இஸ்ரேல் பிரதமர் தனது மகனை போர்முனைக்கு அனுப்பியதாகப் பரவும் பழைய புகைப்படம் !
பரவிய செய்தி
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு தமது மகனை ஒரு இராணுவ வீரனாக போர்முனைக்கு அனுப்பி இருக்கிறார்! (இஸ்ரேலில் கட்டாயம் இராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்பது சட்டம்!
மதிப்பீடு
விளக்கம்
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த 7ம் தேதி தொடங்கிய போர் 5 நாட்களைக் கடந்தும் நடந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது மகனை இராணுவ வீரராகப் போருக்கு அனுப்புகிறார் எனப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
நாட்டை காக்க,போருக்கு மகனை அனுப்பும் இஸ்ரேல் பிரதமர்,
நாட்டை சுரண்ட,பதவியில் மகனை அமர்த்த துடிக்கும் முதல்வர்.
உயிரை துச்சமென நினைத்து
களத்தில் இறங்கும் பிரதமர் மகன்.உரிமைகளை பறித்து,
மக்களை கலங்க வைக்கும் முதல்வர் மகன்.போர் வீரமகனை போற்று.
அக்கப்போர் மகனை தூற்று. pic.twitter.com/o4iEDS0bjl
— Karthik (@Karthik00800395) October 11, 2023
உண்மை என்ன ?
பரவக் கூடிய புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடியதில், அது 2014ம் ஆண்டு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இளைய மகன் அவ்னர் நெதன்யாகு (Avner Netanyahu) தனது இராணுவ சேவையைத் தொடங்கியபோது எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிந்தது.
‘I Stand In Support Of Israel’ என்னும் பேஸ்புக் பக்கம் அப்படத்தை 2014, டிசம்பர் 2ம் தேதி பதிவிட்டுள்ளது. அப்பதிவில் ‘அவ்னர் நெதன்யாகு இஸ்ரேல் பாதுகாப்புப் படையில் (ஐடிஎஃப்) ராணுவப் பணியைத் தொடங்கியுள்ளார்’ என்று பதிவிடப்பட்டுள்ளது.
மேற்கொண்டு அப்புகைப்படம் குறித்துத் தேடியதில் இஸ்ரேலின் பிரதமரின் இளைய மகன் அவ்னர் நெதன்யாகு இஸ்ரேல் பாதுகாப்புப் படையில் தனது இராணுவ சேவையைத் தொடங்கினார் என்று ‘டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்’ தளத்தில் 2014, டிசம்பர் 1ம் தேதி செய்தி வெளியாகியுள்ளது. மேலும் அப்புகைப்படத்தின் கீழே புகைப்படம் எடுக்கப்பட்ட தேதி, இடம் ஆகியவையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல் 2014, டிசம்பர் 30ம் தேதி வெளியிட்ட செய்தியில் IDF பயிற்சியின் போது அவ்னர் நெதன்யாகு லேசான காயம் அடைந்ததாக உள்ளது. அதில் உள்ள படத்தின் கீழே “பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா, அவர்களின் மகன் அவ்னர் ஐடிஎஃப் சேவையைத் தொடங்கத் தயாராகும்போது 2014, டிசம்பர் 1 அன்று எடுக்கப்பட்ட படம்” என்றுள்ளது.
இவற்றிலிருந்து இஸ்ரேல் பிரதமர் அவரது இளைய மகனை இராணுவத்திற்கு அனுப்பியது 2014, டிசம்பர் என்பது உறுதியாகிறது. அப்போது எடுக்கப்பட்ட படத்தினை தற்போதைய போருடன் ஒப்பிட்டு தவறாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு :
நம் தேடலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது மகனை போர்முனைக்கு அனுப்பினார் எனப் பரவக் கூடிய படம் தற்போது எடுக்கப்பட்டது அல்ல. அவரது இளைய மகன் அவ்னர் நெதன்யாகு 2014, டிசம்பரில் இராணுவ பயிற்சிக்குச் செல்லும்போது எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.