ஜோ பைடன் அரசு பொறுப்பேற்கும் முன் ஸ்ரீருத்ர ஜபம் ஒலிக்கப்பட்டதா ?
பரவிய செய்தி
அமெரிக்க வெள்ளை மாளிகையில் புதிய அரசு பொறுப்பேதற்க்கு முன்பு (செனட் மீட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்பாக) சிவபெருமானின் ஸ்ரீ ருத்ர ஜபம் ஒலிக்கப்பட்டு பின்பு ஆரம்பிக்கப்பட்டது.
மதிப்பீடு
விளக்கம்
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் புதிய அரசு பொறுப்பேற்பதற்கு முன்பாக ஸ்ரீருத்ர ஜபம் இந்து மத வேதங்கள் ஒலிக்கப்பட்டதாக 3 நிமிட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர் தரப்பில் கேட்கப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
அமெரிக்காவில் பொறுப்பேற்க உள்ள புதிய அரசு ஜனவரி 25-ம் தேதி அதற்கான நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு உள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.
வைரலாகும் வீடியோ குறித்து கீவார்த்தைகளை கொண்டு தேடுகையில், 2014-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி HAC HinduAmericanSevaCommunities எனும் யூடியூப் சேனலில் வெள்ளை மாளிகையில் வேதங்கள் ஓதப்பட்டதாக 4.19 நிமிட வீடியோ வெளியாகி இருக்கிறது. வைரலாகும் வீடியோவில் காட்சிகளை வேறு கோணத்தில் இருந்து எடுத்து இருப்பதை தெளிவாய் காணலாம்.
தற்போது வைரலாகும் வீடியோவை 2014 அக்டோபர் 14-ம் தேதி Giridhar Talla என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதில், ” 2014 அக்டோபர் 2-ம் தேதி வெள்ளை மாளிகையில் மகாத்மா காந்தியின் 145வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. இது இந்து அமெரிக்கன் சேவா சமூகங்களின் நான்காவது ஆண்டு மாநாடு ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இது அமெரிக்க வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி அல்ல என பொறுப்பு துறப்பில் கூறியுள்ளார்.
2014-ல் மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு அமெரிக்க வெள்ளை மாளிகையில் ” HinduAmericanSevaCommunities ” எனும் அமைப்பால் நடத்தப்பட்ட 4 ஆண்டு மாநாட்டில் ஸ்ரீ ருத்ர மந்திரம் ஒலிக்கப்பட்டு உள்ளது.
முடிவு :
நம் தேடலில், 2014-ம் ஆண்டில் அமெரிக்க வெள்ளை மாளிகையில் இந்து அமெரிக்கன் சேவா சமூகங்கள் அமைப்பால் நடத்தப்பட்ட மாநாட்டு நிகழ்ச்சியை ஸ்ரீ ருத்ர ஜபம் ஒலிக்கச் செய்து ஆரம்பித்து உள்ளனர். அந்த வீடியோவை ஜோ பைடன் அரசு பொறுப்பேற்கும் முன்பாக நிகழ்ந்ததாக தவறாகப் பரப்பி வருகிறார்கள்.