அசாமில் பிறந்த குழந்தை தாய், நர்ஸ் இருவரையும் கொன்றதாக வதந்தி !

பரவிய செய்தி
கலிகால பிரசவம் அஸ்ஸாமில் ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு. டாக்டர்கள் வயிற்றில் ஆப்ரேஷன் செய்து குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். வயிற்றில் அக்குழந்தை தன் தாயின் குடல் முழுவதும் தின்றதால் தாய் உயிரிழப்பு. அக்குழந்தையை வெளியே எடுத்த நர்ஸ் 3 மணி நேரத்தில் உயிரிழப்பு. அக்குழந்தை அகன்ற வாயுடன் கோரை பற்களுடன் பிறந்துள்ளது. பிறக்கும் போது 8 கிலோ எடையில் இருந்தது. 24மணி நேரத்தில் அக்குழந்தையின் எடை 13 கிலோவாக அதிகரிக்க, மருத்துவர்கள் 17 விஷ ஊசி போட்டு குழந்தையை கொன்றனர். இது உண்மையில் நடந்த சம்பவம்.
மதிப்பீடு
விளக்கம்
யூடர்ன் ஃபாலோயர் தரப்பில் அனுப்பப்பட்ட வீடியோவில், ” கண்கள் மற்றும் வாய் இருப்பதே தெரியாமல் சிவப்பு நிறத்தில், உறுப்புகள் தெரியாத அளவிற்கு உடல் முழுவதும் செதில்கள் போன்று இருக்கும் குழந்தை தரையில் அழுகையுடன் இருப்பதை சுற்றி பலரும் வேடிக்கை பார்க்கின்றனர். அங்கு இருப்பது குழந்தை தான். ஏனெனில், அந்த குழந்தையின் தொப்புள் கொடி கூட நீக்கப்படாதது தெளிவாய் தெரிந்தது “.
வாட்ஸ் அப் குழுக்களில் பகிரப்பட்டு வரும் இவ்வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர் கேட்டு இருந்தார். இது வாட்ஸ் அப் மட்டுமின்றி முகநூலிலும் பரவத் துவங்கி உள்ளது.
உண்மை என்ன ?
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில் இருக்கும் குழந்தை, Harlequin Ichthyosis எனும் மிகவும் அரிதான மரபணு சார்ந்த நோயின் காரணத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தையே. அக்குழந்தை தோல் இல்லாமல் பிறந்துள்ளது.
2016-ம் ஆண்டு ஜூன் மாதம் நாக்பூரில் உள்ள விவசாய குடும்பத்தில் பிறந்த குழந்தைக்கு தோலே இல்லை. இந்தியாவில் Harlequin Ichthyosis குறைபாட்டுடன் பிறந்த முதல் குழந்தை இதுவே. எனினும், அக்குழந்தை மருந்துவனையில் இறந்து விட்டது.
இதேபோல், 2018 செப்டம்பர் மாதம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 20 வயது பெண்ணுக்கு Harlequin Ichthyosis குறைபாட்டுடன் குழந்தை பிறந்தது. எனினும், பிறந்த சில மணி நேரத்திலேயே குழந்தை இறந்து விட்டதாக இந்தியா டுடே உள்ளிட்ட செய்திகளில் வெளியாகி இருக்கிறது.
Harlequin Ichthyosis பாதிப்பானது 3 மில்லியனுக்கு ஒரு குழந்தை என்ற விகிதத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தோல் சார்ந்த கோளாறுக்கு ABCA 12 மரபணு குறைபாடு காரணமாகிறது. இன்று வரை, இந்த குறைபாட்டிற்கு எந்தவொரு சிகிச்சையும் இல்லை.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், Harlequin Ichthyosis குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளின் ஆயுட்காலம் மிகக் குறைவே. பிறந்த சில மணி நேரத்திலேயே குழந்தைகள் இறந்து விடுகின்றன. உலக அளவில் இத்தகைய மரபணு குறைபாட்டுடன் பிறந்தவர்களில் 3 பேர் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள் எனக் கூறுகின்றனர்.
இந்தியாவில் Harlequin Ichthyosis பாதிப்புடன் பிறகும் குழந்தை அரிதாகவே இருக்கின்றன. அவ்வாறு பிறக்கும் குழந்தைகளும் இறந்து விடுகின்றன. தற்பொழுது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் வீடியோவில் இருக்கும் குழந்தையும் Harlequin Ichthyosis குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தை. கிராமத்தில் பிறந்த காரணத்தினால், அக்குறைபாடு குறித்து அறியாத மக்கள் வீடியோக்கள் எடுத்து தவறாக பரப்பி இருக்கக்கூடும்.
Harlequin Ichthyosis குறைபாடு மட்டுமின்றி, இப்படி அரிதான குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகள் பெற்றோர்களால் ஏற்க மறுத்து கைவிடப்படுவதும் நிகழ்கிறது. அரிதான குறைபாட்டால் பிறந்த குழந்தையின் வீடியோவை வைத்து எப்படி இரக்கமில்லா வதந்தியை பகிர மனம் வந்தது எனத் தெரியவில்லை. இந்த வீடியோ தவறான தகவல்கள் உடன் பிற மொழிகளிலும் பரவி வருகிறது. தயவு செய்து இவ்வீடியோவை பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
குறிப்பு : மனம் வேதனை அடையும் அளவிற்கு குழந்தையின் நிலை இருப்பதால் வீடியோவோ, தெளிவான புகைப்படத்தையோ நாங்கள் பதிவிட விரும்பவில்லை.