இஸ்லாமியர்கள் சீன கலாச்சாரத்திற்கு மாற வேண்டும் – புதிய சட்டம்.
பரவிய செய்தி
சீனாவில் வாழும் இஸ்லாமிய மக்கள் 5 ஆண்டுகளுக்குள் சீன கலாச்சாரத்திற்கு முழுமையாக மாறிவிட வேண்டும் என அந்த நாட்டில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
மதிப்பீடு
சுருக்கம்
சீனாவில் வாழும் இஸ்லாமிய மக்கள் சீன கலாச்சாரத்திற்கு மாறுவது தொடர்பான புதிய சட்டம் இயற்றப்பட்ட உள்ளது. இதன்படி, இஸ்லாமிய மக்கள் தொழுவது, நோன்பு இருப்பது, தாடி வைப்பது, ஹிஜாப் அணிவது சட்டப்படி குற்றமாகும் என சீனாவின் அதிகாரப்பூர்வ “ குளோபல் டைம்ஸ் “ பத்திரிகையில் வெளியாகி உள்ளது.
விளக்கம்
உலகமயமாக்கலில் மதச்சார்பற்ற தேசம் உருவாவதை பற்றி பேசினாலும் மதச் சண்டைகள் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. மதச் சண்டைகளால் சமூகத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாக அமைகிறது.
சீனா மிகப்பெரிய கம்யூனிஸ நாடாக இருந்தாலும் அவர்களின் கலாச்சாரத்திற்கு மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் அளிக்கின்றனர். ஆகையால், அந்த நாட்டில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், அரசியல் உள்ளிட்டவையில் பிற இன மக்களையும் சீன கலாச்சாரத்திற்குள் கொண்டு வர சீனமயமாதலை மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டாவது முறையாக சீனாவின் அதிபராக ஜின் பிங் பொறுப்பேற்ற உடன் சீனமயமாதல் அதிவேகத்தில் நடைபெற்று வருகிறது. இதன்படி, சீனாவில் இஸ்லாமிய மக்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் படிப்படியாக சீன கலாச்சாரத்திற்கு மாற புதிய சட்ட வரைவு விரைவில் இயற்றப்பட்ட இருக்கிறது.
2018-2022 ஆகிய ஐந்து ஆண்டுகளுக்குள் இஸ்லாமிய மக்கள் சீன கலாச்சாரத்திற்கு மாற வேண்டும் என்ற சட்டம் தொடர்பாக சீனாவின் பெய்ஜிங், ஷாங்காய், ஹனன் உள்ளிட்ட 8 மாகாணத்தைச் சேர்ந்த இஸ்லாமிய சங்கங்களின் பிரதிநிதிகள் அரசுடன் பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளனர். அதனை ஏற்றுக் கொண்டும் உள்ளனர்.
சீனமயமாதலின்படி, சீனாவில் இஸ்லாம் பழகுவது, படிப்பது குற்றமாகும். பெண்கள் ஹிஜாப் அணிவது, ஆண்கள் தாடி வளர்ப்பது, நோன்பு இருத்தல், தொழுகை செய்வது குற்றமாகக் கருதப்படும். இது தொடர்பாக கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.
சீனாவில் 2 கோடி இஸ்லாமிய மக்கள் இஸ்லாமிய பழக்கவழக்கங்கள் உடன் வாழ்வதாகக் கூறப்படுகிறது. இதில், ஜின் ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்குர் இஸ்லாமிய மக்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டும் என ஐநாவின் கருத்துக்கணிப்பு தெரிவிக்கின்றது .
உய்குர் இஸ்லாமிய மக்களை பிரிவினைவாதிகளாக மற்றும் தீவிரவாதிகளாக சீன அரசு கருதுகிறது. ஆகையால், ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்குர் பிரிவு மக்களை 5 ஆண்டுகளில் சீன கலாச்சாரத்திற்கு மாற்ற பயிற்சி அளிக்கப்படும் என அறிவித்து உள்ளனர்.
கம்யூனிஸ நாடான சீனாவில் இஸ்லாம் தவிர கத்தோலிக், புத்த மதம், டாவோயிசம், புரோட்டஸ்டன்ட் உட்பட 5 மதப் பிரிவுகள் உள்ளன. சீனாவின் சீன கலாச்சாரத்திற்கு மாற்றும் முயற்சி இஸ்லாமிய மதத்திற்கு மட்டும் என்ற பார்வை இருக்கும். அது தவறாகும்.
“ 2017 செப்டம்பர் மாதத்தில் சீனாவில் உள்ள ஐந்து முக்கிய மதங்களின் மன்றங்கள், சீன பண்பாட்டுடன் மதங்கள் ஒருங்கிணைந்த ஒன்றாக இருப்பதற்கு ஒருமித்தமாக சம்மதம் தெரிவித்ததாக ” குளோபல் டைம்ஸ் பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.