ஜப்பானின் மின்துறை அமைச்சர் என்று பரவிய படத்தில் இருப்பர் யார் ?

பரவிய செய்தி
ஜப்பானில் 20 நிமிடங்கள் மின்தடை ஏற்பட்டதற்காக மக்களுக்கு முன்பாக 20 நிமிடங்கள் குனிந்து நிற்கிறார் ஜப்பானின் மின்துறை அமைச்சர்.
மதிப்பீடு
விளக்கம்
பல்வேறு அழிவுகளுக்கு பின்னரும் வளர்ந்த நாடுகளின் பட்டியலில் ஜப்பான் தலை சிறந்த நாடாக விளங்குகிறது. உழைப்பால் உயர்ந்த ஜப்பான் தேசத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளில் ஏதேனும் தவறுகள் நடந்தால், அது தொடர்பான துறையைச் சேர்ந்தவர்களே மன்னிப்புக் கோரும் அதிசயம் நிகழ்கிறது என்று பலரும் பேசும் விதத்தில் ஆச்சரியமூட்டும் செய்தி உலாவுகிறது.
ஜப்பானில் உள்ள ஒரு கிராமத்தில் 20 நிமிடங்கள் ஏற்பட்ட மின்தடைக்காக, அந்த தவறுக்கு பொறுப்பேற்று ஜப்பான் நாட்டின் மின்துறை அமைச்சர் மக்களின் முன்பாக 20 நிமிடங்கள் தலைகுனிந்து நின்றுள்ளார். தவறுகள் இனி நடக்காத வண்ணம் இதுபோன்று செய்ததாக கூறப்படுகிறது. இந்த செய்தி சில ஆண்டுகளாக ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களிலும் பரவி உலகம் முழுவதும் வைரலாகியவை.
2015 ஆம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி ஹோண்டா மோட்டார் நிறுவனத்தின் புதிய ப்ரெசிடென்ட் மற்றும் CEO-வாகTakahiro Hachigo பொறுப்பேற்றுக் கொண்டார். ஜப்பானின் பிரபலமான ஆட்டோமேக்கர் நிறுவனத்தின் தலைமை பதவியை டோக்கியோவில் உள்ள அதன் தலைமையகத்தில் முறையாக ஏற்றுக் கொண்ட பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அதில், அனைவருக்கும் முன்பாக தலைகுனிந்து (நம் ஊரில் வணக்கம் சொல்வது போன்று) மரியாதை அளித்துள்ளார்.
Takahiro Hachigo 1989-ல் ஹோண்டா நிறுவனத்தில் தனது பணியை துவங்கினார். Takahiro தலைகுனிந்து மரியாதை செலுத்திய போது எடுக்கப்பட்ட புகைப்படங்களே இவை. அதில், அவருக்கு பின்னால் ஹோண்டா நிறுவனத்தின்லோகோ(logo) இடம்பெற்றுள்ளன. அதன் பிறகு அவர் அமர்ந்திருக்கும் மற்றொரு படத்திலும் ஹோண்டா நிறுவனத்தின் லோகோ இருப்பதை காணலாம்.
கிராமத்தில் மின்தடை ஏற்பட்டதற்காக மின்துறை அமைச்சர் குனிந்து நின்றார் என்று சமூக வலைத்தளங்களில் கூறி வந்தது ஹோண்டா நிறுவனத்தின் ப்ரெசிடென்ட் என்பது தெளிவாகிறது. அவருக்கு பின்னால் இருந்த ஹோண்டா நிறுவனத்தின் லோகோக்களை மறைத்து இச்செய்தியைப் பரப்பியுள்ளனர்.
சில இணையதளங்கள் தங்கள் தளத்தின் பார்வையாளர்கள் எண்ணிகையை அதிகரிக்கச் செய்ய ஒரு கதையை கூறி Takahiro Hachigo படத்தை பயன்படுத்தி உள்ளனர். இதையறியாமல், பலரும் இந்த புரளி செய்தியை உண்மை என நினைத்து இன்றுவரை பகிர்ந்து வருகின்றனர்.