This article is from Apr 16, 2021

குஜராத் மருத்துவமனையின் நிலைமை என பரவும் புகைப்படங்கள்.. உண்மை என்ன ?

பரவிய செய்தி

குஜராத் மருத்துவமனை !

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் நாளொன்றுக்கு 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் இடவசதி இல்லாமல் ஒரே படுக்கையில் இரு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது, மருத்துவமனைக்கு வெளியே வைத்து சிகிச்சை அளிப்பது, இறந்தவர்களின் உடல்கள் குவிந்து இருக்கும் அவல நிலையானது ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், 3000 கோடிக்கு சிலை வைத்த குஜராத்தின் நிலைமை என ஒரே படுக்கையில் பல நோயாளிகள் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் மருத்துவமனைக்கு வெளியே நோயாளிகள் காத்திருக்கும் புகைப்படங்களின் தொகுப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ? 

ஆக்சிஜன் மாஸ்க் அணிந்து ஒரே படுக்கையில் இரு நோயாளிகள் இருக்கும் முதல் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” கொரோனா நெருக்கடியால் டெல்லி லோக்நாயக் ஜெய் பிரகாஷ் நாராயணன் மருத்துவமனையில் ஒரே படுக்கையில் இரு கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுவதாக ” ஏப்ரல் 15-ம் தேதி NDTV, எகனாமிக் டைம்ஸ் உள்ளிட்ட செய்திகளில் இப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

டெல்லி லோக்நாயக் ஜெய் பிரகாஷ் நாராயணன் மருத்துவமனை 1500 படுக்கைகளை கொண்ட இந்தியாவில் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மருத்துவமனைகளில் ஒன்றாகும். அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் ஒரு படுக்கையில் இருவராக இருக்கும் புகைப்படங்களை NDTV செய்தியில் வெளியாகி இருக்கிறது.

அடுத்ததாக, ஒரே படுக்கையில் ஒரு வயதான பெண் உள்பட 3 பேர் இருக்கும் புகைப்படம் குஜராத் மருத்துவமனை என சமூக வலைதளங்களில் அதிகம் பரப்பப்பட்டு வருகிறது. இப்புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், இப்புகைப்படம் குஜராத் அல்லது பிற மாநிலமா என எந்த செய்திகளும் கிடைக்கவில்லை.

மாறாக, ஏப்ரல் 14-ம் தேதி Neetu Garg என்பவரின் ட்விட்டர் பக்கத்தில், இந்த புகைப்படம் மகாராஷ்டிராவில் இருந்து கிடைத்ததாக அம்மாநில முதல்வரை டக் செய்து கேள்வி எழுப்பி  இப்புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். Neetu Gargவின் ட்விட்டர் பக்கத்தை பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா பின்தொடர்வதாக அவரே குறிப்பிட்டு இருக்கிறார்.

Twitter archive link 

Neetu Garg-வின் பதிவில், இந்த புகைப்படம் குஜராத் மருத்துவமனை என சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவுகிறது என ஒருவர் பதிவிட்டார். அதற்கு மற்றொரு ட்விட்டர் பக்கத்தில் இருந்து, ” படுக்கையின் பலகையில் மராத்தியில் எழுதி உள்ளது. இது மகாராஷ்டிரா, குஜராத் இல்லை ” எனப் பதிவிடப்பட்டது.

இது உண்மையா என அறிந்து கொள்ள மராத்தி தெரிந்த ஒருவரை அணுகி படுக்கையின் பலகையில் உள்ள ” बेड नं.२ ” என்ன மொழி எனக் கேட்ட போது ” அது மராத்தி தான் என்றும், படுக்கை எண் 2 என எழுதப்பட்டு உள்ளது. மும்பையில் பெரும்பாலும் மராத்தி மொழியே பயன்படுத்தப்பட்டு இருக்கும் ” எனக் கூறி இருந்தார்.  

அடுத்ததாக, மருத்துவமனைக்கு வெளியே நோயாளிகள் பலரும் காத்திருக்கும் புகைப்படம் குறித்து தேடுகையில், ” ஏப்ரல் 9-ம் தேதி VTV Gujarati எனும் குஜராத்தி செய்தியின் புகைப்படத் தொகுப்பில் உள்ளே இடம் இல்லாததால் நோயாளிகள் வெளியே காத்திருப்பதாக ” இப்புகைப்படத்தை குறிப்பிட்டு இறக்கிறார்கள். பிற செய்திகள் ஏதும் கிடைக்கவில்லை.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் குஜராத் மாநிலத்தில் நோயாளிகளுக்கு படுக்கை மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுவதாக செய்திகளில் வெளியாகி இருந்தது. இதேபோல், குஜராத் மருத்துவமனை வெளியே கொரோனா நோயாளிகள் இருக்கும் பல ஆம்புலன்ஸ்கள் காத்திருந்தது சர்ச்சையையும், கண்டனத்தையும் பெற்றது.

இதற்கு பதில் அளித்த சிவில் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் ஜே.வி.மோடி, ” சிவில் மருத்துவமனை ஒவ்வொரு நோயாளியையும் காப்பாற்றுவதற்கான சிறந்த முயற்சியை மேற்கொள்கிறது. ஆம்புலன்ஸ் வரிசைக்கும், சிவில் மருத்துவமனையின் செயல்திறனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆம்புலன்ஸ் வரிசையில் இருப்பதால் மட்டுமே அமைக்கப்பட்ட நெறிமுறைகளைத் நாங்கள் தவிர்க்க முடியாது ” எனத் தெரிவித்ததாக NDTV செய்தியில் வெளியாகி இருக்கிறது.

முடிவு :

நம் தேடலில், குஜராத் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் நிலை எனப் பரவும் புகைப்படங்களின் தொகுப்பில் டெல்லி, மகாராஷ்டிரா மாநிலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமும், குஜராத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படமும் இருப்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader