இந்தியை எதிர்க்கும் தென்னிந்தியர்களை வெளியேற்றுவோம் என ஜேபி நட்டா கூறினாரா ?
பரவிய செய்தி
குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து ஜேபி நட்டா அறிக்கை. இந்தியை தேசிய மொழியாக ஏற்றுக் கொள்பவர்கள் மட்டுமே இந்தியர்கள் என்று அடுத்த திருத்தம் கொண்டு வருவோம். இந்தியை எதிர்க்கும் தென்னிந்தியர்களை வெளியேற்றுவோம்.
மதிப்பீடு
விளக்கம்
இந்தியாவில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்த ஆதரவும், எதிர்ப்பும் எழுந்து வரும் நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான ஜேபி.நட்டா வெளியிட்ட அறிக்கையில், இந்தி தெரியாத தென்னிந்தியர்களை வெளியேற்றும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வருவோம் என கூறியதாகவும், அதை தந்தி டிவியின் ட்விட்டரில் பக்கத்தில் வெளியானதாக ஸ்க்ரீன்ஷார்ட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு யூடர்ன் ஃபாலோயர் தரப்பிலும் கேட்கப்பட்டது.
உண்மை என்ன ?
பாஜகவின் தலைவராக உள்ள ஜேபி.நட்டா வெளிப்படையாக இப்படியொரு அறிக்கையை வெளியிட்டு இருக்க வாய்ப்பில்லை என்பதை யூகத்திலேயே எளிதாக அறிந்து கொள்ளலாம். ஏனெனில், அவர்களின் கட்சிதான் கர்நாடகாவில் ஆட்சி இருக்கிறது.
ஜேபி.நட்டா தென்னிந்தியர்களை மேற்கொள்காட்டி குடியுரிமை குறித்து அறிக்கை வெளியிட்டாரா எனத் தேடினோம். ஆனால், ஊடகச் செய்திகளில் அப்படியொரு தகவலே இல்லை.
அடுத்ததாக, தமிழில் பரப்பப்படும் தந்தி டிவியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சென்று தேடுகையில், அந்த ட்வீட் பதிவு இடம்பெறவில்லை. மாறாக, தங்கள் செய்தி நிறுவனத்தின் பெயரில் பரவும் ட்வீட் போலியானது என டிசம்பர் 10-ம் தேதி தந்தி டிவி முகநூல் மற்றும் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளனர்.
— Thanthi TV (@ThanthiTV) December 10, 2019
சமீபகாலங்களாக, ஊடகங்களின் பெயரில் போலியான நியூஸ் கார்டு மற்றும் ட்வீட் பதிவுகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன என்பதை மக்கள் தெளிவாய் அறிந்து கொள்ள வேண்டும்.