இஸ்லாமியச் சிறுவனின் நெற்றியில் ஜெய் ஸ்ரீராம் என ஆர்.எஸ்.எஸ். காரர்கள் சூடு போட்டதாகப் பரவும் பொய்!
பரவிய செய்தி
சங்கீ நாய்கள் மனம் நலம் பாதிக்க பட்ட ஒரு இஸ்லாம் சகோதரன் நெற்றியில் கம்பிய நல்ல பழுக்க வைத்து ஜெய் ஸ்ரீ ராம் என்று எழுதுறான் அந்த இஸ்லாம் சகோவை விட பிஜேபி RSS நாய்கள் எவ்வளவு மனம் நலம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கான் வேதனை
மதிப்பீடு
விளக்கம்
கம்பியைப் பழுக்கக் காய்ச்சி மனநலச் சீர்வேண்டும் இஸ்லாமியச் சிறுவனின் நெற்றியில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக-வை சேர்ந்த சிலர் எழுதியதாக வீடியோ ஒன்று பரப்பப்படுகிறது. அந்த வீடியோவில் பின்னணி குரலிலும் இதே தகவல் சொல்லப்பட்டுள்ளது.
சங்கீ நாய்கள் மனம் நலம் பாதிக்க பட்ட ஒரு இஸ்லாம் சகோதரன் நெற்றியில் கம்பிய நல்ல பழுக்க வைத்து ஜெய் ஸ்ரீ ராம் என்று எழுதுறான் அந்த இஸ்லாம் சகோவை விட பிஜேபி RSS நாய்கள் எவ்வளவு மனம் நலம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கான் வேதனை@a48cbb7b672c40c@AalenOff @alagar_raghavan @rajubhai_DMK pic.twitter.com/KqFEBgu5jN
— Rajappa 3377 (@RajappaJeb55292) February 9, 2024
உண்மை என்ன?
பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம் மற்றும் முக்கிய வார்த்தைகளைக் கொண்டு இணையத்தில் தேடினோம். இச்சம்பவம் தொடர்பாக ‘ABP Live’ 2023, செப்டம்பர் 4ம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில், உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் மனநலச் சீர்வேண்டும் ஒருவரது நெற்றியில் ‘ஜெய் போலேநாத்’ என்று எழுதப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் இருவருமே ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பிரேம்நகரின் வசிக்கும் ஷதாப் என்பவர் டேனிஷின் நெற்றியில் ஜெய் போலேநாத் என எழுதியுள்ளார். பிறகு டேனிஷ் வீட்டுக்குச் சென்று நடந்த சம்பவத்தை அவரது குடும்பத்தினரிடம் கூறியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் புகார் அளிக்கும்படி கூறியதையடுத்து, பாதிக்கப்பட்டவரின் சார்பில் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். பின்னர் இரு குடும்பத்தினருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதால் புகாரைத் திரும்பப் பெற்றுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக ‘Prabhatkhabar’ தளத்தில் வெளியான செய்தியிலும் இதே தகவல்களைக் காண முடிகிறது.
பரேலி காவல் நிலையத்தின் அதிகாரப் பூர்வ எக்ஸ் பக்கத்தில் இருந்தும் இது தொடர்பாகப் பத்திரிக்கையாளர் ஒருவருக்கு 2023, செப்டம்பரில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், இச்சம்பவம் 5 நாட்களுக்கு முன்னர் ஷதாப் கான் என்பவர் தனது உறவினரின் நெற்றியில் மார்க்கர் (Marker) கொண்டு மதம் சார்ந்த வாக்கியத்தை எழுதியுள்ளார். தற்போது அது மங்கி அழியத் தொடங்கிவிட்டது. இது தொடர்பாகப் பாதிக்கப்பட்டவரின் தாயார் நடவடிக்கை எடுக்கப் புகார் எதுவும் அளிக்கவில்லை என்று கூறியுள்ளனர்.
இவற்றிலிருந்து இச்சம்பவம் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையில் ஏற்பட்டது தெளிவாகிறது. இதனை பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் செய்தார்கள் எனத் தவறாகப் பரப்பப்படுகிறது.
முடிவு :
நம் தேடலில், பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மனநலச் சீர்வேண்டும் இஸ்லாமியச் சிறுவனின் நெற்றியில் கம்பியைக் காய்ச்சி ‘ஜெய் ஸ்ரீராம்’ எனச் சூடு போட்டதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. இதில் பாதிக்கப்பட்டவர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் இருவருமே இஸ்லாமியர்கள்தான். மேலும் அது மார்க்கர் கொண்டு எழுதப்பட்டது என்பதையும் அறிய முடிகிறது.