கோமதி மீதான குற்றச்சாட்டு பொய் என ஆய்வில் வெளியாகியதா ?
பரவிய செய்தி
” கோமதி ” ஊக்கமருந்து பயன்படுத்தியதாக அவர்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பொய் என ஆய்வு தகவல்களில் தெரிய வந்துள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து மீது ஊக்கமருந்து சர்ச்சை எழுந்தது. ஏற்கனவே கோமதி தடகள போட்டியில் பயன்படுத்திய ஷூ ஒரு விவாத பொருளாக மாறியது. ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கியதால் கோமதி மாரிமுத்து மீது இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
ஊக்கமருந்து தொடர்பாக பெடரேஷன் கோப்பை மற்றும் ஆசிய தடகளப் போட்டி ஆகிய இரு சோதனைகளிலும் கோமதி தோல்வி அடைந்து இருந்தார். எனினும், இவை ” ஏ ” மாதிரி பிரிவு சோதனை என்றே கூறப்பட்டன. அடுத்ததாக, ” பி ” பிரிவு சோதனையிலும் கோமதி தோல்வி அடைந்தால் 4 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என செய்திகளில் வெளியாகியது.
இந்நிலையில், கோமதி மாரிமுத்து மீதான ஊக்கமருந்து குற்றச்சாட்டில் உண்மை இல்லை. ஆய்வு தகவலில் குற்றச்சாட்டு பொய் என நிரூபிக்கப்பட்டு உள்ளதாக முகநூலில் பரவி வருகிறது.
ஆனால், கோமதியின் ஊக்க மருந்து சோதனை குறித்த முடிவுகள் வெளியாகியதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. கோமதி குறித்த செய்திகள் மே மாதம் வரை மட்டுமே வெளியாகி உள்ளது. தற்பொழுது கோமதியின் ஊக்கமருந்து சோதனை குறித்த செய்திகள் எதுவும் வெளியாகவில்லை.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சீனியர் தடகள போட்டிகள் நடக்க உள்ளது. அதில் கலந்து கொள்பவர்களுக்கு தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு எஜென்ஜி ஆனது ஊக்கமருந்து சோதனை மேற்கொள்ளும் என அத்லடிக் பெடரேஷன் ஆஃப் இந்தியாவின் (ஏஎஃப்ஐ) தலைவர் சுமரிவாலா தெரிவித்து உள்ளதாக ஜூன் 23-ம் தேதி பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தியில் வெளியாகி உள்ளது. அதில், கோமதி மீதான ஊக்கமருந்து விவகாரம் இடம்பெற்று இருந்தது.
ஜூன் 19-ம் தேதி திருச்சியில் செய்தியாளர்களுக்கு கோமதி மாரிமுத்து அளித்த பேட்டியில், ” நான் ஊக்க மருந்தினை எடுக்கவில்லை என்பது 100 சதவீதம் உண்மை. இதற்காக வழக்கு தொடர்ந்து உள்ளேன். ஊக்க மருந்து பயன்படுத்தவில்லை என்பதை நிரூபிப்பேன் ” என தெரிவித்து இருந்தார்.
முடிவு :
கோமதி மீதான ஊக்கமருந்து சோதனை முடிவுகள் வெளியாகி அவரின் மீதான குற்றச்சாட்டு பொய் என நிரூபிக்கப்பட்டதாக பரவும் செய்திக்கு அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. சோதனை முடிவுகள் வெளியாகவில்லை என்பதே உண்மையான தகவல். முடிவுகள் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும்.