ஹத்ராஸ் பாபி விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டாரா ?
பரவிய செய்தி
ஹத்ராஸ் உத்திரபிரதேசத்தில் உள்ள ஹத்ராஸில் நடந்த பெண்ணின் கொலையை திசைதிருப்பி கலவரத்தை தூண்டியவள் (இறந்த பெண்ணின் அண்ணி என்று கூறிக் கொண்ட நக்சலைட் பெண்). தற்பொழுது டெல்லியில் நடக்கும் விஷமிகளின் (விவசாயிகளின்) போராட்டக் களத்தில். தேசதுரோக நக்சல்கள்.
மதிப்பீடு
விளக்கம்
ஹத்ராஸ் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரின் வீட்டில் பிரியங்கா காந்தி ஆறுதல் கூறியது அங்கு தங்கியிருந்த நக்சல் பாபி என ஒரு பெண் மீது குற்றச்சாட்டப்பட்டது நினைவிருக்கும். ஆனால், பிரியங்கா காந்தி ஆறுதல் கூறியது பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாருக்கு என்றும், நக்சல் பாபி என தவறாக வைரல் செய்யப்பட்டவர் ஜபல்பூர் பெண்ணான ராஜ்குமாரி பன்சால் என்றும் நாம் விரிவான கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
மேலும் படிக்க : ஹத்ராஸ் பெண் வீட்டில் பிரியங்கா காந்தி ஆறுதல் கூறியது நக்சல் பெண்ணிற்கா ?
அதே பெண், வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டதாக ஒரு புகைப்படம் இந்திய அளவில் வைரலாகி வருகிறது. அதே பதிவை தற்போது தமிழிலும் பகிரத் தொடங்கி உள்ளனர்.
வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” பிப்ரவரி 10-ம் தேதி BKU-Bharti Kisan Union Ekta Ugrahan / ਭਾਰਤੀ ਕਿਸਾਂਨ ਯੁਨੀਅਨ ਏਕਤਾ ਉਗਰਾਹਾਂ எனும் முகநூல் பக்கத்தில் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட இப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
விவசாய அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் போது எடுக்கப்பட்டு இருந்தாலும் எதற்காக போராட்டத்தை நடத்தினார்கள் என்றும், அந்த பெண் யார் என்றும் விரிவாக அறிய முடியவில்லை. எனினும், ஹத்ராஸ் சம்பவம் நிகழ்வதற்கு பல மாதங்களுக்கு முன்பாகவே இப்புகைப்படம் முகநூலில் பதிவாகி இருக்கிறது.
ஹத்ராஸ் நக்சல் பாபி என தவறாக வைரல் செய்யப்பட்டவர் புகைப்படத்தை முன்பே நாம் கட்டுரையில் வெளியிட்டு இருந்தோம். இரண்டு பெண்களும் வெவ்வேறு நபர்களே. மேலும், ராஜ்குமாரி பன்சால் டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என பூம்லைவ் இணையதளத்திற்கு பேட்டி அளித்துள்ளார். டெல்லி விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தொடர்ந்து தவறான செய்திகளை பரப்பி வருவதை பார்க்க முடிகிறது.