வெட்டுக் காயத்துடன் இருக்கும் உடல் ஜெயராஜ், பென்னிக்ஸ் இல்லை| யார் இவர் ?
பரவிய செய்தி
சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் இறந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் உடல்கள் பிரேதபரிசோதனையில் எடுக்கப்பட்டதாக பரவும் புகைப்படங்கள்.
மதிப்பீடு
விளக்கம்
சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் தாக்கப்பட்டு இறந்த வணிகர்கள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் தொடர்பாக தவறான புகைப்படங்கள், வீடியோக்கள், பொய் கதைகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. அதன் தொடர்ச்சியாக தற்போது ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இறந்த உடலைகளை பிரேதப்பரிசோதனை செய்யும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என இரத்த காயத்துடன் இருக்கும் சில புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கொடூரமான இரத்த காயத்துடன் இருக்கும் இறந்தவர் உடலின் புகைப்படத்தை வைத்து ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் என செய்தி ஆடியோ உடன் கூடிய வீடியோ Mardhu K எனும் முகநூல் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோ 4.5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்று வைரலாகி வருகிறது. இரத்தத்துடன், கொடூரமான காயங்கள் இருப்பதால் புகைப்படங்களை இங்கு பயன்படுத்தவில்லை.
உண்மை என்ன ?
வைரலாகும் புகைப்படத்தில் இருக்கும் நபர் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் போன்று இல்லை. மேலும் , உடல் முழுவதும் கத்தியால் குத்திய வெட்டுக் காயங்களே அதிகமாக உள்ளன. ஆகையால், புகைப்படத்தைக் கொண்டு தேடுகையில் செய்தித்தாள் ஒன்றில் அதே புகைப்படத்துடன் வெளியான செய்தி கிடைத்தது.
” பவானியில் பயங்கரம், சூதாட்ட விடுதி நடத்தி வந்தவர் கத்தியால் குத்திக் கொலை ” என்ற தலைப்பில் வெளியான செய்தியை வைத்து தேடுகையில் மாலைமலர், தினத்தந்தி உள்ளிட்ட இணையதளங்களில் அந்த செய்தி இடம்பெற்று இருக்கிறது.
50 வயதான மெட்ராஸ் மணி என்கிற மணிகண்டன் பவானியில் சில ஆண்டுகளாக சூதாட்ட விடுதி நடத்தி வந்துள்ளார். பின்னர் அதை மூடி விட்டார். எனினும், பல்வேறு இடங்களுக்கு சென்று சூதாடுவதை தொழிலாக செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. மணிகண்டன் தன் பைக்கில் சென்ற போது மர்மநபர்கள் தடுத்தி நிறுத்தி அவரது முகத்தில் மிளகாய் பொடியை தூவி கத்தியால் உடலில் கை, கழுத்து, முதுகு, மார்பு என சரமாரி குத்தியுள்ளார்கள். இதனால் அவர் உயிரிழந்துள்ளார். அவரின் உடல் பவானி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக ஜூலை 2-ம் தேதி வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே இரண்டு கொலை வழக்கில் சிறை சென்று வந்ததாகவும்.கூறப்படுகிறது. அவரின் உடல் மருத்துவமனையில் இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களே தற்போது தவறாக வைரலாகி வருகின்றன.
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக போலிச் செய்திகளை பரப்பினால் வழக்கு என காவல்துறை எச்சரிக்கை என வெளியான பத்திரிகை தகவலை யூடர்ன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தோம். அதில் பரவும் தவறான புகைப்படங்கள் குறித்து விளக்கம் அளித்து இருந்தனர்.
சாத்தாங்குளம் வழக்கு தொடர்பாக போலி செய்தி பரப்பினால் வழக்கு. காவல்துறை எச்சரிக்கை #youturn #FactCheck pic.twitter.com/mxuYXCaf2V
— youturn (@youturn_in) July 4, 2020
ஜூலை 4-ம் தேதி ஜெயராஜ், பென்னிக்ஸ் பிரேதபரிசோதனை படங்கள் உண்மையா ? சிபிசிஐடி அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தால் மக்கள் செய்தி மையம் சமூக வலைத்தளங்களில் நீக்கிவிடும், வருத்தமும் தெரிவிக்கும் என அறிக்கை வெளியிட்டு இருந்தனர்.
இந்நிலையில், மருத்துவ அறிக்கையோடு முரண்பட்ட புகைப்படங்களை வெளியிட்டது தொடர்பாக மக்கள் செய்தி மையத்துக்கு சிபிசிஐடி தரப்பில் இருந்து விளக்கம் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதாக செய்தியில் வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நமது தேடலில், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உடைய பிரேதபரிசோதனை என பரப்பப்படும் புகைப்படங்கள் தவறானவை. அப்புகைப்படங்களில் இருப்பது பவானியில் கொலை செய்யப்பட்ட மணிகண்டன் உடைய உடல் என அறிய முடிகிறது.