ஐதராபாத்தில் இருந்து மேற்கு வங்கம் செல்லும் முஸ்லீம் எக்ஸ்பிரஸ் எனப் பரவும் தவறான தகவல் !
பரவிய செய்தி
ஐதராபாத்தில் இருந்து மேற்கு வங்கம் செல்லும் ரயிலை முஸ்லிம் எக்ஸ்பிரஸ் என ஜிஹாதிகள் உருவாக்கினர். வாகனம் இப்படி போகாது என்று காவலாளி சொல்லிக்கொண்டிருக்கிறான், ஆனால் வாகனத்தை இப்படித்தான் அனுப்ப வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். என்ன மனநிலை இது? இஸ்லாமிய அரசை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் உள்ளதா? நடு -சைடு இடது காரர்கள் இதற்கு பதில் சொல்லுவார்களா?
மதிப்பீடு
விளக்கம்
ஐதராபாத்தில் இருந்து மேற்கு வங்கம் செல்லும் இரயிலை முஸ்லீம் எக்ஸ்பிரஸ் ஆக மாற்றியுள்ளனர் எனக் கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வலதுசாரிகளால் வைரலாகப் பரப்பப்படுகிறது. மேலும் அந்த வீடியோவில் இரயில் பெட்டிகள் மசூதி போன்ற அடையாளங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருப்பதையும், இரயிலில் பேனர் ஒட்ட வேண்டாம் என அங்கிருப்பவர் பேசுவதும் கேட்க முடிந்தது.
ஐதராபாத், மேற்கு வங்காளம் ரயில்.
Hyderabad to WB train today..😳 pic.twitter.com/1nDdnGcRzx
— Suresh நீலகண்டன். 1 (@Suresh33737771) August 3, 2023
This video is said to be from train Hyderabad to WB ,How Indian railways even allowed this!? pic.twitter.com/fzJ4s1yTul
— Right Singh (@rightwingchora) August 3, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இதே அடையாளங்களுடன் அலங்காரம் செய்யப்பட்டுள்ள ஒரு இரயிலின் வீடியோவை gohash என்ற யூடியூப் பக்கத்தில் காண முடிந்தது.
அந்த வீடியோவானது கடந்த ஆகஸ்ட் ௦2 அன்று “46 உர்ஸ்-இ-காதீர் ஹஸ்ரத் க்வாஜா சையத் முகமது பாத்ஷா க்வாத்ரி சிஷ்டி யமானி காதிர் ஹல்கட்டா ஷரீஃப்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்தது. இதன் மூலம் சிஷ்டி வரிசையின் சூஃபி துறவி என்று சொல்லப்படுகின்ற முகமது பாட்ஷா காத்ரியின் 46-வது ஆண்டு நினைவு தினத்திற்காக ஹைதராபத்தில் இருந்து ஹல்கட்டா ஷெரீப் தர்காவிற்கு சிறப்பு ரயில் விடப்பட்டிருப்பதை அறிய முடிந்தது.
ஹஸ்ரத் குவாஜா சையத் முஹம்மது படேஷ் குவாத்ரி சிஸ்தி யமானியின் 43-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஹல்கட்டா ஷெரீப் தர்காவுக்கு செல்லும் பயணிகளுக்காக கடந்த ஆகஸ்ட் 01 அன்று ஹைதராபாத்தில் இருந்து வாடி ஜங்சனுக்கு நான்கு சிறப்பு ரயில்களை தெற்கு மத்திய ரயில்வே (SCR) ஏற்பாடு செய்துள்ளதை அறிய முடிந்தது.
இதன் மூலம் ஹைதராபாத்தில் இருந்து கர்நாடகாவில் உள்ள வாடி ரயில் நிலையம் வரை தான் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்த முடிகிறது. எனவே சமூக ஊடகங்களில் பரப்பப்படுவது போல இது மேற்கு வங்காளத்திற்கு செல்லும் ரயில் அல்ல.
இதே போன்று, ‘குல்பர்கா டைம்ஸ்‘ என்ற ஊடகமும் ஹல்கட்டா ஷெரீப் தர்காவில் நடைபெற்ற நிகழ்ச்சி மற்றும் அதற்காக விடப்பட்டிருக்கும் இந்த சிறப்பு ரயில்கள் குறித்த காட்சிகளைக் கொண்ட வீடியோவை தன்னுடைய அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இதேபோல், கடந்த 2017ம் ஆண்டு ஹல்கட்டா ஷெரீப் தர்காவிற்கு செல்லும் பக்தர்களுக்கான சிறப்பு இரயிலும் அலங்காரப்படுத்தப்பட்டு இருக்கும் காட்சிகளை கொண்ட வீடியோவையும் காண முடிந்தது. ஒவ்வொரு ஆண்டும் இயக்கப்படும் சிறப்பு இரயலில் இவ்வாறான அலங்காரங்களை செய்து வருகின்றனர்.
இந்திய இரயில்வே தரப்பில் இராமாயண யாத்திரை, சர் தம் யாத்திரை(Char dham yatra) மற்றும் கங்கா புஷ்கரா யாத்திரை உள்ளிட்டவைக்கும் சிறப்பு இரயில்கள் இயக்கப்படுகின்றன.
மேலும் படிக்க: ஹரியானா வன்முறையுடன் தொடர்புப்படுத்தி தவறாகப் பரவும் 2019ல் எடுக்கப்பட்ட சூரத் வன்முறை வீடியோ !
மேலும் படிக்க: இந்தியாவில் நிகழ்ந்ததாக தவறாகப் பரப்பப்படும் பங்களாதேஷ் நாட்டில் முஸ்லீம்கள் சிலரைத் தாக்கும் வீடியோ !
முடிவு:
நம் தேடலில், ஐதராபாத்திலிருந்து மேற்கு வங்காளம் நோக்கி மசூதி அடையாளங்களுடன் முஸ்லீம் எக்ஸ்பிரஸ் இயக்கப்படுவதாகப் பரப்பும் செய்திகள் தவறானவை. இது முகமது பாட்ஷா காத்ரியின் நினைவு தினத்திற்காக ஹைதராபத்தில் இருந்து கர்நாடகாவின் வாடி நிலையம் வரை இந்திய ரயில்வேயால் இயக்கப்படும் சிறப்பு ரயில். அதில் பயணித்த பக்தர்கள் அலங்காரம் செய்துள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது.