கோழிகள் அதிக புழுக்களை தின்றதால் சத்துணவு முட்டையில் புழுக்கள் என அன்பில் மகேஷ் கூறினாரா ?
பரவிய செய்தி
சத்துணவு முட்டையில் புழுக்கள் விவகாரம். கோழிகள் அதிக புழுக்களை தின்றதால் ஏற்பட்டு இருக்கலாம். இதேபோல் மற்றொரு சம்பவம் நடக்காமல் இருக்க மாண்புமிகு தளபதி அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் – அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
மதிப்பீடு
விளக்கம்
அரசு பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு முட்டையில் புழுக்கள் இருந்த விவகாரத்தில் கோழிகள் அதிக புழுக்களை தின்றதால் ஏற்பட்டு இருக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்ததாக நியூஸ் கார்டு ஒன்று வைரல் செய்யப்பட்டு வருகிறது.
அமைச்சர் பொறுப்பற்ற முறையில் பதில் அளித்து உள்ளதாக தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். தற்போது இந்த நியூஸ் கார்டு வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
டிசம்பர் 24-ம் தேதி கரூர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றியம் நாகனூர் அரசு ஆரம்ப பள்ளியில் புழுக்கள் வைத்த தரமில்லாத முட்டைகள் இருப்பதாக வெளியான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வில், கெட்டுப்போன முட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், பள்ளியின் சத்துணவு அமைப்பாளர், சமையல் செய்பவர் மற்றும் தலைமைஆசிரியர் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர் என செய்திகளில் வெளியாகி இருக்கிறது.
இந்த சம்பவம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் கூறிய பதில் எனப் பரப்பப்படும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது. ஜூனியர் விகடன் என்பதில் சீனியர் என மாற்றப்பட்டுள்ளது. செய்தியும் எடிட் செய்யப்பட்டுள்ளது நன்றாகத் தெரிகிறது.
முடிவு :
நம் தேடலில், சத்துணவு முட்டையில் புழுக்கள் விவகாரம், கோழிகள் அதிக புழுக்களை தின்றதால் ஏற்பட்டு இருக்கலாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாக பரப்பப்படும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.