மின்மினி பூச்சிகள் போன்று மரங்கள் ஒளிருமா ? ஆய்வுகள் கூறுதென்ன ?
பரவிய செய்தி
டச்சு வடிவமைப்பாளர் தெரு விளக்குகளுக்கு பதிலாக இருளில் மின்னக்கூடிய மரங்களை பயன்படுத்த முயன்று வருகிறார். கடலில் ஒளி வீசும் உயிரினங்களில் (ஜெல்லி ஃபிஸ் போன்ற) இருந்து டி.என்.ஏ மற்றும் தாவரத்தில் இருக்கும் டி.என்.ஏ ஆகியற்றிற்கு இடையே க்ராஸிங் செய்வதில் இருந்து ஒளியை அளிக்கக்கூடியதாக மரங்கள் இருக்கும். இதன் மூலமான கிடைக்கும் ஒளியால் ஆண்டிற்கு மில்லியன் கணக்கில் பணத்தினை சேமிக்க முடியும்.
மதிப்பீடு
சுருக்கம்
MIT ஆராய்ச்சி குழுவைச் சேர்ந்தவர்கள் ஓடையில் வளரும் தாவரத்தில் நானோ துகள்களை செலுத்தி மேற்கொண்ட முயற்சியில் தாவரங்களை ஒளிரச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை காண முடிந்தது. இதற்காக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விளக்கம்
ஃபேண்டஸி திரைப்படங்களில் மரங்கள் எல்லாம் ஒளிர்வது போன்று காட்சியமைக்கப்பட்டு இருப்பதை பலரும் ஆர்வமாய் கண்டு இருப்போம். அதே மின்னும் மரங்களை நிஜத்தில் இருந்தால் எப்படி இருக்கும். அதனை சாத்தியப்படுத்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர் என்றால் நம்ப முடியுமா ?
2017-ல் மின்மினி பூச்சிகள் போன்றவையில் இருந்து ஒளி வீசும் தன்மையான வேதிப்பொருளை இலைகளில் செலுத்தி பிரகாசமான ஒளியை வீசுவதை சாத்தியம் என ஐக்கிய அமெரிக்காவின் ஆற்றல் துறையால் நிதியுதவி அளிக்கப்பட்டு ஆராய்ச்சியை மேற்கொள்ளும் MIT ஆராய்ச்சி குழுவால் நிரூபிக்கப்பட்டு உள்ளது.
மரங்களை ஒளி வீசுவதாக மாற்ற காரணங்கள் :
இரவில் வெளிச்சத்தை பெற தெரு விளக்குகள் எடுத்துக் கொள்ளும் மின்சாரம் நாளுக்கு நாள் பயன்பாட்டை பொறுத்து அதிகரிக்கிறது. மின்சார தேவையை குறைக்கவும், அதற்கு மாற்று ஆற்றலாக விளக்கினை போன்று பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இம்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Bioluminescence எனும் வேதிப்பொருள் மாற்றங்கள் மின்மினி பூச்சிகள், ஜெல்லி மீன்கள் உள்ளிட்ட உயிரினங்களில் இயற்கையாகவே நிகழ்கின்றன. தாமாகவே ஒளியை உற்பத்தி செய்கின்றன. அதிலும், முக்கியமானது எந்தவித ஆற்றலையும் எடுத்துக் கொள்ள தேவையில்லை.
2013-ம் ஆண்டில் The Glowing Plant Kickstarter $4,80,000 நிதியை பெற்று பூச்சியில் இருந்து தாவரங்களுக்கு மரபணுக்களை மாற்றி ஒளிரச் செய்யும் திட்டத்தை மேற்கொண்டனர். ஆனால், அவர்களின் முயற்சி தோல்வியை சந்தித்தது. ஆனால், தற்போது டென்மார்க்கில் உள்ள MIT குழுவால் நம்பிக்கை பெற்றுள்ளது.
ஓடையில் வளரும் தாவரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் தாவரம் நான்கு மணி நேரம் புத்தகத்தை வாசிக்கும் அளவிற்கு இருந்ததாக கூறப்படுகிறது. எனினும், எதிர்காலத்தில் வரும் தொழில்நுட்ங்கள் மூலம் எளிதாக ஒளிரும் தாவரங்களை உருவாக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
இவ்வாறு உருவாகும் தாவரங்களால் ஏற்படும் எதிர் விளைவுகள் குறித்தும் பார்க்க வேண்டும். புதிதாக ஒளி வீசும் தாவரங்கள் உருவாக்கப்படும் பொழுது மரங்களில் வாழும் பறவை போன்ற பிற உயிரினங்களுக்கும் மற்றும் விதை பரவல் உள்ளிட்ட பிரச்சனைகளும் எழும் என்பது தவிர்க்க முடியாதது.