வடமாநில தொழிலாளர்கள் குறித்த வீடியோவால் கோபி, சுதாகர் மீது வழக்குப் பதிவு எனப் பரவும் போலிச் செய்தி

பரவிய செய்தி

வடமாநில தொழிலாளர்கள் குறித்து தவறான வீடியோக்களை தயார் செய்து பரப்பியதாக, பிரபல யூடியூபர்கள் கோபி மற்றும் சுதாகர் மீது புகார்

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

மிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டு கொலை செய்யப்படுவதாக வதந்திகள் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பரப்பப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்புக்கு மத்தியில் பரிதாபங்கள் சேனலின் கோபி மற்றும் சுதாகர் வெளியிட்ட வடக்கு ரயில் பாவங்கள் வீடியோ விமர்சனத்துக்கு உள்ளானது.

இந்நிலையில், வடமாநில தொழிலாளர்கள் குறித்து தவறான வீடியோக்களை தயார் செய்து பரப்பியதாக, பிரபல யூடியூபர்கள் கோபி மற்றும் சுதாகர் மீது புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக பாலிமர் செய்தியின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இதை இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

அந்த நியூஸ் கார்டில், ” வடமாநில தொழிலாளர்கள் குறித்து தவறான வீடியோக்களை தயார் செய்து பரப்பியதாக பிரபல யூடியூபர்கள் கோபி மற்றும் சுதாகர் மீது புகார் எழுந்துள்ளது. அவர்களின் யூடியூப் சேனலை தடை செய்ய வேண்டும் என சென்னை கட்டுமான பொறியாளர் சங்கத்தின் தலைவர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் செய்ய மறுக்கும் வேலைகளை குறைந்த சம்பளத்துக்கு வட மாநிலத்தவர்கள் செய்வதையும், முன்பதிவு செய்யப்பட்டுள்ள ரயில் இருக்கைகளை ஆக்கிரமிக்கும் நிகழ்வினையும், கட்டுமான தொழிலுக்கு தாங்கள் செல்கிறோம் என்கிற வகையில் சுதாகரும் கோபியும் வீடியோ ஒன்று காமெடியாக பதிவிட்டிருந்தனர் ” என இடம்பெற்று இருக்கிறது.

இதை அடிப்படையாக வைத்து மாலைமலர், சென்னை மீம்ஸ் உள்ளிட்ட இணையதளங்களில் செய்திகள் வெளியிடப்பட்டு இருக்கிறது.

உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் செய்தி பாலிமர் சேனலின் இன்ஸ்டாகிராம் பதிவு. ஆகையால், பாலிமர் சேனலின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தேடுகையில், வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் கோபி மற்றும் சுதாகர் தொடர்பான செய்தி கார்டு ஏதும் இடம்பெறவில்லை.

இதுகுறித்து பாலிமர் சேனலின் சரவணன் என்பவரைத் தொடர்புக் கொண்டு பேசுகையில், ” இது போலியானது. நாங்கள் வெளியிடவில்லை ” என மறுப்பு தெரிவித்து இருந்தார்.

வடமாநில தொழிலாளர்கள் குறித்து பரப்பப்படும் வதந்திகள் தொடர்பாக மார்ச் 6ம் தேதி சென்னை கட்டுமான பொறியாளர் சங்கத்தின் தலைவர் ஸ்ரீனிவாசன் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் 22 நிமிட வீடியோ பாலிமர் சேனலில் வெளியாகி இருக்கிறது. மேற்காணும் செய்தியாளர் சந்திப்பில், கோபி மற்றும் சுதாகர் பற்றி எந்த புகாரையும் சீனிவாசன் தெரிவிக்கவில்லை.

Facebook link 

மேலும், சென்னை கட்டுமான பொறியாளர் சங்கத்தின் தலைவர் ஸ்ரீனிவாசனிடம் பாலிமர் சேனல் தனியாக பேட்டி ஒன்றை எடுத்து பதிவிட்டு உள்ளனர். அந்த வீடியோவில் வடமாநில தொழிலாளர்களை கிண்டல் செய்து யூடியூப் வீடியோக்களை வெளியிட வேண்டாம், முற்போக்கான விசயங்களில் கவனம் செலுத்தி வீடியோ வெளியிடுமாறு சீனிவாசன் பேசி இருக்கிறார். இதிலும், கோபி, சுதாகர் மீது புகார் அளிப்பதாகக் கூறவில்லை.

இதையடுத்து, பரிதாபங்கள் யூடியூப் சேனலின் சுதாகரை தொடர்பு கொண்டு பேசுகையில், ” அப்படி எந்த புகாரும் அளிக்கவில்லை. அது போலியானச் செய்தி ” எனத் தெரிவித்து இருந்தார்.

முடிவு : 

நம் தேடலில், வடமாநில தொழிலாளர்கள் குறித்து தவறான வீடியோக்களை தயார் செய்து பரப்பியதாக, பிரபல யூடியூபர்கள் கோபி மற்றும் சுதாகர் மீது புகார் எனப் பரப்பப்படும் செய்தி உண்மையல்ல என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




Sanmuga Raja

Sanmuga Raja working as Senior Sub-Editor at YouTurn since May 2017. He holds a Bachelor’s degree in Engineering. His role is to analyze and obtain valid proof for social media and other viral hoaxes, then write articles based on the evidence. In obtaining the proof for claims, he also interviews people to verify the facts.
Back to top button
loader