உத்தரப்பிரதேசத்தில் சுங்கச்சாவடியை ஜேசிபி கொண்டு உடைத்தவர் ஒரு முஸ்லீம் இளைஞரா? உண்மை என்ன?

பரவிய செய்தி

உத்தரப் பிரதேசம்: சுங்கக்கட்டணம் கேட்டதால் சுங்கச்சாவடியை ஜே.சி.பி. கொண்டு உடைத்த முகமது சாஜித் அலி கைது..

X Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

உத்தரப்பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடியில் புல்டோசர் ஓட்டுநர் ஒருவரிடம் சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டணம் கேட்டுள்ளனர். இந்நிலையில் ஆத்திரமடைந்த அந்த ஓட்டுநர் புல்டோசர் மூலம் சுங்கச்சாவடியை இடித்த சம்பவம் நேற்று (ஜூன் 11) பரப்பரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சுங்கச்சாவடியை இடித்த புல்டோசர் ஓட்டுநரான முகமது சாஜித் அலி கைது என்றுகூறி வீடியோவுடன் கூடிய செய்தி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. ஆனால் அதில் பேசும் காவல்துறை அதிகாரி இதற்கு காரணமானவர் பெயர் குறித்து எந்த இடத்திலும் குறிப்பிட்டு பேசவில்லை என்பதையும் காண முடிகிறது.


உண்மை என்ன?

பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வுசெய்து பார்த்ததில், இது குறித்து “Deccan herald”  “உ.பி.யில் டோல் கட்டணம் கேட்டதால், குடிபோதையில் புல்டோசர் ஆபரேட்டர் சுங்கச்சாவடியை நாசம் செய்துள்ளார்” என்ற தலைப்பில் ஜூன் 11 அன்று வெளியிட்டிருந்த செய்தியைக் காண முடிந்தது.

அதில், “பில்குவா பகுதியில் உள்ள சஜர்சி சுங்கச்சாவடியில் இந்த சம்பவம் நடந்தது. காவல்துறையின் கூற்றுப்படி, பில்குவாவில் உள்ள ஒரு செங்கல் சூளையில் பணிபுரியும் புல்டோசர் ஆபரேட்டர் தீரஜ், ஹாபூரில் இருந்து சுங்கச்சாவடிக்கு வந்தார். அந்த வழியாக செல்ல கட்டணம் செலுத்துமாறு சுங்கச்சாவடி ஊழியர்கள் கேட்டபோது, ​​கோபமடைந்த அவர், புல்டோசரைக் கொண்டு கேபின்களை இடித்து நொறுக்கத் தொடங்கினார். தீரஜ் சுங்கச்சாவடியின் இரண்டு கேபின்களை முற்றிலுமாக உடைத்து சேதாரம் விளைவித்தார்.” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் இந்த சம்பவம் குறித்து நேற்று (ஜூன் 11) ஹபூர் மாவட்ட காவல்துறையினர் தங்களுடைய எக்ஸ் பக்கத்தில், அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அதில், “11.06.2024 அன்று, பில்குவா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சஜர்சி சுங்கச்சாவடியில், ஜேசிபி ஓட்டுநர் ஒருவர் தனது ஜேசிபி மூலம் சுங்கச்சாவடியை சேதப்படுத்தியதை அடுத்து, அதே நபர் கர்முக்தேஷ்வர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 1 நான்கு சக்கர வாகனத்தையும் 2 மோட்டார் சைக்கிள்களும் மோதி விபத்தை ஏற்படுத்தியிருக்கிறார். கைது செய்யப்பட்ட குற்றவாளியின் பெயர் – குன்னூர் மாவட்டம், படவுன், சிகாரா காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் வித்யாராமின் மகன் தீரஜ். ஜேசிபி பதிவு எண். UP-14 KT-4255″ என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் சுங்கசாவடியை இடித்த புல்டோசர் ஓட்டுநர் பெயர் முகமது சாஜித் அலி என்றுகூறி மதரீதியாக சிலர் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர் என்பதை தெளிவாக அறிய முடிகிறது.

மேலும் படிக்க: சென்னையில் தேங்கிய மழைநீரை புல்டோசர் மூலம் லாரியில் ஏற்றுவதாகப் பரவும் வதந்தி !

முடிவு:

நம் தேடலில், உத்தரபிரதேசத்தில் சுங்கச்சாவடியை ஜேசிபி கொண்டு உடைத்தவர் ஒரு முஸ்லீம் இளைஞர் எனப் பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader