தெலுங்கானாவில் இந்துக்களின் வீட்டில் முஸ்லீம்கள் புகுந்து தாக்குவதாக பரப்பப்படும் பாகிஸ்தான் வீடியோ
பரவிய செய்தி
இது நடப்பது பாகிஸ்தானில் இல்லை. தெலுங்கானாவில். இந்துக்களின் வீடுகளில் வலுக்கட்டாயமாக நுழைகின்றனர் போராளிகள். எந்த மீடியாவையும் உள்ளே நுழைய விடாமல் செய்து விட்டனர். இதுதான் இன்றைய நிலை.
மதிப்பீடு
விளக்கம்
தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் இந்துக்களின் வீடுகளில் வலுக்கட்டாயமாக முஸ்லீம்கள் புகுந்து தாக்குவதாக கூறி அடுக்குமாடி குடியிருப்பில் வலுக்கட்டாயமாக பலர் நுழைவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.
🖕🖕🖕🖕🖕🖕இது நடப்பது பாகிஸ்தானில் இல்லை. தெலுங்கானாவில். இந்துக்களின் வீடுகளில் வலுக்கட்டாயமாக நுழைகின்றனர் போராளிகள். எந்த மீடியாவையும் உள்ளே நுழைய விடாமல் செய்து விட்டனர். இதுதான் இன்றைய நிலை. pic.twitter.com/GrtPIQtuio
— Annachi Dr Anantharaju puratchi tamilar (@AnnachiAnantha1) August 30, 2022
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் வீடியோ குறித்து தேடியபோது, இச்சம்பவம் பாகிஸ்தான் நாட்டில் நடந்த நிகழ்வு என அறிய முடிந்தது. பாகிஸ்தானின் ஹைதராபாத் என்ற பகுதியில் அசோக் குமார் என்ற நபர் மீது இஸ்லாமிய இறைத்தூதரை அவமதிப்பு செய்ததாக கூறி போலியான புகார் ஒன்றை பிலால் அப்பாஸி என்ற உள்ளூர் கடைக்காரர் காவல்துறையில் அளித்துள்ளதை அடுத்து கும்பல் தாக்குதலை நடத்தி உள்ளதாக ஆகஸ்ட் 22ம் தேதி எகனாமிக் டைம்ஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.
ஆகஸ்ட் 21ம் தேதி யூடியூப் சேனல் ஒன்றில் “Hyderabad Saddar mobile market” எனக் குறிப்பிட்டு வெளியிடப்பட்ட வீடியோவில் முழுமையான காட்சி பதிவாகி இருக்கிறது.
மேலும், ஆகஸ்ட் 21ம் தேதி அசோக் குமார் கைது செய்யப்பட்டு உள்ளதாக சிந்து போலீஸ் ஹைதராபாத் முகநூல் பக்கத்தில் கைது செய்யப்பட்ட புகைப்படத்துடன் பதிவிடப்பட்டு உள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் உள்ள ஹைதராபாத் நகரில் அசோக் குமார் என்பவரின் வீட்டில் இஸ்லாமிய கும்பல் நுழைய முயன்ற வீடியோவை இந்தியாவில் நடந்ததாக தவறாக வைரலாகி வருகின்றது.
முடிவு :
நம் தேடலில், தெலுங்கானாவில் இந்துக்களின் வீடுகளில் வலுக்கட்டாயமாக முஸ்லீம்கள் நுழைய முயன்றதாகப் பரப்பப்படும் வீடியோ இந்தியாவைச் சேர்ந்தது அல்ல. இது பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாத் பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ என அறிய முடிகிறது.