சென்னை தி.நகரில் வெடி விபத்து எனப் பதிவிட்டு நீக்கிய இந்து மக்கள் கட்சி!
பரவிய செய்தி
சென்னை திநகரில் ஏதோ வெடி விபத்து நடந்ததாக செய்தி பரப்பப்படுகிறது. மக்களிடம் நடந்ததை கூறுங்கள். நாங்கள் பாதுகாப்பாக இருப்போம்.
மதிப்பீடு
விளக்கம்
சென்னை தி.நகர் போத்திஸ் வாசலில் ஏதோ வெடி விபத்து நடந்துள்ளது. இதனைப் பற்றித் சென்னை காவல்துறை மக்களிடம் தெளிவாக விளக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் என்ன நடந்துக் கொண்டிருக்கிறது. இது போன்ற சம்பவம் அதிர்ச்சியாக உள்ளது என பாஜக-வின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உண்மை என்ன :
வைரலான வீடியோவில் போத்திஸ் கடை எதிரில் விபத்து நடந்துள்ளது என நம்மால் பார்க்கமுடிகிறது.
இதுகுறித்து இணையத்தில் தேடியபொழுது, 2022 அக்டோபர் 2ம் தேதி திருச்சியில் உள்ள போத்திஸ் ஜவுளிக்கடை எதிரில் இந்த விபத்து நடந்துள்ளது என நமக்குத் தெரியவருகிறது. போத்திஸ் கடையின் எதிரில் ஒருவர் ஹீலியம் பலூன் விற்றுக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஹீலியம் கேஸ் நிரப்பப்பட்ட டேங்க் வெடித்துள்ளது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலே இறந்துள்ளார். மேலும் 6 நபர்கள் காயமடைந்துள்ளனர். ஹீலியம் பலூன் விற்றவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சியில் நடந்த விபத்து குறித்து அக்டோபர் 3ம் தேதி “Tamil Nadu: A helium tank exploded in a market in Trichy’s Kotai Vasal area yesterday; One dead & several injured. Case registered” எனும் தலைப்பில் ANI செய்தி நிறுவனம் வீடியோ வெளியிட்டிருந்தது.
#WATCH | Tamil Nadu: A helium tank exploded in a market in Trichy’s Kotai Vasal area yesterday; One dead & several injured. Case registered. pic.twitter.com/wUHvlaM5GQ
— ANI (@ANI) October 3, 2022
மேலும் டைம்ஸ் ஆப் இந்தியாவின்(Times Of India) திருச்சி பதிப்பகத்தில் அக்டோபர் 3ம் தேதி Trichy: 1 dead, six injured in gas cylinder blast எனும் தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தது.
மேலும், நியூஸ்18 செய்தி நிறுவனம் “திருச்சியை பதறவைத்த ஹீலியம் சிலிண்டர் விபத்து.. பலூன் வியாபாரி சிறையில் அடைப்பு” எனும் தலைப்பில் அக்டோபர் 4ம் தேதி இந்த விபத்து குறித்து செய்தி வெளியிட்டிருந்தது.
இதிலிருந்து போத்திஸ் கடைக்கு எதிரில் ஒரு விபத்து நடந்துள்ளது என்றாலும் அது சென்னை தி.நகரில் நடந்தது இல்லை எனவும், திருச்சியில் உள்ள போத்திஸ் ஜவுளிக்கடைக்கு எதிரில் நடந்தது எனவும் நமக்கு தெரியவருகிறது.
காயத்ரி ரகுராம் மற்றும் இந்து மக்கள் கட்சி தற்பொழுது இந்தப் பதிவை ட்விட்டரில் இருந்து நீக்கியுள்ளனர்.
முடிவு :
நம் தேடலில், இந்து மக்கள் கட்சி மற்றும் காயத்ரி ரகுராம் ட்விட்டரில் பதிவிட்டது போல இது சென்னை திநகரில் நடந்தது இல்லை எனவும், திருச்சி போத்திஸ் எதிரில் நடந்தது எனவும் நமக்குத் தெரியவருகிறது.