தமிழ்நாடு பாடப்புத்தகத்தில் குழந்தைகள் படத்தில் மதச்சாயமா? அவதூறுகளை அடுக்கும் அர்ஜுன் சம்பத்..!
பரவிய செய்தி
வள்ளுவருக்கும் வள்ளலாருக்கும் ஒளவையாருக்கும் நெற்றியில் திருநீறை இந்து சமய அடையாளங்களை அழித்து நடுநிலையாக்கி! குழந்தைகளுக்கு மத அடையாளம் போட்டு விஷம் விதைக்கும் திராவிட மாடல். தமிழக பள்ளி கல்வி துறை கிரிப்டோ கிறிஸ்தவர்கள் மற்றும் தி.க., கம்யுனிஸ்ட் வசம்! விஷம் பரப்பப்படுகிறது – இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்.
மதிப்பீடு
விளக்கம்
“தமிழ்நாடு அரசின் பாடப்புத்தகத்தில் உள்ள படத்தில் கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மத அடையாளங்களுடன் குழந்தைகள் காணப்படுகிறார்கள். வள்ளுவருக்கும், வள்ளலாருக்கும், ஒளவையாருக்கும் நெற்றியில் திருநீறு இருப்பதுபோன்ற இந்து சமய அடையாளங்களை மட்டும் அழித்து நடுநிலையாக்கிவிட்டு, குழந்தைகளுக்கு மத அடையாளம் போட்டு விதைக்கும் திராவிட அரசு” என்று கூறி இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் பள்ளி பாடப்புத்தகத்தில் மத அடையாளம் என்று கூறி இந்த புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வலதுசாரிகளால் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படம் குறித்து தமிழ்நாடு அரசின் பாடப்புத்தகங்களை ஆய்வு செய்து பார்த்ததில், மாணவ மாணவிகள் குழுவாக கைகோர்த்து நிற்பது போன்ற இந்தப் புகைப்படம் மூன்றாம் வகுப்பு தமிழ், ஆங்கிலம் பாடத்திற்கான (முதல் பருவம்) புத்தகத்தில் பக்க எண் VII இல் இடம்பெற்றுள்ளது என்பதை அறிய முடிந்தது.
இதுகுறித்து மேலும் ஆய்வு செய்ததில், 2019ஆம் ஆண்டில் தான் இதன் முதல் பதிப்பு அச்சடிக்கப்பட்டது என்பதையும், அப்போதைய புத்தகத்திலேயே இந்தப் புகைப்படம் இடம்பெற்றுள்ளது என்பதையும் உறுதிபடுத்த முடிந்தது.
மேலும் தற்போது மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு 2020, 2022 இல் அச்சடிக்கப்பட்ட திருத்திய பதிப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், குழந்தைகள் இடம்பெற்றுள்ள இந்த புகைப்படத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் தற்போது வரை வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்தப் படத்தில் அனைத்து மதத்தினரின் ஒற்றுமையை உணர்த்தும் வகையிலேயே மாணவர்கள் இந்து, கிறித்தவ, இஸ்லாமிய அடையாளங்களுடன் கை கோர்த்து நிற்கின்றனர். இந்நிலையில் கிறித்தவ, இஸ்லாமிய அடையாளங்களை மட்டும் குறிப்பிட்டு காட்டி, மத வெறுப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அர்ஜுன் சம்பத் தனது சமூக ஊடகப் பக்கங்களில் தவறான கருத்துகளைப் பரப்பி வருகிறார்.
மேலும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தான், தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்களில் இந்த மாற்றத்தை பள்ளிகல்வித்துறை ஏற்படுத்தியுள்ளது என்பது போன்று பரப்பப்படுவது முற்றிலும் தவறான தகவலே. இந்தப் புகைப்படம் முதல் பதிப்பு வெளியிடப்பட்ட 2019 ஆம் ஆண்டிலிருந்தே இடம்பெற்று வருகிறது.
மேலும் படிக்க: சிபிஎஸ்சி புத்தகத்தில் டேட்டிங், ரிலேஷன்ஷிப்ஸ் பாடப்பிரிவுகள் உள்ளதாக தவறாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள் !
மேலும் படிக்க: தமிழ்நாடு பள்ளி பாடப் புத்தகத்தில் 20 ஆண்டுகளாக இருக்கும் ‘சனாதன தர்மம்’.. நீக்கப்படுமா ?
முடிவு:
நம் தேடலில், தமிழ்நாடு அரசின் பாடப்புத்தகங்களில் மதச்சாயம் பூசப்பட்டதாக இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத் பரப்பும் செய்திகள் முற்றிலும் தவறானவை என்பதை அறியமுடிகிறது.