“அழிந்துவிட்ட ஜடாயு பறவைகள்” கூட்டம் அயோத்திக்கு வருவதாகப் பரப்பப்படும் பொய் !
பரவிய செய்தி
அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிஷேகம் நெருங்குவதை ஒட்டி… அழிந்து போன இனமாக கருதப்பட்ட ஜடாயு பறவைகள் கூட்டம் கூட்டமாக அயோத்திக்கு வருகை தருவது இயற்கையின் அதிசயங்களில் ஒன்று..
மதிப்பீடு
விளக்கம்
ஜனவரி 22 அன்று அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் திறக்கப்படவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பலரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் அழிந்துவிட்டதாக சொல்லப்பட்ட ஜடாயு பறவைகள் அயோத்தியை நோக்கி படையெடுத்து செல்வதைப் பாருங்கள் என்று கூறி 9 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இவை ஆக்சிபிட்ரைடே (Accipitridae) என்ற குடும்பத்தைச் சேர்ந்த பிணந்திண்ணி கழுகள் (Vultures) என்பதை அறிய முடிந்தது.
மேலும் இது குறித்து தேடியதில், பரவி வரும் இதே வீடியோ Ma32oul என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் “செயிண்ட் தெரேஸ் ஆலயத்தில் உள்ள கோர்டோபா சாலையில் பல கழுகுகள் இருப்பதைப் பரவும் வீடியோ காட்டுகிறது” என்று குறிப்பிட்டு கடந்த 2022 பிப்ரவரி 27 அன்று பதிவிட்டு உள்ளனர்.
இந்த வீடியோவில், செயிண்ட் தெரேஸ் ஆலயத்தில் உள்ள கோர்டோபா சாலையில் இந்த கழுகுகள் இருப்பதாக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. அப்பகுதி அமெரிகாவின் அலாஸ்கா பகுதியில் உள்ளது.
மேலும் தேடியதில், இந்த வீடியோ கடந்த 2021-லும் சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளதைக் காண முடிந்தது. ஆனால் இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் அதில் குறிப்பிடப்படவில்லை. இதன் மூலம் பரவி வரும் வீடியோ கடந்த 2021-ல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க: இராமாயணத்தில் வரும் ஜடாயு பறவை கேரளாவில் காணப்பட்டதா ?
மேலும் படிக்க: ஹனுமனின் கதாயுதம் இலங்கையில் தோண்டி எடுக்கப்பட்டதா ?
இதற்கு முன்பும் இராமாயணம் குறித்து பல செய்திகள் தவறாகப் பரவின. அது குறித்தும் ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகளாக வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: இலங்கையில் சீதை அமர்ந்த பாறை யோகி ஆதித்யநாத்திடம் அளிக்கப்பட்டதா ?
முடிவு:
நம் தேடலில், அழிந்துவிட்ட ஜடாயு பறவைகள் அயோத்திக்கு வருகின்றன எனப் பரவும் வீடியோ தவறானது. இந்த வீடியோ கடந்த 2021-ல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது என்பதையும் அறிய முடிகிறது.