ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பேசியதாக திமுகவினர் பரப்பும் பொய் செய்தி !
பரவிய செய்தி
தமிழர்கள் இந்துக்கள் அல்ல! ஆரிய சனாதன திணிப்பான இந்துத்வா கும்பல் உச்ச நீதிமன்றத்தில் வாதம்!
மதிப்பீடு
விளக்கம்
ஜல்லிக்கட்டிற்குத் தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் “ஒரு குறிப்பிட்ட மாநில மக்களின் பொழுதுபோக்கை விட இந்து மதத்தினர் தெய்வமாக வணங்கும் பசு மற்றும் காளை மாடுகளின் நலன்தான் முக்கியம்” என ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்ததாகத் தந்தி டிவி நியூஸ் கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
இதற்கு தமிழ்நாடு மக்களின் கருத்து என்னவாக இருக்கும்…? pic.twitter.com/Sh8tmDGXnh
— Anas தமிழ்நாடு🖤❤️ (@anasnagoor_mecc) December 7, 2022
தமிழர்கள் இந்துக்கள் அல்ல!
ஆரிய சனாதன திணிப்பான இந்துத்வா கும்பல் உச்சநீதி மன்றத்தில் வாதம்! pic.twitter.com/qq7CBDYGgJ— Maharajan sanjeevi (@MaharajanSanje2) December 8, 2022
இதனை திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணைச் செயலாளர் இசை முதற்கொண்டு பலரும் சமூகவளைத்தலங்களில் பதிவிட்டுள்ளனர்.
உண்மை என்ன ?
ஜல்லிக்கட்டு தடை விதிக்கப்பட்டதையடுத்து 2017ம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் மாபெரும் போராட்டங்கள் நடைபெற்றது. இதனையடுத்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதனை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் ஜல்லிக்கட்டைத் தடை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை கடந்த நவம்பர் மாதம் 23ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கினை விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் தமிழ்நாடு அரசு சார்பாக மூத்த வழக்குரைஞர் ராகேஷ் திவேதி வாதங்களை முன்வைத்து வருகிறார்.
பரவக்கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டில் ‘07.12.2022’ எனத் தேதி குறிப்பிடப்பட்டு உள்ளது. அன்றைய தேதியில் இந்த நியூஸ் கார்டினை தந்தி டிவி-யின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதா எனத் தேடினோம். அப்படி எந்த பதிவும் இல்லை.
கடந்த 6ம் தேதி, “விலங்குவதை தடுப்புச் சட்டத்தை இயற்றுவதற்கு சட்டப்பேரவைக்கு அதிகாரமுண்டு. உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு வாதம்” என்ற நியூஸ் கார்ட் பதிவிடப்பட்டுள்ளது.
அதே போல், கடந்த 7ம் தேதி, “பீட்டாவுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி” என்ற தலைப்பில் நியூஸ் கார்ட் பதிவிடப்பட்டுள்ளது. இதனைத் தவிர அன்றைய தேதிகளில் தந்தி டிவி சமூக வலைத்தளத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக எந்த நியூஸ் கார்டும் பதிவிடவில்லை.
இவ்வழக்கு விசாரணையில் டிசம்பர் 6ம் தேதி ஒன்றிய அரசு சார்பாக துஷார் மேத்தே (Solicitor General) வாதங்களை முன்வைத்துள்ளார். அதில், “பல்வேறு துறைகளுடன் ஆலோசித்து, அனைத்து அம்சங்களையும் ஆய்வுக்கு உட்படுத்திய பிறகே ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். எனவே ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.
முடிவு :
நம் தேடலில், ஒரு மாநில மக்களின் பொழுதுபோக்கை விட இந்து மதத்தினர் தெய்வமாக வணங்கும் பசு மற்றும் காளை மாடுகளின் நலன்தான் முக்கியம் என ஜல்லிக்கட்டுக்கு எதிராக ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் பேசியதாகப் பரவும் தந்தி டிவி நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.