This article is from Oct 20, 2019

ஜப்பானில் 24 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட சாலை | உண்மை என்ன ?

பரவிய செய்தி

ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய பேரிடரில் முக்கிய சாலை நிலச்சரிவால் சேதமடைந்த காரணத்தினால் போக்குவரத்திற்கு அவசரகால சாலை ஒன்றை 24 மணி நேரத்தில் கட்டியுள்ளனர்.

மதிப்பீடு

விளக்கம்

அடடே ! ஜப்பான் நாட்டில் சாலை, மேம்பாலங்கள் உள்ளிட்ட பணிகளை மிக விரைவாக செய்து முடிக்கிறார்களே எனும் தகவல்களை பலரும் பேசி இருப்பதை கேட்டு இருப்பீர்கள். அதில் ஒன்றாக, ஜப்பானில் அவசரகால சாலை ஒன்றை 24 மணி நேரத்திலேயே அமைத்துள்ளதாக மீம் பதிவு ஒன்று பரவி வருகிறது.

மேற்காணும், U-வடிவ சாலை பாலத்தை 24 மணி நேரத்தில் உருவாக்கி நிலச்சரிவால் உண்டான போக்குவரத்து பாதிப்பை சரி செய்திருக்கிறார்கள் என செய்திகள், புகைப்படங்கள் இந்திய அளவில் பகிரப்பட்டு வருகிறது.

மேலும், இந்த புகைப்படத்தை பகிர்ந்து உங்கள் நாட்டில் இதுபோல் சாலையை அமைக்க எத்தனை நாட்கள் ஆகும் என கேள்விகளை கேட்கும் பதிவுகளும் வலம் வருகின்றன. அதற்கு கிண்டலான முறையில் பலர் பதில் அளித்து வருகிறார்கள். எனவே, ஜப்பானின் அவசரகால சாலை குறித்த உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்த்தோம்.

உண்மை என்ன ? 

புகைப்படங்களை வைத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்த பொழுது பல இணையதளங்கள், சமூக ஊடகங்களின் பதிவுகளே பிரதானமாக நமக்கு கிடைத்தன. இருப்பினும், ஜப்பான் சாலை குறித்து தேடிய பொழுது Goo என்ற இணையதளத்தில் புகைப்படத்துடன் செய்திகள் கிடைத்து இருந்தது.

அதில், ” 2018 ஜூலை மேற்கு ஜப்பானில் பெய்த கனமழை காரணமாக ஃபுகுரி எல்லையில் கடலுக்கு அருகே இருந்த தேசிய நெடுஞ்சாலை-35 சேதமடைந்து உள்ளது. அவசரகால சாலை பணிகள் ஜூலையில் தொடங்கி அக்டோபர் 31-ம் தேதி வரையில் நான்கு மாதங்கள் இடைவெளியில் முழு பணிகளும் முடிவடைந்து திறக்கப்பட்டு உள்ளன ” எனக் வெளியாகி இருக்கிறது.

இதுபோன்று, 2018 நவம்பர் 1-ம் தேதி fukuishimbun.co எனும் இணையதளத்தில் ” The U-shaped road is completed and national road traffic resumes ”  என்ற தலைப்பில் வெளியான செய்தியிலும் வைரல் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.

Youtube video archived link  

ஃபுகி நகரத்தின் Akasaka-cho மற்றும் Ikura-cho ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட தேசிய நெடுஞ்சாலை ஆனது 2018 ஜூலை 5-8 தேதிகளில் பெய்த கனமழையால் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு போக்குவரத்தை சரி செய்ய ஜூலை மாதத்தில் இருந்து பணிகள் துவங்கி அக்டோபர் இறுதியில் பணிகள் முடிவடைந்து சாலை திறக்கப்பட்டு உள்ளது.

Twitter post archived link 

2018-ல் ஜப்பான் நாட்டின் செய்தித்தாளான Fukuinp உடைய ட்விட்டர் பக்கத்தில் தற்காலிகமாக உருவாக்கப்பட்ட சாலையின் புகைப்படத்துடன் கூடிய செய்தியை வெளியிட்டு இருக்கிறது.

நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பிறகு எத்தனை நாட்கள் அல்லது மாதங்களில் தற்காலிக சாலை பாலம் உருவாக்கப்பட்டது என்ற விவரம் செய்தியில் அளிக்கப்படவில்லை. ஆனால், 2018 ஜூலை மாதம் சாலை சேதமடைந்த பிறகு அக்டோபர் மாதமே தற்காலிக சாலை பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஆக, ஒரே நாளில் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வரவில்லை என்பதை அறிய முடிகிறது.

மேலும் படிக்க : ஜப்பான் சாலையில் ஏற்பட்ட ராட்சத குழி 2 நாட்களிலேயே சீரமைக்கப்பட்டதா ?

சில ஆண்டுகளுக்கு முன்பாக ஜப்பான் நாட்டின் சாலையில் ஏற்பட்ட ராட்சத குழியை இரண்டே நாட்களில் சரி செய்ததாக உலக அளவில் வைரலாகியது. அதை குறித்தும் விரிவாக நாம் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader