ஜப்பானில் மனிதக் கறி விற்பனையா ?

பரவிய செய்தி
ஜப்பானிலுள்ள ” சாப்பாட்டு சகோதரர்கள் ” எனும் உணவகம் ஒன்று உலகிலேயே முதன் முறையாக அந்த நாட்டு அரசின் அனுமதியுடன் மனித கறி விற்பனை செய்து வருகிறது.ஜப்பான் அரசு சில நாட்களுக்கு முன்பு இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வழங்கப்பட்டவுடன் பலரும் அந்த உணவகத்துக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனராம். இந்த மனித கறியில் செய்யப்பட்ட உணவுகள் பல விலைகளில் கிடைக்கிறது.100 டொலரிலிருந்து அதிகபட்சமாக 1193 டொலர் வரை உணவுகள் கிடைக்கின்றதாக கூறப்படுகிறது.இதில் முக்கியமானவொரு விடயம் என்னவெனில், இந்த உணவகத்திற்கு எவ்வாறு மனித இறைச்சி கிடைக்கின்றது என்ற விடயத்தையும் அந்த உணவகம் வெளிப்படுத்தியுள்ளது.அதன் படி ஏற்கனவே இறந்த பின் உடல் விற்பனைக்கு என்று கூறியவர்களின் உடல்களை மட்டுமே அவர் வாங்கி சமைப்பதாக தெரிவித்துள்ளனர்.ஒரு உடலை இவர்கள் 35,799 கொடுத்து கொள்வனவு செய்கின்றனர். அத்தோடு 30 வயதிற்கு குறைவான நோயினால் பாதிக்கப்படாத உடல்களையே கொள்வனவு செய்கிறார்களாம்.இதனையடுத்து ‘பன்றி கறி போலவே மனித கறியும் இருப்பதால் எந்த வித வித்தியாசமும் இன்றி சுவையாக இருப்பதாகவும், மிகவும் மசாலா தடவி வித்தியாசமாக இருக்கின்றது ‘என அங்கு வந்து உணவருந்திய மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
மதிப்பீடு
சுருக்கம்
ஜப்பானில் மனிதக் கறி விற்பனை செய்வதாகக் கூறியச் செய்தி ஸ்பானிஷ் நாட்டின் வலைத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. மேலும், இது தொடர்பான படங்கள் லண்டனில் ரெசிடென்ட் ஈவில் 6 வீடியோ கேமின் விளம்பரத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டவை.
விளக்கம்
உலகில் நாளுக்கு நாள் மாமிசம் உண்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், பின்வரும் காலங்களில் மனிதக் கறி உண்ணும் நிலைக்கு நாம் தள்ளப்படுவோம் என்று பலர் கருத்துக்களை கூறி வந்தனர்.
அதை மெய்யாக்கும் வகையில் ஜப்பானில் உள்ள உணவகம் ஒன்று அரசின் அனுமதி பெற்று மனிதக் கறியை விற்பனை செய்வது போன்ற படங்கள் முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஜப்பான் நாட்டின் உணவகம் ஒன்றில் மனிதக் கறிகளை விற்பனைச் செய்வதாகக் கூறிப் பரவி வரும் செய்தியானது உண்மையல்லவே. இச்செய்தியானது, ஸ்பானிஷ் நாட்டைச் சேர்ந்த La Voz Populars என்ற வலைதளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. அதில், ஜப்பானின் டோக்யோ நகரில் மனிதக் கறியை விற்பனைச் செய்கிறார்கள் என்று கேளிக்கையாக கட்டுரையைப் பதிவிட்டுள்ளனர். அந்த குறிப்பிட்ட வலைதளம், நகைச்சுவைக்காக உண்மைத்தன்மையற்றச் செய்திகளை கட்டுரைகளாக வெளியிடுபவர்கள்.
இது ஒருபுறம் இருக்க, மனிதக் கறியை விற்பனை செய்வதாகக் கூறிய படங்கள் அனைத்தும் லண்டனை நகரைச் சேர்ந்தவை. ஆம், உலகப் புகழ்பெற்ற “ ரெசிடென்ட் ஈவில் ” கதையைத் தொடர்புடைய ரெசிடென்ட் ஈவில் 6 என்ற வீடியோ கேமை பிரபலப்படுத்த அதற்காக புதுவித விளம்பர யுக்கியை கையாண்டுள்ளார்கள். வீடியோ கேமை விளம்பரப்படுத்த, மனிதர்களை சாம்பிஸ் உண்பது போன்று மனிதக் கறியை தனித்தனியாக விற்பனை செய்ய முடிவெடுத்தனர்.
ஆனால், அவை உண்மையான மனிதக் கறிகள் அல்ல. ஆடு, மாடு, பன்றி போன்ற விலங்குகளின் கறிகளை வைத்து மனித உடல் உறுப்புகள் போன்று உருவாக்கியுள்ளனர். இதற்கென பிரத்யேகமாக கிழக்கு லண்டனில் உள்ள பிரபலமான ஸ்மித்ஃபீல்ட் இறைச்சி சந்தையில் ஓர் விற்பனை நிலையத்தை திறந்தனர். பிரத்யேகமாக உருவாக்கப்பட்டதாக இருந்தாலும், அதில் கைகள், கால்கள், இடுப்பு துண்டங்கள், விலா எலும்புகள் மற்றும் சவக்கிடங்கு அறை போன்றவை உண்மையானவை போன்று காட்சியளித்தன.
கை, கால்கள் போன்ற கறிகள் பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு விற்கப்பட்டன. இதில் கைகள் 5.99 பவுண்டுகளுக்கும், கால்கள் 6 பவுண்டுகளுக்கும் விற்பனையாகின. இந்த விசித்திரமான விற்பனை நிலையத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்று இருந்தபோதிலும் இரண்டு நாட்கள் மட்டுமே விற்பனை செய்து வந்தனர். ஜப்பான் நாட்டில் மனிதக்கறியை சமைத்து விற்பனை செய்யும் உணவகங்கள் ஏதுமில்லை.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.