ஜெஸ் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக கடிதம் ஒன்றை எழுதி வைத்ததாக எங்களுக்கே தெரியவில்லை ” என டிபிஏ-விற்கு நவம்பர் 10-ம் தேதி தெரிவித்து இருக்கிறார். இவர் கெம்னிட்ஸ் கிளினிக்கின் மேற்பார்வைக் குழுவின் தலைவராகவும் உள்ளார்.
அதேபோல், கெம்னிட்ஸ் கிளினிக் தலைவரின் இறப்பு சம்பவத்தில் விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை, டாக்டர் தாமஸ் ஜென்ட்ஜெஸ் மரணத்தில் பரவும் கடிதம் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.
டாக்டர் தாமஸ் ஜென்ட்ஜெஸ் இறப்பதற்கு முன்பாக கொரோனா தடுப்பூசி பற்றி கடிதம் எழுதியதாக கூறப்படும் தகவல் அந்நாட்டு சமூக வலைதளங்களிலேயே அதிகம் பரவியது. அந்த கடிதம் எங்கும் வெளியிடப்படவில்லை.
உண்மையில், டாக்டர் தாமஸ் ஜென்ட்ஜெஸ் இறப்பதற்கு முன்பாக கொரோனா தடுப்பூசிக்கு ஆதரவாகவே பேசி இருக்கிறார். ஆகஸ்ட் மாத இறுதியில், ” தடுப்பூசியானது sars-CoV-2ல் இருந்து வரும் தொற்று மற்றும் கடுமையான நோய் அபாயத்தை கணிசமாகக் குறைக்கிறது எனப் பேசி உள்ளார்.
The attribution of the video is wrong. This is doctor Guido Hofmann and here you can see an upload from a year ago. https://t.co/OiuO1jsXS9
Thomas Jendges really committed suicide, but he’s another man, as you can check by some video interviews still available on YouTube.
— Kabyreh Voltaire 🎲 (@Kabyreh) November 18, 2021
இதேபோல், டாக்டர் தாமஸ் ஜென்ட்ஜெஸ் இறப்பதற்கு முன்பாக பேசிய வீடியோ என வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால், அந்த நபர் டாக்டர் கைடோ ஹோப்மேன் எனும் வேறொருவர். அந்த வீடியோ டாக்டர் தாமஸ் ஜென்ட்ஜெஸ் எனத் தவறாக பரப்பப்பட்டு வருகிறது.
முடிவு :
நம் தேடலில், ஜெர்மனியில் உள்ள கெம்னிட்ஸ் கிளினிக்கின் தலைவர் டாக்டர் தாமஸ் ஜென்ட்ஜெஸ் இறப்பதற்கு முன்பாக கோவிட்-19 தடுப்பூசி மூலம் நடக்கும் இனப்படுகொலையின் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை எனக் கடிதம் எழுதியதாக பரப்பப்படும் தகவல் தவறானது என அறிய முடிகிறது.