‘திருப்பதி லட்டு செய்யும் காண்ட்ராக்டர்’ எனத் தவறாகப் பரவும் கோல்டன் பாபா சுதிர் குமாரின் புகைப்படம் !
பரவிய செய்தி
இந்த ஏழை யாருன்னு தெரியுமா? இவர் தான் திருப்பதி கோயிலோட லட்டு காண்ட்ராக்டர்!!!
மதிப்பீடு
விளக்கம்
இவர் தான் திருப்பதி கோவிலின் லட்டு காண்ட்ராக்டர் என்று கூறி தன்னுடைய உடல் முழுவதும் கிலோ கணக்கில் தங்க நகை அணிந்திருக்கும் நபர் ஒருவரின் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
Laddu contractor of Tirupati! Looks like a mobile jewellery shop. pic.twitter.com/yb1YlgEFQs
— DP SATISH (@dp_satish) November 12, 2014
உண்மை என்ன ?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்தப் புகைப்படம் கடந்த 2014-இல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வருகிறது என்பதையும், இந்த புகைப்படத்தில் இருப்பவர் உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த கோல்டன் பாபா என்று அழைக்கப்படுகின்ற “சுதிர் குமார் மக்கர்” என்பதையும் அறிய முடிந்தது.
கடந்த 2014ல் “இந்தியாவின் ‘தங்க’ மனிதர்களை சந்திக்கவும்-பகுதி 3″ என்ற தலைப்பில் Zee News தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவின் விளக்கத்தில் “இந்தியாவின் தங்க மனிதரான சுதிர் குமார் பிட்டுவின் தங்கத்தின் மீதான ஈர்ப்பு அவருக்கு “கோல்டன் பாபா” என்ற புனைப்பெயரைப் பெற்றுத்தந்தது. வாழும் துறவி என்று கூறிக்கொண்டு, கோடிக்கணக்கான மதிப்புள்ள சுமார் 8.5 கிலோ எடையுள்ள தங்க நகைகளை அணிந்து கொண்டுள்ளார்.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் இவர் கடந்த 2020ல் இறந்தது குறித்து 2020 ஜூலை 02 அன்று zeenews india தன்னுடைய இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “பக்தர்களிடையே பிரபலமான பிட்டு லைட் பாஸ் என்ற சொல்லப்படுகின்ற ‘சுதிர் குமார் மக்கர்’ செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.
கோல்டன் பாபா ஹரித்வாரில் பல அகோராக்களுடன் தொடர்புடையவர். இவரைப் பற்றிய பல கதைகள் அவரது பக்தர்களிடையே பிரபலமாக உள்ளன. கோல்டன் பாபா முன்பு ஒரு துணி வியாபாரியாக இருந்ததாகவும், ஆனால் அவர் தனது பாவங்களுக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்று நினைத்ததாகவும் கூறப்படுகிறது. அதனால்தான் சுதிர் மக்கர் சாதாரண மனிதராக இருந்து கோல்டன் பாபா ஆனார். இவர் உ.பி மாநிலம் காஸியாபாத்தைச் சேர்ந்தவர்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
திருப்பதி கோயிலின் லட்டு காண்ட்ராக்டர் யார் என்பது குறித்து தேடியதில், அங்கு செய்யப்படும் திருப்பதி லட்டுகள் அனைத்தும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் மட்டுமே செய்யப்படுகின்றன என்பதையும், வேறு யாருக்கும் இவை ஒப்பந்தம் விடப்படுவதில்லை என்பதையும் உறுதிசெய்ய முடிந்தது.
மேலும் படிக்க: இந்திய ஒற்றுமைப் பயணத்தில் ராகுல் காந்தி சாமியார் வேடமிட்டதாகப் பரப்பப்படும் எடிட் புகைப்படம் !
மேலும் படிக்க: உத்தரகாண்ட் சாமியார் விடுதியில் பெண்களுடன் சிக்கியதாகப் பரவும் இலங்கை புத்த பிக்குவின் வீடியோ !
முடிவு:
நம் தேடலில், திருப்பதி கோயிலின் லட்டு காண்ட்ராக்டர் எனக் கூறி பல வருடங்களாகப் பரவி வரும் புகைப்படம், உத்திரபிரதேசத்தின் ‘கோல்டன் பாபா’ என்று அழைக்கப்படுகின்ற சுதிர் குமார் மக்கர் என்பவருடையது என்பதை அறிய முடிகிறது.