இந்தியன் ஆயில்-அதானி கேஸ் என பாஜக ஆட்சியில் மாறியதா ?
பரவிய செய்தி
காங்கிரஸ் மற்றும் மோடி ஆட்சியில் !
மதிப்பீடு
விளக்கம்
காங்கிரஸ் ஆட்சியில் இந்தியன் ஆயில் ஆக இருந்த நிறுவனம் பாஜகவின் ஆட்சியில் இந்தியன் ஆயில்-அதானி கேஸ் ஆக மாறியதாக எரிபொருள் விற்பனை நிலையத்தில் வைக்கப்பட்டு இருக்கும் பெயர் பலகையின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
உண்மை என்ன ?
Indian Oil – Adani gas தொடர்பாக அதன் இணையதளத்தில் தேடுகையில், இந்திய அரசாங்கத்தின் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்(ஐஓசி) மற்றும் அதானி குழுமத்தின் ஒரு பகுதியான அதானி கேஸ் லிமிடெட்(ஏஜிஎல்) ஆகியவற்றின் கூட்டு முயற்சியால்(Joint Venture) இந்தியன் ஆயில்-அதானி கேஸ் பிரைவேட் லிமிடெட் உருவாக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் உடைய இணையத்தில் தனியார் நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட வணிகம் குறித்து தேடுகையில், அதானி கேஸ் லிமிடெட் நிறுவனத்துடன் கூட்டு முயற்சியில் நகர எரிவாயு விநியோக திட்டங்களில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஐசிஐசிஐ வங்கி போன்ற பல தனியார் நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதையும் அறிய முடிந்தது.
எனினும், இந்தியன் ஆயில் மற்றும் அதானி கேஸ் கூட்டு முயற்சி சமீபத்தில் பாஜக ஆட்சியில் நிகழ்ந்தது அல்ல.
” நகர எரிவாயு விநியோக(சிஜிடி) திட்டங்களை நாட்டின் பல்வேறு நகரங்களில் செயல்படுத்த 50:50 அடிப்படையில் கூட்டு நிறுவனமாக இந்தியன் ஆயில்-அதானி கேஸ் பிரைவேட் லிமிடெட் 2013-ம் ஆண்டில் இணைந்ததாக ” 2019-ல் எனெர்ஜி எகனாமிக் டைம்ஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், 2013-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி இந்தியன் ஆயில்-அதானி கேஸ் கூட்டு நிறுவனம் உருவாக்கப்பட்டது. அதானி கேஸ் பயணத்தில் இந்தியன் ஆயில் உடன் ஏற்பட்ட கூட்டு முயற்சி குறித்து விவரங்கள் அந்நிறுவனத்தின் ஊடகப் பிரிவில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
இந்தியன் ஆயில்-அதானி கேஸ் எனும் கூட்டு நிறுவனம் இந்தியாவில் பல மாநிலங்களின் நகரங்களில் எரிவாயு விநியோக திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிறுவனத்தின் பெயர் இடம்பெற்ற எரிவாயு விற்பனை நிலையத்தின் புகைப்படமே தற்போது வைரலாகி வருகிறது.
முடிவு :
நம் தேடலில், இந்தியன் ஆயில்-அதானி கேஸ் எனும் கூட்டு நிறுவனம் பாஜக ஆட்சியில் நிறுவப்பட்டது அல்ல. 2013-ல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியிலேயே தொடங்கப்பட்டது. இந்தியன் ஆயில் பல தனியார் நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியில் அங்கமாக இருக்கிறது என அறிய முடிகிறது.