கோவா விமான நிலையத்தில் இந்தி தெரியாது என்ற பெண்ணின் இந்தி பதிவு எனப் பரவும் வதந்தி !
பரவிய செய்தி
கோவாவில் இந்தி தெரியாததால் மிரட்டலுக்கு உள்ளான சர்மிளா இவர் தான்..
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஷர்மிளா என்ற பெண் தன்னுடைய குடும்பத்துடன் கோவாவில் சுற்றுலா முடித்துக்கொண்டு திரும்பும் போது, கோவா விமான நிலையத்தில் இந்தியில் பேசிய சி.ஐ.எஸ்.எஃப் வீரரிடம், தனக்கு இந்தி தெரியாது எனக் கூறியுள்ளார். அதற்கு அந்த சி.ஐ.எஸ்.எஃப் வீரர், “தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது. இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியைக் கற்றாக வேண்டும்” என கூறியுள்ளார். இதனையடுத்து ஷர்மிளா அங்கே உள்ள சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் கோவாவில் இந்தி தெரியாது என்ற ஷர்மிளா இவர் தான் என்று கூறி பாஜகவினர், இந்து மக்கள் கட்சியினர் உட்பட பலரும், ஷர்மிளா ராஜசேகர் என்பவரின் எக்ஸ் பதிவைக் குறிப்பிட்டு, அவர் இந்தியில் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதைப் பாருங்கள். இவருக்கு ஏற்கனவே இந்தி தெரிந்துள்ளது என்று கூறி புகைப்படம் ஒன்றை சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
முதல்வரை #தத்தி_ஸ்டாலின் என்று நாம் சொல்வதற்கு இதுவும் ஒரு காரணம்,
1) அடி முட்டாள் கூட்டத்தை ஐடி விங்காக வைத்திருப்பது
2) அந்த கூமுட்டைகள் நன்றாக இந்தி தெரிந்த ஒரு பெண்ணை இந்தி தெரியாதவர் என உருவாக்கிய நாடகத்தை நம்பி பதிவிட்டுள்ளார் முதல்வர் . pic.twitter.com/LARIYmv2Ph
— Selva Kumar (@Selvakumar_IN) December 14, 2023
என்னமா @SharmiSharmiji பேரு ஒரே போல இருக்கு இதும் உன் குரலா இல்லை இதும் Fake னு மொத்த தத்தி கும்பல நம்ப வைக்க போரயா
முதல்வர்ல இருந்து அமைச்சர் வர உன் யாவாரத்துக்கு மாட்டிவிட்டுட்டயே மா
அவதாரங்களை காண : https://t.co/Sn4ybDh6Hj#தத்தி_ஸ்டாலின் pic.twitter.com/pCf2GWbpdV
— Bagavath Pratheep (@Bagavathprathee) December 14, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்ததில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஷர்மிளா, இந்த சம்பவம் குறித்து, நேற்று (டிசம்பர் 14) சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்துள்ள வீடியோவைக் காண முடிந்தது.
அதில், “குடும்பத்துடன் கோவாவில் சுற்றுலா முடித்துக்கொண்டு திரும்பும் போது, கோவா விமான நிலையத்தில் Check IN செய்வதற்காக நின்று கொண்டிருந்தேன். அப்போது அங்கே உள்ள சி.ஐ.எஸ்.எஃப் என்னிடம் இந்தியில் ஏதோ கேட்டார். நான் இந்தி தெரியாது என்று கூறினேன். உடனே அச்சா என்று கூறி கேலி செய்வது போன்ற உடல்மொழியில் பேசினார். பின்னர் எங்கே இருந்து வருகிறீர்கள் என்றார். நான் தமிழ்நாடு என்று கூறினேன். தமிழ்நாடு இந்தியாவில் தானே இருக்கிறது. ஹந்தி தேசிய மொழி அதை நீங்கள் கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
உடனே நான் இந்தி அலுவல் மொழி தானே தவிர, தேசிய மொழி அல்ல என்று கூறினேன். உடனே கூகுள் செய்து பாருங்கள் அப்போது தான் உங்களுக்கு தெரியும் என்று கத்தினார். இது குறித்து மற்ற சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களிடம் கூறிய போதும், அவர்களும் இந்தி தேசிய மொழி தான் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார்கள். அவர்கள் புரிந்துகொள்ளும் மனநிலையில் இல்லை என்றாலும், நான் உடனே கூகுள் செய்து அவர்களிடம் காட்டிவிட்டு அமைதியாக வந்துவிட்டேன். பின்பு என்னுடைய கணவர் கூறியதன் பெயரில் அங்குள்ள சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரியிடன் புகார் தெரிவித்தேன். அவர் இதற்காக வருத்தம் தெரிவித்தார்” என்று அந்த வீடியோவில் சர்மிளா பேசியுள்ளதைக் காண முடிந்தது.
இதையடுத்து, ஷர்மிளா ராஜசேகர் இந்தியில் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதைப் பாருங்கள். இவருக்கு ஏற்கனவே இந்தி தெரிந்துள்ளது என்று கூறி பரவி வரும் பதிவுகள் குறித்து ஆய்வு செய்ததில், அந்தப் பதிவுகளுக்கு அதே எக்ஸ் பக்கத்தில், மறுப்பு தெரிவித்து பதிவு செய்திருந்ததைக் காண முடிந்தது.
அது நான் இல்லை சகோதரரே… எனக்கு ஹிந்தி நல்லாவே தெரியும்
— Sharmila Rajasekar (@SharmiSharmiji) December 14, 2023
அதில், “அது நான் இல்லை சகோதரரே… எனக்கு ஹிந்தி நல்லாவே தெரியும்” என்று குறிப்பிட்டு பதிவு செய்திருந்தார். அதேபோல், பேட்டி அளித்த பெண்ணின் குரலும், இவரின் யூடியூப் சேனலில் உள்ள குரலும் ஒன்றாக இருப்பதாக பரவும் பதிவுகளுக்கும் ஷர்மிளா ராஜசேகர்(வைரல்) மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.
மேலும், ஊடகங்களில் பேட்டி அளித்த ஷர்மிளா ராஜசேகர் சென்னையைச் சேர்ந்த மென்பொறியாளர் எனத் தெரிவித்து இருக்கிறார். வைரலாகும் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கும் ஷர்மிளா ராஜசேகர் திருச்சியைச் சேர்ந்தவர் என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். அவரைத் தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம். அவர் பதில் அளிக்கையில், அதையும் கட்டுரையில் இணைக்கிறோம்.
We @dt_next reported today about a TN woman asked to learn Hindi at Goa airport by CISF officials and the story was followed up in TV.
Wanted to clarify that the handles here are directing their ‘criticism’ at the wrong person. The person quoted in the story is not on Twitter. pic.twitter.com/2bM1cdvbAW
— Srikkanth (@Srikkanth_07) December 14, 2023
மேலும், DT Next (தினத்தந்தி) இணையதளத்தின் பத்திரிகையளர் ஸ்ரீகாந்த் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், ” கோவா விமான நிலையத்தில் சிஐஎஸ்எஃப் அதிகாரிகளால் தமிழ்நாட்டுப் பெண் ஒருவர் இந்தி கற்கச் சொன்னதைப் பற்றி நாங்கள் செய்தி வெளியிட்டு இருந்தோம். இங்கு தவறான நபரை விமர்சித்து வருகிறார்கள். இரண்டும் வெவ்வேறு நபர்கள். செய்தியில் இடம்பெற்ற நபர் ட்விட்டர்(எக்ஸ்) பக்கத்தில் இல்லை ” எனப் பதிவிட்டு இருக்கிறார்.
மேலும் படிக்க: 1938ல் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடந்ததே தெரியாமல் கலைஞர் பற்றி பாஜகவினர் பரப்பும் பொய் தகவல் !
இதற்கு முன்பும் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் குறித்து பல செய்திகள் பரவின. அது குறித்தும் நம் பக்கத்தில் கட்டுரை வெளியிட்டிருக்கிறோம்.
முடிவு:
நம் தேடலில், கோவா விமான நிலையத்தில் இந்தியில் பேச சொல்லி CISF வீரர் வற்புறுத்தியதாக கூறிய பெண் எக்ஸ் பக்கத்தில் இந்தியில் பதிவிட்டு உள்ளதாக பரப்பப்படும் தகவல் வதந்தி. இரண்டும் வெவ்வேறு நபர்கள் என்பதை அறிய முடிகிறது.