ஜோ பைடன் பதவியேற்பு விழாவிற்கு மன்மோகன் சிங்கிற்கு அழைப்பா ?
பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனின் பதவியேற்பு விழாவில் இந்தியாவில் இருந்து மன்மோகன் சிங் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாக ஓர் தகவல் சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்காமல் மன்மோகன் சிங்கிற்கு அழைப்பு விடுத்துள்ளனர் என அரசியல் கிண்டல், கேலிகளும் செய்யப்பட்டு வருகிறது.
உண்மையாகவே அழைப்பு வந்துள்ளதா அல்லது யூடியூப் சேனல்களில் வீடியோக்களில் இப்படியொரு தலைப்பை வைத்து க்ளிக் பைட்காக செய்திருக்கிறார்களா என ஆராய்ந்து கூறும் ஃபாலோயர் தரப்பில் கேட்கப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
ஜோ பைடனின் பதவியேற்பு விழாவிற்கு மன்மோகன் சிங்கிற்கு அழைப்பு வந்ததா என கீவார்த்தைகளைக் கொண்டு தேடுகையில், ஆதாரமிக்க எந்தவொரு செய்தியோ அல்லது அரசு தரப்பு தகவல்களோ வெளியாகவில்லை. இந்திய தேசிய காங்கிரஸ் தரப்பிலும் கூட எந்தவொரு தகவலும் பகிரப்படவில்லை.
நவம்பர் 9-ம் தேதி வெளியான தி நியூயார்க் டைம்ஸ் செய்தியில், அமெரிக்காவின் அதிபர் மற்றும் துணை அதிபர் பதவியேற்பு விழாவை காங்கிரஸ் குழு திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
2020 ஜனவரி 20-ம் தேதி பதவியேற்பு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளனர். அமெரிக்க அதிகாரிகள் மற்றும் பாரம்பரியமாக மேடையில் எப்பொழுதும் அமர்ந்து இருக்கும் பிற பிரமுகர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவில் கலந்து கொள்ளும் சர்வதேச விருந்தினர்கள் குறித்து எந்தவொரு தகவலும் விழாவை திட்டமிட்டுள்ள குழுவின் அறிக்கையில் வெளியாகவில்லை.
தங்கள் நாட்டின் தலைநகருக்கு பல வெளிநாட்டு அதிபர்களின் பயணங்கள் மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டாலும், அமெரிக்காவின் ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்வுகளுக்கு அயல்நாட்டு தலைவர்கள் அழைக்கப்படுவதில்லை.
புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் துணை ஜனாதிபதியாகவும், செனட்டராகவும் இருந்த போது இந்தியாவுடன் வலிமையான உறவில் இருந்தவர். இருநாட்டு உறவுகளுக்காக ஜோ பைடன் மற்றும் மன்மோகன்சிங் சந்திப்புகள் நிகழ்ந்து இருக்கின்றன. அதை மையமாக வைத்து பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்காமல், மன்மோகன் சிங்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வதந்தியை பரப்பி வருகிறார்கள்.
மேலும் படிக்க : ஜோ பைடன் அரசு பொறுப்பேற்கும் முன் ஸ்ரீருத்ர ஜபம் ஒலிக்கப்பட்டதா ?
இதற்கு முன்பாககூட, ஜோ பைடன் பதவியேற்பு நிகழ்வில் ஸ்ரீ ருத்ர ஜபம் மந்திரங்கள் ஒலிக்கப்பட்டதாகவும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜார்ஜ் ஃபிளாய்ட் மகளிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டதாக வதந்திகள் பரப்பப்பட்டன.
மேலும் படிக்க : ஜோ பைடன் ஜார்ஜ் ஃபிளாய்ட் மகளிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டாரா ?