போனில் குழந்தை கேட்ட பரிசை நேரில் வந்து கொடுத்த அரபு போலீஸ்| எப்போது நடந்தது ?
பரவிய செய்தி
” இதுதான் அரபுநாட்டு போலீஸ். துபாய் சார்ஜா நகரில் ஆறு வயது சிறுமி வீட்டில் இருக்கும் மொபைலை எடுத்து விளையாட்டுத்தனமாக 3 பட்டனை அழுத்தி போன் செய்வதுபோல் காதில் வைத்துள்ளார். ஆனால் குழந்தை சுமையா அழுத்திய நம்பர் துபாய் போலீஸ் கண்ட்ரோலுக்கு சென்றுவிட அவர்கள் போனை அட்டெண்ட் செய்து யார் என்று கேட்டால் ஒரு குழந்தையின் குரல். உடனே நிலைமையை புரிந்து அன்போடு உனது பெயர் என்ன என்று கேட்டதும் சுமையா என்று சொல்ல, உனக்கு என்ன வேண்டும் என்றதும் எனக்கு இப்பவே கிப்ட் வேண்டும் என சொல்லி இருக்கிறாள் சுமையா. அவர்கள் சிரித்துக் கொண்டே போனை கட் செய்து அந்த மொபைல் நம்பர் உள்ள வீட்டை கண்டுபிடித்து அன்பளிப்புகளுடன் சென்றுள்ளனர். வீட்டுக்கு போலீஸ் வந்ததும் சுமையாவின் பெற்றோர் குழப்பமான மனதோடு போலீசை பார்க்க அவர்கள் பயப்பட வேண்டாம் நாங்கள் சுமையாவை பார்க்க வந்துள்ளோம் என்று கூறி கை நிறைய அன்பளிப்புகளை அள்ளிக் கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார்கள் ”
மதிப்பீடு
விளக்கம்
செல்போனில் காவல்துறையிடம் பரிசு கேட்ட குழந்தைக்கு அரபு நாட்டு போலீஸ் நேரில் பரிசு வழங்கிய கதை ஒன்று தமிழ் முகநூல் குழுக்களில் கடந்த இரு நாட்களாக வைரலாகி வருவதை பார்க்க நேர்ந்தது. அது உண்மையா எனத் தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருந்தது.
போலீஸ் வழங்கிய பரிசு பொருளுடன் இருக்கும் குழந்தையின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், Gulfnews இணையதளத்தில் 2018 ஜூன் 16-ம் தேதி ” Girl gets Eid gift wish by calling police hotline ” என்கிற தலைப்பில் குழந்தையின் புகைப்படத்துடன் வெளியான செய்தி கிடைத்தது.
சுமையா அஹ்மத் அல் நக்பி எனும் சிறுமி அரபு எமிரேட்ஸின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கோர் ஃபக்கான் பகுதியின் போலீஸ் கட்டுப்பாடு அறைக்கு தொடர்பு கொண்டு ஏதியா பரிசு (ஈகைத் திருநாள்) கேட்டுள்ளார். அக்குழந்தையின் ஆசை நிறைவேறும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். பின்னர் காவல்துறையில் இருந்து சுமையாவின் வீட்டிற்கு சர்பிரைஸ் ஆக சென்று பரிசு வழங்கி உள்ளனர்.
இது குறித்து கோர் ஃபக்கான் காவல் நிலைய இயக்குனர் லெப்டினன்ட் கேனல் வலீத் காமிஸ் அல் யமஹி ” மகிழ்ச்சியை பரப்ப ” விருப்புவதாக தெரிவித்து இருந்தார். குழந்தைக்கு பரிசு வழங்கிய புகைப்படம் ஷார்ஜா போலீசின் ட்விட்டர் பக்கத்தில் 2018 ஜூன் 15-ம் தேதி வெளியாகி இருக்கிறது.
استجاب مركز شرطة خورفكان الشامل بشرطة الشارقة، لطلب الطفلة سمية أحمد النقبي بعد تداول مقطع فيديو لها وهي تعبر عن أمنيتها بالحصول على عيدية من الشرطة …https://t.co/7hOiEE0YhI pic.twitter.com/IoITY10zya
— شرطة الشارقة (@ShjPolice) June 15, 2018
2018 ஜூன் 15-ம் தேதி ஷார்ஜா போலீசின் ட்விட்டர் பக்கத்தில், பரிசு பெற்ற குழந்தை தன் ஆசை நிறைவேறியது குறித்து பேசிய வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.
— شرطة الشارقة (@ShjPolice) June 15, 2018
2018-ல் ஈகைத் திருநாள் பரிசு கேட்ட சுமையா குழந்தையின் ஆசையை அரபு நாட்டின் கோர் ஃபக்கான் போலீஸ் நிறைவேற்றி உள்ளார்கள். 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.