This article is from Sep 12, 2019

இறந்த பெண் திமிங்கலத்தின் வயிற்றில் 20 கிலோ பிளாஸ்டிக் !

பரவிய செய்தி

வயிற்றில் 20 கிலோ பிளாஸ்டிக் உடன் கர்ப்பமாய் இருக்கும் பெண் திமிங்கலத்தின் உடல் இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டது. மனிதர்கள் மிகவும் மோசமான உயிரினம்.

மதிப்பீடு

விளக்கம்

ஃயூடர்ன் பதிவின் கமெண்டில் ஃபாலோயர் ஒருவர் பதிவிட்ட மீம் பதிவில் ” வயிற்றில் 20 கிலோ பிளாஸ்டிக் உடன் கர்ப்பமாய் இருக்கும் பெண் திமிங்கலத்தின் உடல் இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டது ” எனக் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து, செய்தியின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்த்தோம்.

2019 ஏப்ரல் 2-ம் தேதி nationalgeographic இணையதளத்தில், ” இத்தாலி நாட்டின் சர்டினியா தீவின் போர்டோ சேர்வோவின் வெளிபுறத்தில் உள்ள சண்டி கடற்கரையில் இறந்த நிலையில் கர்ப்பமாய் இருக்கும் திமிங்கலத்தின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. விஞ்ஞானிகள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் திமிங்கலத்தின் கர்ப்பப்பை மற்றும் வயிற்றை வெட்டி பார்க்கும் பொழுது இறந்த திமிங்கல குட்டி உடன் தோராயமாக 50 பவுண்ட்(தோராயமாக 22 கிலோ) பிளாஸ்டிக் கழிவுகள் இருந்துள்ளது ” என வெளியாகி இருக்கிறது.

திமிங்கலத்தின் வயிற்றில் மூன்றில் இரண்டு பங்கு பகுதி அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்துள்ளன. ” இதற்கு முன்பாக இத்தனை எடையிலான பிளாஸ்டிக்கை கண்டதில்லை ” என கடல் சார்ந்த உயிரியல் அறிஞர் luca bittau தெரிவித்து உள்ளார்.

திமிங்கலத்தின் வயிற்றில் உணவுகள், நெளி ட்யூப்ஸ், ஷாப்பிங் பைகள், டிடெர்ஜென்ட் கவர்கள் உள்ளிட்டவை அடங்கி இருந்தாகவும், அந்த டிடெர்ஜென்ட் கவர்களில் உள்ள பார் கோடுகள் நன்றாக தெரிவதாகவும் நியூயார்க் டைம்ஸ் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட திமிங்கலத்தின் வயிற்றில் 88 பவுண்ட் பிளாஸ்டிக் இருந்துள்ளது. இந்தோனேசியாவில் அழுகிய நிலையில் இருந்த திமிங்கலத்தின் உடலில் 1000-க்கும் அதிகமாக வகைப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் துண்டுகள் இருந்தது. கடந்த ஆண்டு ஸ்பெயின் நாட்டின் ஸ்பெர்ம் வாலே திமிங்கலம் 60 பவுண்ட் அளவிலான பிளாஸ்டிக் குப்பைகளை செரிமானம் செய்ய முடியாமல் இறந்துள்ளது.

பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணையும், நீர் வளத்தையும் அழிப்பதோடு அதனை சார்ந்து வாழும் உயிரினங்களையும் அழித்து வருகிறது. மக்கள் பிளாஸ்டிக்கை நம்பியே பெரிதும் தினசரி வாழ்க்கையை நகர்த்துகின்றனர். ஆகையால், பிளாஸ்டிக் கழிவுகள் அழிக்க முடியாத அளவிற்கு உயர்ந்து வருகிறது.

பறவைகள், கடல்வாழ் உயிரினங்கள் அதிக அளவில் பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு செரிக்க முடியாமல் இறந்து வருகின்றனர். அது தொடர்பான காட்சிகளை புகைப்படங்கள், வீடியோக்கள் மூலம் காண்கிறோம். இவ்வுலகம் அனைத்து உயிரினங்களுக்குமானது என்பதை மனிதர்கள் தெரிந்து கொள்ள எத்தனை ஆண்டுகள் ஆகும் எனத் தெரியவில்லை.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader