சீன வீரர்களால் தாக்கப்பட்ட இந்திய ராணுவ வீரரின் புகைப்படமா ?
பரவிய செய்தி
ஒட்டு மொத்த இந்தியா மீது விழ இருந்த அடிகளை உங்கள் உடம்பில் வாங்கிக் கொண்டு எங்களை பாதுகாத்த இந்திய ராணுவ வீரர்களான உங்களை அரசியல், மொழி, இனம், மதம் பாகுபாடு இல்லாத உங்கள் ஒவ்வொருவரையும் பாதம் தொட்டு வணங்குகிறோம்.
மதிப்பீடு
விளக்கம்
லடாக் எல்லையில் சீன ராணுவத்தினரால் தாக்கப்பட்ட இந்திய வீரர் என மேற்காணும் புகைப்படங்கள் இந்திய அளவில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மோதலால் இந்திய ராணுவ வீரருக்கு எப்படியெல்லாம் காயம் நேர்ந்துள்ளது எனப் இப்புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.
சீன வீரரின் தாக்குதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்தனர், பலர் காயமடைந்து உள்ளனர். ஆனால், காயமடைந்தவர்களின் புகைப்படங்கள் வெளியாகாத நிலையில் பரவி வரும் இப்புகைப்படம் உண்மையா என தெரிந்து கொள்ள தீர்மானித்தோம். ஃபாலோயர்ஸ் தரப்பிலும் கேட்கப்பட்டதால் தேடிப் பார்த்தோம்.
உண்மை என்ன ?
முதுகில் காயத்துடன் இருக்கும் நபரின் புகைப்படத்தை ” Fake News debunked by InVID Weverify ” உதவியுடன் சேர்ச் செய்து பார்க்கையில் tineye image சேர்ச் தளத்தின் மூலம் இப்புகைப்படம் 2016-ம் ஆண்டு liekr எனும் இணையதளத்தில் வெளியாகி இருப்பதை கண்டறிய முடிந்தது.
2016-ம் ஆண்டு வெளியான வலைப்பதிவுகள் பலவற்றில் தாய்லாந்து நாட்டின் ராணுவத்தினர் உடைய கடுமையான பயிற்சி என இப்புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது. இப்புகைப்படத்தின் தொடக்கம் எங்கு என தெரியவில்லை, ஆனால் தாய்லாந்து மொழியில் உள்ள பல வலைப்பதிவுகளில் 4 ஆண்டுகளுக்கு முன்பே இடம்பெற்று இருக்கிறது.
மேலும் படிக்க : இந்திய ராணுவ வீரர் பழனியின் இறுதி 10 நிமிடம் என பரவும் இரு வேறு வீடியோக்கள்| உண்மை என்ன ?
லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக பல பழைய வீடியோக்கள், தவறான புகைப்படங்கள் இந்திய அளவில் பரப்பப்பட்டு வருகிறது. தேசத்தின் மீது இருக்கும் பற்றை வெளிப்படுத்த தவறான வீடியோக்கள், புகைப்படங்களை பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
முடிவு :
நம் தேடலில், முதுகில் காயத்துடன் இருக்கும் நபர் இந்திய ராணுவத்தைச் சேர்ந்தவர் அல்ல. இப்புகைப்படம் 4 ஆண்டுகளுக்கு முந்தையது என அறிய முடிகிறது.