ஊடகவியலாளர் செந்தில் வேல் பெயரில் பரவும் போலிச் செய்தி, போலி ட்வீட் !
பரவிய செய்தி
தொடர் நீட் தேர்வு மரணங்கள் வேதனையளிக்கிறது. திமுக பொய் வாக்குறுதிகளை தேர்தலில் அளித்து மாணவர்களை கொலை செய்துகொண்டு இருக்கிறதா என்ற அச்சம் எழுகிறது ? – ஊடகவியலாளர் செந்தில்வேல் ஆதங்கம்
மதிப்பீடு
விளக்கம்
நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகம் நிகழ்ந்து வருவது வேதனை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. நீட் விவகாரத்தை வைத்து பெரிய அளவில் அரசியல் செய்யப்பட்டு வருவதையும் பார்க்க முடிகிறது.
இந்நிலையில், ஊடகவியலாளர் செந்தில்வேல், தொடர் நீட் தேர்வு மரணங்கள் வேதனையளிக்கிறது. திமுக பொய் வாக்குறுதிகளை தேர்தலில் அளித்து மாணவர்களை கொலை செய்துகொண்டு இருக்கிறதா என்ற அச்சம் எழுகிறது ” என விமர்சித்து பேசியதாக புதியதலைமுறையின் நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு குறித்து தேடுகையில், செப்டம்பர் 15-ம் தேதி @Senthilval79 எனும் ட்விட்டர் பக்கத்தில், இந்த விடயத்தில் நான் ஒருபோதும் பின்வாங்க போவதில்லை. @mkstalin வாக்குறுதிகள் என்னாச்சு? முடியாது விட்டால் பதவி விலகுங்கள். நாங்கள் சீமானுடன் இனையும் சந்தர்ப்பத்தை நீங்களாகவே உருவாக்காதீர் இனைந்தால்!!!! மாபெரும் போராட்டம் வெடிக்கும் தமிழ் மண்ணில் ” எனும் நிலைத்தகவல் உடன் புதியதலைமுறையின் நியூஸ் கார்டு பதிவாகி இருக்கிறது.
ஆனால், @Senthilval79 எனும் பெயரில் இயங்கும் ட்விட்டர் பக்கம் போலியானது. @senthilvel79 எனும் ட்விட்டர் பக்கமே உண்மையானது. போலியான ட்விட்டர் பக்கத்தை வைத்துக் கொண்டு போலியான செய்திகளை பரப்பி வருகிறார்கள். இதற்கு முன்பாகவும், இதே போலியான ட்விட்டர் பக்கத்தில் வெளியான தவறான பதிவுகளை வைரல் செய்தது பற்றி கட்டுரை வெளியிட்டு இருக்கிறோம்.
மேலும் படிக்க : ஊடகவியலாளர் செந்தில் வேல் பெயரில் வெளியான போலி ட்வீடை பகிர்ந்த மாரிதாஸ் ரசிக பக்கம் !
அடுத்ததாக, வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு குறித்து புதிய தலைமுறையின் இணையதளப் பிரிவை தொடர்புக் கொண்டு பேசுகையில், ” இதை நாங்கள் வெளியிடவில்லை. இது போலியானது “ என பதில் அளித்து இருந்தனர்.
முடிவு :
நம் தேடலில், தொடர் நீட் தேர்வு மரணங்கள் வேதனையளிக்கிறது. திமுக பொய் வாக்குறுதிகளை தேர்தலில் அளித்து மாணவர்களை கொலை செய்துகொண்டு இருக்கிறதா என்ற அச்சம் எழுகிறது என ஊடகவியலாளர் செந்தில்வேல் கூறியதாக பரவும் புதிய தலைமுறை நியூஸ் கார்டு போலியானது, அதை வெளியிட்ட ட்விட்டர் பக்கமும் போலியானது என அறிய முடிகிறது.