This article is from Dec 06, 2019

பெண்களை பாதுகாப்பாக வீட்டில் இறக்கி விடும் போலீஸ் சேவை எண் உண்மையா ?

பரவிய செய்தி

போலீஸ் தரப்பில் இலவச பயண சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இரவு 10-6 மணியளவில் தனியாக மற்றும் வீட்டிற்கு செல்ல வாகனம் இல்லாமல் இருக்கும் பெண்கள் போலீஸ் அவசர உதவி எண் (1091 மற்றும் 7837018555)-க்கு அழைத்து வாகனத் தேவை குறித்து தெரிவிக்கலாம். போலீஸ் கட்டுப்பாடு அறை வாகனம் அல்லது பிசிஆர் வாகனம்/ எஸ்எச்ஓ வாகனம் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து செல்ல வேண்டிய இடத்தில் பாதுகாப்பாக இறக்கி விடுவார்கள். இந்த சேவை இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த செய்தியை முடிந்தவரை பகிருங்கள்.

மதிப்பீடு

விளக்கம்

காவல்துறை தரப்பில் பெண்களுக்கு வாகன சேவை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளதாக ஃபார்வர்டு தகவல் முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.

பெண்களுக்கு அவசர நிலையில் வாகன வசதியை ஏற்படுத்தி தருவதாக பரவி வரும் உதவி எண் எந்த பகுதியில் உள்ள சேவை அல்லது இந்தியா முழுவதுமா எனக் குறிப்பிடவில்லை. அதில், குறிப்பிட்டுள்ள  ” 7837018555″ என்ற உதவி எண்ணைப் பயன்படுத்தி தேடிய பொழுது, லூதியானா நகரத்தில் அந்த சேவை இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இரவில் வாகன வசதி இல்லாமல் தனியாக தவிக்கும் பெண்களின் பாதுகாப்பிற்கு ” பெண்களுக்கான இலவச பயண திட்டம் ” பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா நகரத்தில் தொடங்கப்பட்டு உள்ளது.

Archived link 

இந்த சேவையை குறித்த தகவலை அனைவருக்கும் பகிரத் தொடங்கிய பிறகு லூதியானா பகுதி மட்டுமின்றி பஞ்சாப், உத்தரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, கேரளா என பல மாநிலங்களில் இருந்தும் அழைப்புகள் அந்த எண்ணிற்கு வருவதாகவும், சிலர் வழங்கப்பட்ட எண் பயன்பாட்டில் இருக்கிறதா என அறிந்து கொள்ள தொடர்பு கொள்வதாகவும் லூதியானா போலீஸ் தெரிவித்து உள்ளனர். இந்த செய்தி பொதுவான திட்டம் என பல மாநிலங்களில் பரவி உள்ளது.

சண்டிகர் போலீஸ் :

கடந்த 2017-ல் இதேபோல் ” We care for you ” என்ற சேவையை சண்டிகர் பகுதியின் காவல்துறை அறிவித்து இருந்தனர். அப்பொழுது, இந்த சேவை விமர்சனத்தையும், சில பெண்கள் தவறாக பயன்படுத்திக் கொள்வதாகவும் கூறப்பட்டது.

மேலும் படிக்க : ” We care for you ” பெண்கள் பாதுகாப்பிற்கு சண்டிகர் போலீஸ் சேவை !

இதேபோல், பஞ்சாப் போலீஸ் , ஆந்திரா (டயல் 100 ,1091) மற்றும் நாக்பூர் போலீஸ் தரப்பில் பெண்களை வாகனத்தில் அழைத்து சென்று பாதுகாப்பாக இறக்கி விடும் சேவையை செயல்படுத்தி வருகின்றனர்.

Twitter link | archived link  

முடிவு : 

நம்முடைய தேடலில் இருந்து, இரவு 10-6 மணியளவில் தனியாக, வாகன வசதி இல்லாமல் தவிக்கும் பெண்களை பாதுகாப்பாக அழைத்து செல்லும் இலவச பயண திட்டத்தை லூதியானா போலீஸ் அறிமுகப்படுத்தி உள்ளனர்.

அந்த சேவை தொடர்பான தகவல் இந்திய அளவில் உள்ள திட்டம் என தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இந்தியா முழுவதிலும் பரவி உள்ளது. மேற்காணும் எண்கள் தமிழகத்திற்கு இல்லை. அவசர நேரங்களில் இந்த எண்ணை நம்பி அழைக்க வேண்டாம் என பகிர்ந்தவர்களுக்கு தெரிவியுங்கள்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader