ஜேஎன்யூ-வில் மாணவிகள் தாக்கப்பட்டது போல் நடிப்பதாக வதந்தியை பதிவிட்ட காயத்ரி ரகுராம் !
பரவிய செய்தி
Continuity மிஸ். இயக்குனர் சரியில்லை இயக்குனரை மாற்றவும். #JNU
மதிப்பீடு
விளக்கம்
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில்(ஜேஎன்யூ) பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிசத்தைச்(ஏபிவிபி) சேர்ந்த மாணவர்களுக்கும், தேசிய மாணவர் சங்கம் மற்றும் இடதுசாரி மாணவர்களுக்கும் இடையே நிகழ்ந்த கடும் மோதல் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராம நவமியை முன்னிட்டு ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தின் காவேரி விடுதியில் அசைவ உணவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏபிவிபியினர் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், விடுதி உணவகத்தின் செயலாளரையும் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்கியதாகவும் ஜே.என்.யூ மாணவர் சங்கத் தலைவர் தெரிவித்து இருந்தார். அதேபோல், ஏபிவிபியைச் சேர்ந்த மாணவர்கள் ராம நவமி பூஜை செய்ய விடாமல் இடதுசாரியினர் தாக்கியதாக ஏபிவிபி தரப்பு குற்றம்சாட்டியது.
இப்படி வலதுசாரி மற்றும் இடதுசாரி ஆதரவு மாணவர்களின் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பல மாணவர்களுக்கு பலத்த காயங்களும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பல்கலைக்கழகத்தில் பதற்றமான சூழல் உருவானது.இந்நிலையில், ஜேஎன்யூ-வில் நடைபெற்ற தாக்குதலில் காயங்கள் ஏற்பட்டது போன்று போலியாக நடிப்பதாக இரு மாணவிகள் தாக்கப்பட்ட நிலையில் இருக்கும் புகைப்படங்களை தமிழக பாஜகவின் காயத்ரி ரகுராம் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். அதாவது, முதல் புகைப்படத்தில் தலையில் அடிபட்ட மாணவி அடுத்த புகைப்படத்தில் காயமின்றி இருப்பதாக காண்பிக்கப்பட்டு உள்ளது.
உண்மை என்ன ?
இடதுசாரி ஆர்வலர் கவிதா கிருஷ்ணன் என்பவர், ” ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்களால் ஜேஎன்யூ-வில் தாக்கப்பட்ட அக்தரிஸ்தா அன்சாரி மற்றும் மாதுரிமா குந்து ” எனக் கூறி வைரலாகும் மாணவிகள் தலையில் இரத்தத்துடன் மற்றும் மயக்க நிலையில் இருக்கும் புகைப்படங்களை ஏப்ரல் 10-ம் தேதி இரவு 8.52க்கு பதிவிட்டு இருக்கிறார்.
I have been discharged from AIIMS and i am better now. Thanks to everyone for checking on me.
The fight against the Sanghi goons and fascist forces will go on.
Inquilab Zindabad.#ArrestSanghiGoons— Akhtarista Ansari (@AktaristaAnsari) April 10, 2022
அக்தரிஸ்தா அன்சாரி உடைய ட்விட்டர் பக்கத்தை ஆராய்கையில், ஏப்ரல் 11-ம் தேதி காலை நான்கு மணிக்கு, எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன். இப்போது நலமாக உள்ளேன் ” என ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
See the time when the photos were taken. A clear time gap of 6 minutes. I got unconscious after being hit. After I got control over myself, and we started moving out, Akhtarista was hit by a big rock.
Down with ABVP attack!
Right to Food Zindabad! pic.twitter.com/cR8hcrJlFh— Madhurima Kundu (@madhurima_k_) April 11, 2022
தங்களை பற்றி பரவும் வதந்தி குறித்து ஏப்ரல் 11-ம் தேதி மாதுரிமா குந்து தன் ட்விட்டர் பக்கத்தில், ” புகைப்படங்கள் எடுக்கப்பட்ட நேரத்தைப் பாருங்கள். தெளிவான நேர இடைவெளி 6 நிமிடங்கள். அடிபட்ட பிறகு நான் மயக்கமடைந்தேன். நான் என்னை கட்டுப்படுத்திக் கொண்டு அங்கிருந்து வெளியேறிய போது அக்தரிஸ்தா பெரிய கல்லால் தாக்கப்பட்டார் ” என இரு புகைப்படங்கள் எடுக்க நேரத்தையும் பதிவிட்டு இருக்கிறார்.
முதலில் அடிபட்ட மாதுரிமா குந்து(நீலநிற குர்தா) காவேரி விடுதியில் மயக்க நிலையில் இருக்கும் போது 8.15 மணிக்கு புகைப்படம் எடுக்கப்பட்டது. அதன்பிறகு அவர்கள் வெளியே வரும் போது அக்தரிஸ்தா மீது கல் எறிந்ததால் தலையில் காயம் ஏற்பட்ட போது 8.21 மணிக்கு புகைப்படம் எடுக்கப்பட்டு உள்ளது.
முடிவு :
நம் தேடலில், ஜேஎன்யூ-வில் மாணவிகள் தாக்கப்பட்டது போல் போலியாக நடிப்பதாக தமிழக பாஜகவின் காயத்ரி ரகுராமன் பகிர்ந்த தகவல் வதந்தியே.
இரு மாணவிகளும் தாக்கப்பட்டு உள்ளனர். மாதுரிமா குந்து என்பவர் மயக்க நிலையில் இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படமே முதலில் எடுக்கப்பட்டது. அவர்கள் வெளியே வெளியே வரும் போது அக்தரிஸ்தா தலையில் அடிபட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் இரண்டாவதாக எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.