சவூதியில் 6 பள்ளி மாணவிகளின் தலை வெட்டப்பட்டதா ?| உண்மை என்ன ?
பரவிய செய்தி
ஆண் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய 6 பள்ளி மாணவிகளின் தலையை வெட்ட சவூதி அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
சவூதி அரேபியா நாட்டில் பாத்திமா அல் குவைனி என்ற பள்ளி மாணவி தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தனது வீட்டிலேயே ஏற்பாடு செய்துள்ளார். இந்த விருந்தில் தனது பள்ளி மாணவிகளுடன் சேர்த்து மாணவர்களையும் அழைத்துள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆண்களும், பெண்களும் இணைத்து நடனமாடி உள்ளனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆடுவது பள்ளி மாணவர்களை என்று தெரிந்த பிறகு பக்கத்தில் வீட்டில் வசிப்பவர் சவூதி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மாணவிகளையும், மாணவர்களையும் கைது செய்துள்ளனர். சவூதி சட்டத் திட்டத்தின்படி ஆண்களுடன் நடனமாடிய 6 மாணவிகளின் தலையை வெட்டி எடுக்குமாறு தீர்ப்பு வழங்கியது. இதை நிறைவேற்றும் வகையில் பொது இடத்தில் வைத்து மாணவிகளின் தலையை வெட்டியதாகக் கூறி சில படங்கள் இணையத்திலும், செய்தித்தாள்களிலும் வந்துள்ளன.
இச்சம்பவம் இவ்வருடத்தின் (2017) ஜூன், ஜூலை மாதங்களில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இக்கொடுரச் சம்பவத்திற்காக சவுதி அரசின் மீது மனித உரிமை ஆணையம் மற்றும் பெண்கள் அமைப்புகள் கண்டனங்களையும், போராட்டங்களையும் தொடுத்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், பரவிய செய்திகளில் உண்மை இல்லை.
செப்டம்பர் 2015 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தான் நாட்டில் பொது மக்களின் முன்னிலையில் பெண்ணுக்கும், ஆணுக்கும் 100 கசையடிகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு மாகாணமான கோர் நகரில் ஒரு ஆணும், பெண்ணும் தவறான உறவு வைத்துக் கொண்டதற்காக தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய நாடான ஆப்கானிஸ்தானில் 1996-2001 ஆம் ஆண்டில் இருந்து ஷரியா சட்டத்தின்படி பொது இடத்தில் தண்டனை மற்றும் தூக்கு தண்டனைகள் தாலிபான்களின் கீழ் வழங்கப்படுகிறது.
Youtube video link | archived link
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இருவரும் நீண்ட காலமாக உறவில் இருந்துள்ளனர். ஆனால், தற்போது தான் கைதாகி உள்ளனர். இது பாலியல் குற்றமாகும். எனவே சம்பந்தப்பட்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் மக்களின் முன்னிலையில் 100 கசையடிகள் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். இதை நிறைவேற்றும் விதத்தில் தலைவர்களின் முன்னிலையில் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அரபு நாடுகளில் குற்றங்கள் சிறிதாக இருந்தாலும் தண்டனைகள் மிகக் கடுமையானதாக இருந்து வருகிறது.
இச்சம்பவத்தை தவறாகப் புரிந்துக் கொண்டு சவூதியில் நிகழ்ந்ததாக செய்திகளில் தவறாக வெளியானதால் இணையங்களிலும் பரவியுள்ளது. எனினும், 6 மாணவிகளுக்கு மரணத்தண்டனை வழங்கியதாகக் கூறி எந்தவொரு நம்பந்தகுந்த ஊடகங்களிலும் வெளியாகவில்லை.
இதையறியாமல் பல நாடுகளின் வலைதளங்கள் மற்றும் முகநூல் பக்கங்களில் இச்செய்திகள் வேகமாகப் பரவி வருகிறது. ஆகையால், இச்செய்திகளை பகிர வேண்டாம் என்று மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டியது நமது கடமையாகும்.