This article is from Jul 13, 2018

ஒரு மாணவிக்காக ரயில் சேவை வழங்கிய ஜப்பான் ரயில்வே..!

பரவிய செய்தி

ஜப்பானில் ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஒரு ரயில் நிலையம் செயல்படுகிறது. நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள தீவுப்பகுதியில் Kami-shirataki என்ற ரயில் நிலையம் இருக்கிறது. நகரை விட்டு தொலைவில் அமைந்துள்ள இதை நிரந்தரமாக மூடிவிட மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. ஆனால், இந்த ரயில் நிலையத்தில் இருந்து தினமும் பள்ளி மாணவி ஒருவர் பள்ளிக்கு சென்று திரும்புகிறார். இதனால் ரயில் நிலையத்தை மூடும் முடிவைத் தள்ளிவைத்து விட்டது. ஜப்பான் அரசு ஒரே மாணவியின் கல்விக்காக ரயில் நிலையத்தை மூடாமல் நடத்திவரும் ஜப்பான் அரசுக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிகின்றன.

மதிப்பீடு

சுருக்கம்

Kami-shirataki உள்பட மூன்று ரயில் நிலையங்களை மூட ஜப்பான் ரயில்வே நிர்வாகம் 2015-ல் முடிவெடுத்தது. மாணவியின் கல்விக்காக மார்ச் 2016 வரை ரயில் சேவை இருந்தது உண்மையே.

விளக்கம்

ஜப்பான் நாட்டில் ஒரு மாணவியின் கல்விக்காக ரயில் சேவையை வழங்கி வருகிறது ஜப்பான் அரசு என இணைய பக்கங்கள், சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. தீவின் தொலைதூர கிராமத்தில் வசிக்கும் ஒரு மாணவியின் கல்விக்காக ஜப்பான் ரயில்வே இயங்குகிறது. ஆனால், இங்கோ கிராமப்புற மாணவர்களின் கல்விக்காக ஒரு பேருந்து வசதியைக் கூட ஏற்படுத்தி தராமல் உள்ளனர் என்று விமர்சனம் எழுந்தது.

ஒரு மாணவிக்காக தினமும் இயங்கும் ஜப்பான் ரயில்வே பற்றிய செய்தி உலகம் முழுவதும் காற்றை போன்று பரவி பாராட்டுக்களை பெற்றது. அதோடு பள்ளி மாணவி வசிக்கும் இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகியது. எனினும், அதில் சில தவறான தகவல்களும் இணைக்கப்பட்டுள்ளன.

Kyu-shirataki station :

மாணவி தினமும் பள்ளி செல்வதற்கு காத்திருக்கும் ரயில் நிலையம் Hokkaido என்ற தீவில் உள்ள Kami-shirataki எனக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அது Kami-shirataki அல்ல Kyu-shirataki station ஆகும்.

Hokkaido ரயில்வே நிர்வாகம் மக்கள் அதிகம் பயன்படுத்தாத மூன்று பகுதியில் இயங்கும் ரயில் சேவையை நிறுத்திக் கொள்வதாக 2015 ஜூலை 21 அன்று அறிவித்தது. பல ஆண்டுகளுக்கு முன் அல்ல. இதன்படி, Kami-shirataki, Kyu-shirataki மற்றும் shimo shirataki  ஆகிய ஸ்டேஷன்களை மூடுவதாக முடிவெடுத்தது.

Kyu-shirataki பகுதியில் வசிக்கும் 17 வயதான ஹராடா கனா என்ற மாணவி Hokkaido engaru high school-ல் படித்து வந்துள்ளார். மூன்று வருடங்களாக கனா தினமும் Kyu-shirataki ஸ்டேஷனில் 7.15 மணி ரயில் மூலம் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். மாணவி மட்டுமின்றி உள்ளூர் மக்களும் ரயிலை பயன்படுத்தி உள்ளனர். நகரப்பகுதிக்கு செல்ல அரிதாக ரயிலை பயன்படுத்தி உள்ளனர். ஆனால், மாணவி மட்டுமே தினமும் பள்ளிக்கு செல்வதால் தொடர்ச்சியாக ரயிலை பயன்படுத்தி வந்துள்ளார்.

பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் ரயில் சேவையை நிறுத்திக் கொள்ள ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்த பிறகு பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் ரயில்வே நிர்வாகத்திடம் அளித்த வேண்டுகோளை அடுத்து2016 மார்ச் வரை ரயில் சேவை வழங்கப்படும் என அறிவித்தது. இதையடுத்து, மாணவி கனா பள்ளி சென்று திரும்புவதற்கு இரு முறை ரயில் இயக்கப்பட்டது.

மூன்று ஆண்டுகளாக ஒரு மாணவிக்காக ஜப்பான் அரசு ரயில் சேவை இயங்குகிறது என்றுக் கூறுவது தவறு. ஜப்பானில் ரயில்வே துறை தனியார்மயம் ஆக்கப்பட்டுள்ளது. லாபமற்ற இடங்களுக்கு ரயில் சேவை வழங்குவதை நிர்வாகம் நிறுத்தி வருகிறது. எனினும், Hokkaido தீவின் மூன்று ஸ்டேஷனை மூட மார்ச் 2016 வரை காலம் நீட்டித்தது. இதற்கு மாணவர்களின் படிப்பே காரணமாக கூறப்பட்டது.

மாணவி கனா உடைய உயர்நிலை பள்ளி படிப்பு அவர்கள் அளித்த மார்ச் மாதத்தோடு முடிவடைந்தது. ஆகையால், ரயில் சேவை வழங்கப்பட்ட காலத்தை பயன்படுத்தி பள்ளி படிப்பை முடித்துக் கொண்டார். கனாவின் பள்ளி படிப்பு முடிந்த உடன் மார்ச் 2016-ல் ரயில் சேவையும் முடிந்தது. தற்போது Hokkaido தீவில் புல்லட் ரயில் சேவையை தொடங்கி உள்ளது ஜப்பான் ரயில்வே.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader