அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ஆக குறைப்பு அமலுக்கு வந்ததாக போலிச் செய்தி !

பரவிய செய்தி
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது 58 ஆக குறைப்பு அமல்..! 05.01.2022 முதல் அரசாணை வெளியீடு !
மதிப்பீடு
விளக்கம்
தமிழக அரசில் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஓய்வு வயது 58 ஆக குறைக்கப்பட்டது அமலுக்கு வருவதாகவும், ஜனவரி 5-ம் தேதி அதற்கான அரசாணை வெளியிட உள்ளதாகவும் புதிய தலைமுறையின் நியூஸ் கார்டு ஒன்று வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
2020-ல் கொரோனா பாதிப்பால் நிதிச் சிக்கல்களைச் சந்தித்து வந்த நிலையில், அன்றைய முதல்வர் பழனிசாமி தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தி அறிவித்தார். இதன் மூலம், 2020-ல் ஓய்வு பெறுபவர்களுக்கு ஓய்வுக் கால பணப் பயன்களை வழங்குவதை அரசு தவிர்த்தது. மேலும், கடந்த ஆண்டு கொரோனா இரண்டாம் அலையால், ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்படும் என அதிமுக அரசு அறிவித்தது.
அதன்பின் பதவியேற்ற திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60-ல் இருந்து 58 ஆக குறைக்கப்பட உள்ளதாகவும், அதற்கான கோப்புகள் தயாராகி வருவதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக செய்திகளின் வாயிலாக பேசப்பட்டது. ஆனால், அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில்தான், தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது 58 ஆக குறைப்பு அமலுக்கு வருதாக புதியதலைமுறையின் நியூஸ் கார்டு ஒன்று பரவி வருகிறது. ஆனால், ஓய்வு பெறும் வயது குறித்து புதிய தலைமுறை மட்டுமின்றி எந்தவொரு செய்தி நிறுவனமோ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்போ இன்னும் வெளியாகவில்லை. இது எடிட் செய்யப்பட்டது.
இதுகுறித்து, புதியதலைமுறை இணையதளப் பிரிவை தொடர்பு கொண்டு கேட்கையில், இது போலியான நியூஸ் கார்டு. நாங்கள் வெளியிடவில்லை ” எனத் தெரிவித்து இருந்தனர்.
முடிவு :
நம் தேடலில், தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது 58 ஆக குறைப்பு அமல் என்றும், 05.01.2022 முதல் அரசாணை வெளியீடு என்றும் பரவும் நியூஸ் கார்டு போலியானது. தற்போது வரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என அறிய முடிகிறது.