வாட்சப்பில் ‘Good Morning’ செய்தி அனுப்பினால் 18% GST விதிக்கப்படவுள்ளதாகப் பரவும் வதந்தி!
பரவிய செய்தி
ஏப்ரல் 1ம் தேதி முதல் ’Good Morning’ செய்தி அனுப்பினால் 18% GST விதிக்கப்படும். – ஒன்றிய அரசு அறிவிப்பு
மதிப்பீடு
விளக்கம்
செல்போனில் ’Good Morning’ செய்தி அனுப்பினால் அடுத்த முறை ரீசார்ஜ் செய்யும் போது உங்களிடம் 18% GST வசூலிக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளதாக இரு ஆடியோ வாட்ஸ் அப்பில் பரப்பப்படுகிறது.
அதில், ”வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் ’Good Morning’ செய்தி அனுப்பினால் அடுத்த முறை ரீசார்ஜ் செய்யும் போது உங்களுக்கு 18% GST விதிக்கப்படும். ஒன்றிய அரசு அறிவித்துவிட்டது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இந்த Good Morning செய்தி அனுப்புவதினால் முக்கிய வேலைகள் எல்லாம் தடைப்படுகிறது என்பதால் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. தயவு செய்து 18% GST-யை மிச்சம் பிடித்துக் கொள்ளுங்கள். செய்தி இந்தியில் வந்துள்ளதால் ஆடியோ வடிவில் சொல்கிறேன்” எனக் கூறப்படுகிறது.
உண்மை என்ன?
இந்த 18% GST குறித்து அரசு தரப்பில் ஏதேனும் அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளதா எனத் தேடியதில், அப்படி எதுவும் வெளியாகவில்லை என்பதை அறிய முடிந்தது.
மேற்கொண்டு இந்த செய்தி இந்தியில் வெளியாகியுள்ளது என ஆடியோவில் கூறியிருப்பதால், இது குறித்த முக்கிய வார்த்தைகளைக் கொண்டு இணையத்தில் தேடினோம். இதே தகவல் 2018ம் ஆண்டும் ஒரு நாளிதழில் வந்த செய்தி எனப் புகைப்படம் பரவியுள்ளது.
இந்த புகைப்படம் பரவியதைத் தொடர்ந்து 2018, மார்ச் 20ம் தேதி ’ABP LIVE’ ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அதில், பரவக் கூடிய இந்த தகவல் 2018, மார்ச் 2ம் தேதி ’நவ்பாரத் டைம்ஸ்’ எனும் நாளிதழில் வெளியானது என்றும் அந்த செய்திக்குக் கீழே ‘கவலைப்பட வேண்டாம், இது ஹோலி’ என இந்தியில் குறிப்பிட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஹோலி பண்டிகையின் போது நையாண்டியாக வெளியிடப்பட்ட ஒரு செய்தி என அச்செய்தி வெளியான பக்கத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ABP LIVE-ல் உள்ள இதே தகவலை ‘Bhaska’ இணையதளத்திலும் காண முடிகிறது. நவ்பாரத் டைம்ஸ் நையாண்டி என குறிப்பிட்டு வெளியிட்ட செய்தியை உண்மை எனப் பரப்பியுள்ளனர். அதே தவறான தகவல் தமிழிலும் தற்போது பரவுகிறது.
முடிவு :
வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் ’Good Morning’ செய்தி அனுப்பினால் 18% GST விதிக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. அது 2018ல் நையாண்டியாக வெளியிடப்பட்ட செய்தி.