மத்தியப்பிரதேசத்தில் ஹிந்து பெண் சர்ச் சென்றதால் உயிருடன் எரித்துக் கொலையா ?
பரவிய செய்தி
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் கிறிஸ்டியன் சர்ச்-யில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட ஹிந்து பெண்ணை உயிருடன் எரித்துக் கொன்றுள்ளனர்.
மதிப்பீடு
சுருக்கம்
இந்தியாவில் நிகழாத சம்பவம் மூலம் நடந்ததாக மத வெறுப்பு உண்டாக்க வதந்தி பரப்பப்படுகிறது. 2015-ல் மத்திய அமெரிக்கப் பகுதியில் பெண் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஏன் என்பதை விரிவாக படிக்கவும்.
விளக்கம்
மத்திய அமெரிக்காவில் உள்ள Guatemala என்ற நகரில் இருந்து கிழக்கே அமைந்து இருக்கும் Rio bravo என்ற கிராமத்தில் மக்கள் கும்பலாக சேர்ந்து 16 வயது பெண்ணை இரத்த காயங்கள் ஏற்படும் அளவிற்கு கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
தாக்குதலுக்கு பிறகு கும்பலில் இருந்த ஒருவர் அப்பெண்ணின் மீது பெட்ரோல் ஊத்தி நெருப்பை பற்ற வைத்துள்ளார். அப்பெண் நெருப்பில் வெந்து இறந்தே விட்டார். 16 வயது பெண் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். இது நடந்தது 2015-ம் ஆண்டில்.
Rio bravo கிராமத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் Guatemala முழுவதும் பரவி பின் பல நாடுகளுக்கு வைரலாகியது.
அப்பெண் எரித்துக் கொல்லப்பட்டதற்கு காரணம், இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பாக டாக்ஸி ஓட்டுனர் ஒருவர் கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ளார். அக்கொலையில் சந்தேகப்பட்ட கும்பலில் அப்பெண் இருந்ததாகவும், டாக்ஸி ஓட்டுனர் கொலையில் தொடர்பு இருந்ததாகவும் கூறி அப்பெண்ணை தாக்கி உயிருடன் எரித்துக் கொன்றதாக செய்திகளில் வெளியாகியுள்ளது.
இந்த வீடியோ Guatemala முழுவதும் பரவி இருந்த காரணத்தினால், Rio Bravo கிராமத்தில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Saquiya கிராமத்தில் காரை திருட முயன்றதாக் கூறி இரு ஆண்களை 150 பேர் சேர்ந்த கும்பல் தாக்கியது.
இதில், ஒருவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார், மற்றொருவர் மரத்தில் தூக்கிலிடப்பட்டார். Guatemala நகரம் உலகளவில் குற்றச் சம்பவங்கள் அதிகம் நிகழும் பகுதியாக உள்ளது.
முடிவு :
2015-ல் Guatemala என்ற மத்திய அமெரிக்காவின் பகுதியில் நிகழ்ந்த சம்பவத்தை இந்தியாவில் உள்ள மத்தியப்பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்ததாகவும், ஹிந்து பெண் எனவும் வதந்தியைப் பரப்பி வருகின்றனர்.