குஜராத்தில் பாஜக வென்றால் தற்கொலை செய்வேன் என செந்தில்வேல் கூறியதாக பாஜகவினர் பரப்பும் போலி ட்வீட்
பரவிய செய்தி
குஜராத்தில் பாஜக தோல்விக்கு காரணமாக இருக்கப் போவது அங்குள்ள தமிழர்கள். தமிழர்களால் பாஜக துடைத்து எறியப்பட்டது என்று வரலாறு சொல்லும். இதையும் மீறி குஜராத்தில் பாஜக வெற்றி பெற்றால், இந்த நாடு எக்கேடு கெட்டு போகட்டும் என்று, நான் தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்வேன்.
மதிப்பீடு
விளக்கம்
குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி அதிக அளவிலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதன் மூலம் பாஜக இம்முறையும் வெற்றிப் பெற்று தொடர்ந்து ஆட்சியை தக்க வைக்க உள்ளது.
இந்நிலையில், குஜராத்தில் பாஜகவின் தோல்விக்கு காரணமாக இருக்கப்போவது தமிழர்களே, அதை மீறி பாஜக வென்றால் தற்கொலை செய்வேன் என ஊடகவியலாளர் செந்தில்வேல் கூறியதாக டிசம்பர் 5ம் தேதி ட்வீட் பதிவு ஒன்றை பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்கள் பலரும் வைரல் செய்து வருகின்றனர்.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் ட்வீட் குறித்து செந்தில்வேல் அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் தேடுகையில், டிசம்பர் 5ம் தேதி ” அது நடந்ததால்தானே அவரால் அதுவாக முடிந்தது. அது மட்டும் நடக்காவிட்டால் அவர் அதுவாகியிருக்க மாட்டார்தானே. அப்படி பார்த்தால் அவருக்கு அது நன்நாள் தானே… அதான…அதேதான்… ” என்ற பதிவையே பதிவிட்டு இருந்துள்ளார்.
அது நடந்ததால்தானே அவரால் அதுவாக முடிந்தது. அது மட்டும் நடக்காவிட்டால் அவர் அதுவாகியிருக்க மாட்டார்தானே. அப்படி பார்த்தால் அவருக்கு அது நன்நாள் தானே…
அதான…அதேதான்…
— Senthil (@Senthilvel79) December 5, 2022
டிசம்பர் 5ம் தேதியன்று இரவு 7.53 மணியளவில் செந்தில்வேல் பதிவிட்ட ட்வீட் பதிவில், குஜராத்தில் பாஜக தேர்தல் முடிவு குறித்து போலியான கருத்தை எடிட் செய்துள்ளனர்.
மேலும் படிக்க : உதயநிதி வடிவத்தில் பெரியாரை பார்க்கிறேன் எனச் செந்தில்வேல் கூறியதாகப் பரவும் போலி ட்வீட் !
மேலும் படிக்க : வில் ஸ்மித் ஆஸ்கர் விருது பெற்றதை செந்தில்வேல் விமர்சித்ததாக பரவும் போலி ட்வீட் !
மேலும் படிக்க : ஊடகவியலாளர் செந்தில் வேல் பெயரில் பரவும் போலிச் செய்தி, போலி ட்வீட் !
இதற்கு முன்பாக, ஊடகவியலாளர் செந்தில்வேல் பெயரில் போலியான ட்விட்டர் பக்க பதிவுகள் மற்றும் எடிட் செய்யப்பட்ட போலிச் செய்திகள் பரப்பப்பட்டது குறித்தும் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
முடிவு :
நம் தேடலில், குஜராத்தில் பாஜக வெற்றி பெற்றால் நான் தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்வேன் என ஊடகவியலாளர் செந்தில்வேல் கூறியதாக பரவும் ட்வீட் பதிவு போலியாக எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.