This article is from Nov 24, 2019

அபராத தொகையில் ஹெல்மெட் வாங்கிட்டு, வண்டியை எடு – பெங்களூர் போலீஸ்.

பரவிய செய்தி

அபராதம் செலுத்த வேண்டாம், ஹெல்மெட் வாங்கிய பிறகு வாகனத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள் – பெங்களூர் போலீஸ்.

மதிப்பீடு

சுருக்கம்

அபராதம் செலுத்துவதற்கு பதிலாக புதிய ஹெல்மெட்களை வாங்கிக் கொண்டு வாகனத்தை எடுத்துச் செல்லலாம் என்ற யோசனையை பெங்களூர் பகுதியில் உள்ள காவலர்கள் செயல்படுத்தி வருவதாக கூறும் தகவல் சரியே.

ஆனால், அதற்காக மீம் பதிவில் பயன்படுத்திய புகைப்படம் தவறானது.

விளக்கம்

இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் ஹெல்மெட் அணியவில்லை என்பதற்காக அதிக அளவில் போக்குவரத்து காவல்துறையால் பிடிக்கப்படுவதும், அபராதங்கள் செலுத்துவதும் தொடர்கிறது. எனினும், புதிய போக்குவரத்து திருத்த சட்டங்கள் வெளியாகிய பிறகு போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதங்கள் அதிகரித்து உள்ளன.

” ஹெல்மெட் இல்லாமல் பயணிக்கும் நீங்கள் அபராதம் செலுத்த வேண்டாம், ஹெல்மெட்டை வாங்கி விட்டு வாகனத்தை உங்களின் வீட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள் என பெங்களூர் போலீஸ் ” கூறுவதாக ஓர் மீம் பதிவு முகநூல் உள்ளிட்டவையில் பரவி வருகிறது. இது தொடர்பாக ஃபாலோயர் தரப்பிலும் தகவல்கள் பகிரப்பட்டன.

ஹெல்மெட் வாங்குங்கள் : 

” ஹெல்மெட் இல்லாமல் சென்று 1000 ரூபாய் செலுத்துவதை அதிகபட்ச அபராதம் என நினைக்கிறீர்களா ? . மத்திவாலா போலீஸ் அதற்கு பதிலாக மற்றொரு விருப்பத்தை அளிக்கிறது. நீங்கள் அபராதம் செலுத்த விரும்பவில்லை என்றால், அதே தொகைக்கு புதிய ஹெல்மெட்டை வாங்கிய பிறகு உங்கள் வாகனத்தை எடுத்துச் செல்லுங்கள் ” என 2019 நவம்பர் 14-ம் தேதி டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியாகி இருக்கிறது.

இத்தகைய புதிய முயற்சியை பெங்களுர் பகுதியில் உள்ள மத்திவாலா போலீஸ் மேற்கொன்ட பொழுது, முதலில் ஒரு மணி நேரத்தில் 25 வாகனங்கள் பிடிபட்டன. அவர்களிடம் புதிய ஹெல்மெட் வாங்கிய பிறகு வந்து வாகனத்தை எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறியதை வாகன ஓட்டிகளும் ஏற்றுக் கொண்டு அபராத தொகையில் புதிய ஹெல்மெட்களை வாங்கி உள்ளனர். அதன்பிறகு, அவர்களுக்கு காவலர்கள் தரப்பில் ரோஜாப்பூ அளிக்கப்பட்டது.

ஹெல்மெட் புகைப்படங்கள் : 

ஆனால், இந்த செய்திக்கு பயன்படுத்தப்பட்ட புகைப்படங்கள் கடந்த ஆண்டு(2018) ஜனவரி 3-ம் தேதி வெளியான செய்திகளில் இடம்பெற்றுள்ளன. பெங்களூரில் தலை பகுதியை மட்டும் பாதி மூடி இருக்கும் , சர்வதேச தர சான்றிதழ் இல்லாத ஹெல்மெட்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

அதுபோன்ற ஹெல்மெட்களை பயன்படுத்து வாகன ஓட்டிகளிடம் இருந்து ஹெல்மெட்கள் வாங்கப்பட்டு, அதில் அவர்களின் செல்போன் எண் எழுதப்பட்டு சாலையோரத்தில் வைக்கப்பட்டன. அதன்பிறகு, முழுமையான மற்றும் தர சான்றிதழ் உள்ள ஹெல்மெட்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தி இருந்தனர்.

அபராத தொகைக்கு பதிலாக ஹெல்மெட் வாங்கலாம் என பெங்களூர் போலீஸ் தரப்பில் மேற்கொண்டு வரும் விழிப்புணர்வு முயற்சி பாராட்டுக்குரியது. எனினும், அதற்காக மீம் பதிவில் பயன்படுத்திய புகைப்படம் பார்ப்பவர்களுக்கு போலீஸ் தரப்பில் ஹெல்மெட் விற்பனை செய்வது போன்ற தோற்றத்தை அளிக்கும் என்பதால் தொடர்பில்லாத புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader