திமுக போல் ஆட்சி நடத்தக்கூடாது என ஜெகன் மோகன் விமர்சித்தாரா?| ஃபேஸ்புக் பதிவு.
பரவிய செய்தி
எப்படி ஆட்சி நடத்தக்கூடாது என திமுகவை பார்த்து கற்றுக்கொள் என என் தந்தை ராஜசேகரரெட்டி கூறுவார் – ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.
மதிப்பீடு
விளக்கம்
ஆந்திர மாநிலத்தின் முதல்வரான ஒய்.எஸ்.ஆர் ஜெகன் மோகனின் செயல்பாடுகள் தமிழகத்தில் சமூக ஊடகத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சமூக ஊடகங்களில் ஜெகன் மோகனின் செயல்கள் வீடியோவாக, மீம்ஸ் ஆக பறந்து கொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு ஆதரவு பெருகி இருக்கிறது .
அவரின் ஆட்சியை மக்கள் பாராட்டி வரும் வேளையில் , ” எப்படி ஆட்சி நடத்தக்கூடாது என திமுகவை பார்த்து கற்றுக்கொள் என என் தந்தை ராஜசேகரரெட்டி கூறுவார் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ” கூறியதாக முகநூலில் சில தினங்களாக பதிவிட்டு வருகின்றனர். இதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து கூறுமாறு ஃபாலோயர் தரப்பிலும் கேட்கப்பட்டு இருந்தது.
உண்மை என்ன ?
2019-ம் ஆண்டு நடைபெற்ற ஆந்திர சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அநேகமான இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. ஒய்.எஸ்.ஆர் ஜெகன் மோகன் ரெட்டி தன்னுடைய முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவரும் , திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்பட முக்கிய அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.
இது தொடர்பாக, மே 30-ம் தேதி வெளியான செய்தியில் , ” தன்னுடைய பதவியேற்பு நிகழ்ச்சிக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பீகார் முதல்வர் நிதிஸ் குமார் , திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை தனிப்பட்ட முறையில் அழைத்ததாக ” வெளியாகி இருக்கிறது.
இதற்கு அடுத்து, ஆந்திர மாநிலத்தின் முதல்வராக பதவியேற்ற பிறகு ஜெகன் மோகன் ஆற்றிய உரையில், ” கடவுளின் ஆசிர்வாதத்தாலும், என்னுடைய வேண்டுதலாலும், மு.க.ஸ்டாலின் விரைவில் தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்பார் ” என மேடையில் பேசி உள்ளார். அது தொடர்பான செய்திகள் டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட செய்திகளில் வெளியாகி இருக்கிறது.
ஜெகன் மோகனிடம் அவரின் தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி திமுக போல் ஆட்சி நடத்தக்கூடாது எனக் கூறி இருந்தால் எதற்காக ஜெகன் மோகன் தன்னுடைய பதவியேற்பு விழாவிற்கு தனிப்பட்ட முறையில் ஸ்டாலினை அழைத்தார். மேலும், மக்கள் மத்தியில் மேடையில் ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வர் ஆவார் எனக் கூறி இருக்க தேவையில்லை.
அதேபோல், முகநூலில் பரவுவது போன்று ஜெகன் மோகன் திமுக கட்சியை விமர்சித்ததாக செய்திகளோ, பேட்டிகளோ என எங்கும் வெளியாகவில்லை. திமுகவை விமர்சித்து இருந்தால் ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் விதமாய் மாறி இருக்கும். ஆனால், அவ்வாறு எதுவும் நிகழவில்லை.
மேலும் படிக்க : ஜெகன் மோகன் ரயில்வே துப்புரவு பணியாளர்கள் சம்பளத்தை ரூ.18,000 ஆக உயர்த்தினாரா ?
மாறாக, தமிழக முகநூலில் மட்டுமே பதிவாகி இருக்கிறது. ஜெகன் மோகன் மற்றும் திமுக இடையே நல்ல நட்புறவு இருப்பதாகவே நிகழும் சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன. திமுக குறித்து வதந்தியை பரப்ப ஜெகன் மோகனையும் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.
முடிவு :
நம்முடைய தேடலில் , எப்படி ஆட்சி நடத்தக்கூடாது என திமுகவை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என தன் தந்தை கூறியதாக ஜெகன் மோகன் எங்கும் கூறவில்லை. சமூக வலைதளங்களில் பரவும் அப்படியான கருத்துக்கள் வதந்திகள் மட்டுமே.