பாலஸ்தீனத்தின் மீது அனுதாபம் ஏற்பட போரில் பாலஸ்தீனியர்கள் நடிக்கிறார்களா?
![](https://youturn.in/wp-content/uploads/2024/06/palastine-FC.jpg)
பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
சமீபத்தில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர், தங்கள் நாட்டு பணயக்கைதிகளை மீட்பதற்காக மத்திய காசாவில் உள்ள நுசிராத் முகாம் மீது தாக்குதல் நடத்தினர். இந்த நடவடிக்கையில் நான்கு பணயக்கைதிகளை மீட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த நடவடிக்கையில் காசாவில் உள்ள பொதுமக்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 274 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என காசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த நடவடிக்கையின்போது பாலஸ்தீனத்தின் மீது அனுதாபம் ஏற்படவைப்பதற்காக போரில் பாலஸ்தீனியர்கள் நடிப்பதாகக்கூறி 21 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அதில் இரத்தக்காயமடைந்து தரையில் படுத்திருக்கும் இளைஞர் ஒருவர் சிரித்துக்கொண்டே தலையை தூக்கி பார்த்துவிட்டு மீண்டும் படுத்துக்கொள்வது போன்று உள்ளது.
Save palaestine
Save Syria
But they won, t save others https://t.co/ctBsxd6fdy— dUGLUs (@UdhayaS89965107) June 10, 2024
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்தததில். பரவி வரும் வீடியோவைக் குறிப்பிட்டு The Intel Drop இணையதளத்தில் “காசாவில் இருந்து பணயக்கைதிகளை மீட்டெடுக்கும் போது 200க்கும் மேற்பட்ட குடிமக்களை இஸ்ரேலிய இராணுவம் படுகொலை செய்தது” என்று குறிப்பிட்டு ஜூன் 08 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது.
அதில் பரவி வரும் வீடியோவைப் போன்றே பல வீடியோக்கள் பதிவிடப்பட்டிருந்தன. ஒவ்வொரு வீடியோவும் சமீபத்தில் நடந்து முடிந்த காசா மீதான இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கைகளை காட்டுவதாக இருந்தன. ஆனால் அக்காட்சிகள் அனைத்தும் கொடூரமாக இருந்தன.
மேலும் பரவி வரும் வீடியோவை நன்கு ஆய்வு செய்ததில், அந்த இளைஞர் தலையில் அடிபட்டு அதிகளவில் இரத்தம் வழிந்துள்ளதே என்று பார்த்துவிட்டு வலியில் துடிக்கும்போதுதான் முகபாவனையை அவ்வாறு வைத்துள்ளார் என்பதையும், அவருக்கு அருகில் இருக்கும் நபர் உடனே அவருக்கு முதலுதவி செய்வதையும் அதில் காணமுடிகிறது. மேலும் வீடியோவில் அந்த இளைஞரின் அருகில் ஒரு குழந்தை இறந்து கிடப்பதையும் தெளிவாகக் காணமுடிகிறது.
இந்த இருவரைப் போலவே அதே அறையில் பலரும் பலத்த இரத்தகாயங்களுடன் அடிபட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவதையும் காணமுடிகிறது. ஆனால் பலரும் மனிதாபிமானமற்ற முறையில் இந்த வீடியோவைத் தவறாகப் பரப்பி வருகிறனர்.
இதேபோன்று பரவி வரும் வீடியோவின் காட்சிகளை Bitchute, Akharinkhabar போன்ற இணையதளங்களிலும் காணமுடிகிறது.
மேலும் படிக்க: ‘இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்’: இந்தியாவில் வலதுசாரிகள் பரப்பிய வதந்திகளின் தொகுப்பு !
மேலும் படிக்க: காசாவில் இறந்தவர்களின் உடல்கள் முழித்து பார்ப்பதாக தவறாகப் பரப்பப்படும் மலேசியா வீடியோ !
முடிவு:
நம் தேடலில், பாலஸ்தீனத்தின் மீது அனுதாபம் ஏற்படவைப்பதற்காக போரில் நடிக்கும் பாலஸ்தீனியர்கள் என்றுகூறி பரவும் வீடியோ தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது.