சீன நிறுவனங்களின் கையில் இருக்கும் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை!
பரவிய செய்தி
இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தை யாரின் கட்டுப்பாட்டில் இருக்கு ? ஜியோமி (சீனா)-30%, விவோ (சீனா) : 17% , சாம்சங் (தென்கொரியா) : 16%, ஓப்போ (சீனா):12%. ரியல்மீ(சீனா) : 14%.
மதிப்பீடு
விளக்கம்
லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் சீனா ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்ததில் இந்திய-சீன வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளனர். சீனத் தரப்பிலும் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சீனப் பொருட்களை தடை செய்ய வேண்டும் என்ற கோஷங்கள் இந்திய அளவில் எழுந்துள்ளது. அதன் விளைவாக சீன நிறுவனங்கள் தயாரித்த டிவி, கம்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை உடைத்து, எரித்து எதிர்ப்பு தெரிவிப்பதை பார்க்க முமுடிந்தது.
இதேபோல் சீன நிறுவனங்களின் செயலிகளை இந்தியாவில் தடை செய்ய வேண்டும், அன்-இன்ஸ்டால் செய்யவும் என்றும் பதிவிட்டு வருகிறார்கள். ஆனால், இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சீன நிறுவனங்களின் ஆதிக்கத்தை பட்டியலிட்ட மீம் பதிவை காண நேரிட்டது.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முதல் 5 இடங்களில் இருக்கும் நிறுவனங்களில் 4 நிறுவனங்கள் சீனாவை மையமாகக் கொண்ட நிறுவனங்களாகவே இருக்கின்றன. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை அறிந்து கொள்ள ” Indian Smartphone Market share” என்ற கீ வார்த்தையைக் கொண்டு தேடிய பொழுது www.counterpointresearch.com எனும் ஆய்வு இணையதளத்தில் இந்த புள்ளி விவரம் வெளியாகி உள்ளது.
2019 முதல் காலாண்டு கணக்கில் தொடங்கி 2020 வரை ஜியோமி நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது. அதற்கு போட்டியாக விளங்குவது தென்கொரிய நிறுவனமான சாம்சங். விவோ, ஓப்போ உள்ளிட்ட நிறுவனங்களும் படிப்படியாக வளர்ந்து வருவதை பார்க்க முடிகிறது.
சாம்சங் நிறுவனத்தைத் தவிர்த்து மீதமுள்ள நிறுவனங்கள் அனைத்தும் சீனாவைச் சேர்ந்த நிறுவனங்கள். இந்த நிறுவனங்களின் ஏற்றுமதி ஒவ்வொரு ஆண்டும் இந்திய சந்தையில் அதிகரித்தே வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களே இந்திய விற்பனையில் முன்னணியில் உள்ளன. காரணம், குறைந்த விலையில் அனைத்து வசதிகளையும் கொண்ட ஸ்மார்ட்போன் எங்கு கிடைக்கிறதோ அதைத் தான் தேடிச் செல்கிறோம். சீன செயலிகளை தடை செய்யுங்கள், அன்-இன்ஸ்டால் செய்யுங்கள் என பதிவிட நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் பெரும்பாலும் சீன நிறுவனங்களின் தயாரிப்பாகவும் இருக்கலாம்.