ஆர்எஸ்எஸ் உருவாக்கிய கொரோனா மையம் என வதந்தியை பகிர்ந்த வானதி ஸ்ரீனிவாசன் !
பரவிய செய்தி
இந்தியாவின் இரண்டாவது பெரிய கோவிட் பராமரிப்பு மையம். இந்தூரில் 45 ஏக்கர் நிலத்தில் 6000 படுக்கைகள் மற்றும் 4 ஆக்சிஜன் பிளான்ட் உடன் ஆர்எஸ்எஸ் உருவாக்கிய கோவிட் பராமரிப்பு மையம்.
மதிப்பீடு
விளக்கம்
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஆர்எஸ்எஸ் அமைப்பானது 6000 படுக்கை வசதி மற்றும் 4 ஆக்சிஜன் பிளான்ட் உடன் உருவாக்கிய இந்தியாவின் இரண்டாவது பெரிய கோவிட் பராமரிப்பு மையம் என இப்புகைப்படத்தை பாஜக தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் பகிர்ந்து இருந்தார்.
Second Largest #COVID19 Care Center in India.
Rashtriya Swayamsevak Sangh (RSS) has built a 6000-bed covid care center and 4 oxygen plants in 45 acres of land in Indore. Kudos to their efforts. pic.twitter.com/yOiCnPSmJl— Harshavardhan Muppavarapu (@vardhan08) April 24, 2021
இந்திய அளவில் பாஜக தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலரும் இப்புகைப்படத்தை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இதன் உண்மைத்தன்மை குறித்து தெரிந்து கொள்ளத் தீர்மானித்தோம்.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் கோவிட் பராமரிப்பு மையம் குறித்து தேடுகையில், ” மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் ” ராதா சோமி சத்சங் பியாஸ் (ஆர்எஸ்எஸ்பி) மைதானம் மா அகிலா கோவிட் கேர் சென்டராக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த மையம் முதற் கட்டமாக 600 படுக்கைகள் உடன் தொடங்கப்பட்டுள்ளது, தேவைப்பட்டால் 6,000 படுக்கைகள் வரை அமைக்கலாம். இது மத்தியப் பிரதேசத்தில் உள்ள மிகப்பெரிய கொரோனா மையமாகும்.
முதல் கட்டமாக 600 படுக்கைகள் தயாராக உள்ளன. ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களும் தன்னார்வ பணி செய்துள்ளனர். மையத்திற்கான உபகாரணத்திற்கு இந்தூரின் பல தொழிலதிபர்கள் நிதியுதவி அளித்து உள்ளனர் என அம்மாநில அமைச்சர் துள்சி சிலவாத் தெரிவித்து உள்ளதாக ” ஏஎன்ஐ செய்தி முகாமை ஏப்ரல் 22-ம் தேதி செய்தி வெளியிட்டு உள்ளது.
இதுமட்டுமின்றி, பல செய்தி நிறுவனங்கள் ராதா சோமி சத்சங் பியாஸ் (ஆர்எஸ்எஸ்பி) மைதானம் மா அகிலா கோவிட் கேர் சென்டராக மாற்றப்பட்டு இருப்பதாகவே செய்தி வெளியிட்டு உள்ளன. எந்த செய்தியிலும் ஆர்எஸ்எஸ் உருவாக்கிய கொரோனா பராமரிப்பு மையம் என எங்கும் குறிப்பிடவில்லை.
மையத்திற்கு தேவையான ஆக்சிஜன் இயந்திரங்கள், நோயாளிகளுக்கு உடைகள் உள்ளிட்ட உபகரணங்கள் வாங்க தொழிலதிபர்கள், வணிகர்கள், சமூக அமைப்புகள் 5 கோடி நிதியுதவி அளித்து உள்ளதாக அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக இந்தியாடிவி செய்தியில் வெளியாகி இருக்கிறது.
ராதா சோமி சத்சங் பியாஸ் (ஆர்எஸ்எஸ்பி) ஆனது ஆன்மீக அமைப்பாகும். அந்த அமைப்பின் இணையதளத்தில் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அமைப்பிற்கு சொந்தமான மைதானத்தையே அரசு பயன்படுத்தி இருக்கிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், 6000 படுக்கைகள் மற்றும் 4 ஆக்சிஜன் பிளான்ட் உடன் ஆர்எஸ்எஸ் உருவாக்கிய இந்தியாவின் 2வது பெரிய கோவிட் பராமரிப்பு மையம் என பாஜக தலைவர்கள் பரப்பும் தகவல் தவறானது.
இந்தூர் ராதா சோமி சத்சங் பியாஸ் (ஆர்எஸ்எஸ்பி) மைதானம் முதற் கட்டமாக 600 படுக்கைகள் உடன் மா அகிலா கோவிட் கேர் சென்டராக மாற்றப்பட்டு இருக்கிறது. இங்கு 6,000 படுக்கைகள் வரை அமைக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கு மற்ற சமூக அமைப்புகள் போல் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களும் கூட தன்னார்வு தொண்டு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஆர்எஸ்எஸ் அமைப்பால் உருவாக்கப்பட்ட கொரோனா பராமரிப்பு மையம் அல்ல என அறிய முடிகிறது.