This article is from Apr 28, 2021

குஜராத், ம.பி கோவில் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டதாக பரவும் தவறான புகைப்படம் !

பரவிய செய்தி

ஆலயம் மருத்துவமனையாக மாறிய தருணம் இது தான் சனாதன தர்மம். ம.பி மாநிலம் இந்தூரில். ஆர்எஸ்எஸ் பணி மகத்தானது.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் மற்றும் குஜராத் மாநிலத்தில் உள்ள கோவிலை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக மாற்றியதாக பெரிய கோவிட் பராமரிப்பு மையத்தின் புகைப்படம் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

Twitter link | Archive link

” ஆலயம் மருத்துவமனையாக மாறிய தருணம். இது தான் எங்கள் சனாதன தர்மம். குஜராத் சுவாமி நாராயணன் கோவில் ” என சாதுக்கள் நோயாளிகளை காணும் புகைப்படங்கள் உடன் படுக்கைகள் அமைக்கப்பட்ட அதே புகைப்படம் இணைக்கப்பட்டு உள்ளது.

உண்மை என்ன ?

குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் என ஒரே புகைப்படத்தை பகிர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. வைரல் செய்யப்படும் கொரோனா சிகிச்சை மையப் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” டெல்லியில் உள்ள சர்தார் படேல் கோவிட் பராமரிப்பு மையம் மற்றும் மருத்துவமனை ” என 2020 செப்டம்பர் 13-ம் தேதி NDTV செய்தியில் இப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

டெல்லி சர்தார் படேல் கோவிட் பராமரிப்பு மையம் குறித்து தேடினால், கடந்த ஆண்டு சர்தார் படேல் கோவிட் பராமரிப்பு மையம் குறித்து வெளியான செய்திகளில் அங்கு எடுக்கப்பட்ட பிற புகைப்படங்களும் இடம்பெற்று இருக்கிறன.

அடுத்ததாக, சாதுக்கள் சிலர் நோயாளிகளை பார்க்கும்படி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் குறித்து தேடுகையில், குஜராத் மாநிலத்தின் வதோதராவில் உள்ள ஸ்வாமி நாராயணன் கோவில் மருத்துவமனையாக மாற்றப்பட்டதாக  2021 ஏப்ரல் 20-ம் தேதி லைவ்ஹிந்துதான் இணையதளத்தில் ட்விட்டரில் பகிரப்பட்ட சாதுக்கள் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

ஆனால், பிற செய்திகளில் இப்புகைப்படம் வெளியாகவில்லை. இருப்பினும், படுக்கைகள் பற்றாக்குறை காரணமாக குஜராத் மாநிலத்தின் வதோதராவில் உள்ள பிஏபிஎஸ் ஸ்ரீ ஸ்வாமிநாராயணன் கோவிலின் பிராத்தனைக் கூடம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது. அங்கு 500 படுக்கைகள் வரை உயர்த்த உள்ளதாகவும், ஆக்சிஜன், கழிப்பிட வசதி, வெண்டிலேட்டர் என நோயாளிகளுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டு உள்ளதாக TV9 குஜராத்தி மற்றும் தேஷ்குஜராத் உள்ளிட்ட செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க : ஆர்எஸ்எஸ் உருவாக்கிய கொரோனா மையம் என வதந்தியை பகிர்ந்த வானதி ஸ்ரீனிவாசன் 

முடிவு :

நம் தேடலில், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள கோவில் கொரோனா பராமரிப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டதாக வைரல் செய்யப்படும் புகைப்படம் டெல்லி சர்தார் படேல் கொரோனா மருத்துவமனையின் புகைப்படமாகும். தவறான புகைப்படத்தை வைரல் செய்து வருகிறார்கள் எனத் தெளிவாகிறது.

குஜராத் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ ஸ்வாமி நாராயணன் கோவிலின் பிராத்தனைக் கூடம் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனை வசதிகளுடன் மாற்றப்பட்டு இருக்கிறது என்கிற கூடுதல் தகவலை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader