This article is from Feb 01, 2019

தனிநபர் வருமானவரி உச்ச வரம்பு 5 லட்சமாக உயரவில்லை!

பரவிய செய்தி

2019 பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.5 லட்சமாக அதிகரிப்பு.

மதிப்பீடு

சுருக்கம்

தனி நபர் வருமானத்தின் வரிப் பலகையில் எந்தவித மாற்றங்களும் இடம்பெறவில்லை. 5 லட்சம் வரை வருட வருமானம் கொண்டவர்களுக்கு அதே 5% வருமான வரி விகிதமே. தனிநபர் வருமான வரியில் 5 லட்சம் வரை விலக்கு அளிக்கவில்லை. ஆனால், வரி தள்ளுபடி(TAX Rebate or tax refund) தொகையானது அவர்கள் செலுத்தும் முழுத் தொகையாக திரும்பி வரும். ஆகையால், வரி செலுத்த தேவையில்லை எனக் குறிப்பிடுகின்றனர்

விளக்கம்

2019-ம் ஆண்டிற்கான நாட்டின் இடைக்கால பட்ஜெட்டை மத்திய (பொறுப்பு) நிதியமைச்சர் பியூஸ் கோயல் லோக் சபாவில் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறித்து புதிய விவரங்களை தெரிவித்தார்.

அதன்படி, வருடம் 5 லட்சம் வருமானம் கொண்ட தனி நபர் எந்த வரியும் செலுத்த தேவை இருக்காது என கூறினார். ஆனால், தனிநபர் வரி பலகையில்(Tax slab) எந்த மாற்றங்களும் கொண்டுவரப்படவில்லை.

செய்தியிலும், சமூக வலைதளங்களிலும் தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டு வருகின்றனர். ஆனால், இது தவறாக புரிந்துக் கொள்ளப்பட்ட தகவலாகும். வரி விலக்கு உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு 2.5  லட்சம். கடந்த ஆண்டில் இன்சூரன்ஸ், வீட்டுக் கடன் உள்ளிட்ட பிறவற்றை தவிர்த்து ஒருவரின் வருமானம் 5 லட்சம் வரை இருந்தால் 2.5 லட்சம் வரையில் வரிகள் ஏதுமில்லாமல் 2.5-5 லட்சத்திற்கு 5 % வரியை எடுத்துக் கொண்டு மீதி தொகை (Tax refund) வரி ஆண்டு இறுதியில் திருப்பி அளிக்கப்படும். இதில், இந்த ஆண்டில் இருந்து பெறப்பட்டு வந்த 5% முழுவதும் திருப்பி அளிக்க உள்ளனர்.

இது வருட வருமானம் 5 லட்சம் வரை கொண்ட தனிநபருக்கு மட்டுமே. மேலும், வருட வருமானம் 6.5 லட்சம் வரை கொண்டவர்கள் ப்ரோவிடன்ட் ஃபண்ட்ஸ் அல்லது பரிந்துரைக்கப்படும் பங்குகளில் முதலீடு செய்து இருந்தால் அவர்களுக்கும் இம்முறை பொருந்தும். இவ்விரு பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பயனடைவர்.

ஆண்டு வருமானம் 2.5 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும். அதற்கு மேலும், 3.5 லட்சத்துக்கு குறைவாக இருப்பவர்களுக்கும் வரித் தள்ளுபடி என்று முன்பு இருந்தது. உதாரணமாக, வரி செலுத்தக் கூடிய அளவு, வருமானம் 3.5 லட்சம் என்றால் அதற்கு வரியாக 5 ஆயிரமும், அதற்கு Rebate 2,500 ஆகவும் இருக்கும் (செலுத்திய வரி 5000-த்திலிருந்து 2500 திரும்ப வழங்கப்படும்). மொத்தமாக 3,47,500 கையில் இருக்கும்.  வருமானம் 3,51,000 லட்சம் என்றால் அதற்கு வரியாக 5,050 ரூபாயும், அதற்கு Rebate இல்லை. மொத்தமாக 3,45,950 ரூபாய் கையில் இருக்கும்.

தற்போது, 5 லட்சத்திற்கும் குறைவாக உள்ளவர்களுக்கு வரித் தள்ளுபடி அளிக்கப்படும். உதாரணமாக, வரி செலுத்தக் கூடிய அளவு, வருமானம் 5 லட்சம் என்றால் அதற்கு வரியாக 12,500-மும், அதற்கு Rebate 12,500 ஆகவும் இருக்கும். மொத்தமாக 5 லட்சம் கையில் இருக்கும்.  வருமானம் 5,12,500 லட்சம் என்றால் அதற்கு வரியாக 15,000 ரூபாயும், அதற்கு Rebate இல்லை. மொத்தமாக 4,97,500 கையில் இருக்கும்.

இதற்கு அடுத்து வரும் மீதியுள்ளவர்களுக்கு வரிப் பலகையில் முன்பு இருந்த வரி விதிமுறையே பின்பற்றப்படுகிறது. 10 லட்சம் ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு 2.5 லட்சத்திற்கு வருமான வரி இல்லை, அடுத்த 2.5-5 லட்சம் வரையிலான தொகைக்கு 5% மற்றும் 5-10 லட்சத்திற்கான 20 சதவீத வரியே பின்பற்றப்படுகிறது.

வரி தள்ளுபடியை (Tax rebate) பெற : 

  • இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். வெளிநாட்டுவாழ் இந்தியர்கள்(NRI) பெற முடியாது.
  • வரி தள்ளுபடியானது தனி நபருக்கு மட்டுமே பொருந்தும், நிறுவனங்களுக்கு பொருந்தாது

வருமான வரி செலுத்துவோர் return file பதிவு செய்வர். வரி ஆண்டின் இறுதியில் அவர்களுக்கான Tax Rebate தொகை திருப்பி வழங்கப்படும். தற்போது, தனிநபர் வருமான வரியாக 2.5-5 லட்சத்திற்கு செலுத்தும் தொகையான 2,500 – 12,500 என்ற முழுத் தொகையும் (full tax rebate) திருப்பி வழங்கப்படும் என அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்து இருந்தார்.

ஒருவகையில் வரி விலக்கு எனக் கூறுவது பொருந்தினாலும் நடைமுறையில் இருப்பது இதுவே. தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்படவில்லை.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader